For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடித்தவசு: ஊசி முனையில் ஒற்றைக் காலில் தவம் இருக்கும் கோமதி அம்மன்- குவியும் பக்தர்கள்

ஊசி முனையில் ஒற்றைக்காலில் தவம் இருக்கும் கோமதி அம்மனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: "அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவர் வாயில் மண்ணு" என்ற மாபெரும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காகவே அன்னை பார்வதி இப்பூவுலகிற்கு வந்து ஒற்றைக்காலில் ஊசி முனையில் தவம் இருந்தார். இதை இன்றைக்கும் மக்கள் சங்கரன் கோவிலில் ஆடித்தவசு திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.

உமை ஒரு பாகனாய் காட்சி தரும் சிவன், சங்கரன் கோவிலில் புன்னை வனத்தில் பசுக்கூட்டங்களின் நடுவே அன்னை கோமதி அம்மன் ஊசி முனையில் தவம் இருந்ததை மெச்சி, நாராயணரை தனது இடது பாகத்தில் ஏற்று சங்கரநாராயணராக காட்சியளித்தனர். இந்த நிகழ்வு ஒரு ஆடி மாதத்தில் நிகழ்ந்தது. இன்றைக்கும் ஆடி மாதத்தில் சங்கரன்கோவிலில் தவசு திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Aadi Thavasu festival at Sankarankovil

ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!

ஆடித்தவசு புராண கதை

சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார் பெரியவர்? என்று சங்கன், பத்மன் என்ற நாக அரசர்கள். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும் சர்ச்சைதான். தான் அவர்களின் சர்ச்சைக்கு மூலகாரணம். சங்கனோ சைவன், பத்மனோ வைணவன். இருவருமோ தங்களின் கருத்தை நிலை நிறுத்த வேண்டி அன்னை பார்வதியை சரணடைந்தனர். இருவருமே ஒருவர்தான் என்பதை நிரூபிக்க அந்த சிவனிடமே வரம் கேட்டாள்.

Aadi Thavasu festival at Sankarankovil

சிவபெருமானும் மனமுவந்து, 'அகத்திய முனிவர் தவமியற்றிய பொதிகை மலைப்பகுதியில் புன்னை விருட்சமாகப் பலர் தவம் இயற்றுவர். அங்கு நீயும் தவம் செய்தால், நீர் விரும்பிய திருவுருவில் காட்சி தருவேன்" என்றார். சிவனை வணங்கிய பார்வதியும் புன்னைவனத்துக்குப் புறப்பட்டார். தேவியாரைப் பிரிய மனமின்றி, 'உடன் வருவோம்" என வேண்டிய தேவர்களை, 'நீங்கள் புன்னைவனத்தில் விருட்சமாகத் தோன்றி, தேன் மிகுந்த மலராகவும் கனியாகவும் மகிழ்விப்பீராக" எனக் கூறி உடன் அழைத்தார்.

Aadi Thavasu festival at Sankarankovil

'தெய்வப் பெண்களை பசு (ஆ) வடிவெடுத்து பால் கொடுத்து மகிழ்ச்சி தாருங்கள்" என்றார் பார்வதி. 'ஆ" வடிவெடுத்து தெய்வப் பெண்கள் உமாதேவியுடன் வந்ததால், அன்னை 'ஆவுடையாள்" என்றும் அழைக்கப்படுகிறாள். சகல வரம் தரும் சங்கர நாரயணர் புன்னைவனமாகிய சங்கரன்கோவிலில் சிவனை நோக்கி உமாதேவியார் முனிவர்கள், தேவர்கள், தெய்வப் பெண்களுடன் ஒற்றைக்காலில் தவமிருந்தார்.

Aadi Thavasu festival at Sankarankovil

தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பௌர்ணமியில் புன்னை வனத்தில் 'சங்கரநாராயணராக', உமாதேவியார் உள்ளிட்ட சகலருக்கும் காட்சிகொடுத்தார். ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம்!, ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர-மாணிக்க மகுடம்!, ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு! ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம்!, ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசி மாலை! , ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான்; மறு புறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்க அரிஹரனாய் காட்சி தந்தார் இறைவன்.

Aadi Thavasu festival at Sankarankovil

அரிஹரனாய் காட்சி தந்த இறைவனை கண்டு உருகி நின்ற உமாதேவியாரிடம், 'வேண்டிய வரங்களைக் கேள்'... என்றார் சிவபெருமான். 'இத்திருக்கோலத்தை மறைத்து உம்முடைய திரு-உருவைக் கொள்ள-வேண்டும்' என அம்பாள் வேண்ட, ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியருடன் எழுந்தருளி, அங்கேயே தேவியருடன் தங்கினார்.

இன்று ஆடித்தவசு

இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு விழா சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில், கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது. விழாவின் 9ம் திருநாளான்று காலை தேரோட்டம் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு இன்று நிகழ்கிறது. காலை தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். மாலையில் சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் தெற்கு வீதியில் தபசுக்காக சிவபெருமான் எழுந்தருளும் நிகழ்வும் நடக்கிறது. அப்போது தன் வலது காலை உயர்த்தி, இடக் காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்த கோலத்தில் அம்பாள் தவக்கோலத்தில் காட்சி அருள்கிறாள். இந்தக் காட்சியை பல்லாயிரம் பக்தர்கள் கண்டு வணங்குகிறார்கள்.

English summary
Thousands of devotees from various parts of the State had a dharshan of Swamy Sankaranarayanar on the occasion of ‘Aadi Thavasu’ held at Sankarankovil in the district on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X