ஆடி வெள்ளியில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வம் பெருகும்
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும்.
சென்னை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிசேகம் செய்தும் வழிபாடு நடத்தினர். அதிகாலையில் இருந்தே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆடிமாதம் என்பது அம்மன் கோவில்களுக்கு மிக உகந்தமாதம் ஆகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தீமிதி திருவிழா, தேர்திருவிழா, என அனைத்து திருவிழாக்களும் நடைபெறும், குறிப்பாக இந்த மாதத்தில் உள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.
சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.
அம்மனை வழிபடும் பக்தர்கள்
ஆடி மாதத்தின் அடிப்படை தத்துவமே ‘உன்னை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன்' என்பதுதான். எனவே, இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின் ஆலயங்களில் திருவிழாக்கோலம்தான். ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
புற்றுக்கு பால் வார்த்து வழிபாடு
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்றும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம். முதல் வெள்ளியன்று இனிப்புத் தேங்காய் கொழுக்கட்டை, உப்பு, காரப் பருப்புக் கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.
அம்மன் கோவில்களில் வழிபாடு
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள முண்டகக்கன்னியம்மன், கோலவிழி பத்ரகாளியம்மன் ஆலயங்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். கோலவிழியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
குவியும் பக்தர்கள்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமைந்துள்ள இருக்கண்குடி மாரியம்மன் ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். குழந்தையில்லாதவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமான பக்தர்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசிக்க குவிந்துள்ளனர்.
திருச்சியில் சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, உறையூர் வெக்காளியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோயிலில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மாவிளக்கு ஏற்றிய பக்தர்கள்
ஆடி கூழ் செய்து அம்மனுக்குப் படைத்து பக்கதர்களுக்கு பிரசாதமாக அளித்தனர். பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிசேகம் செய்தும் வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு மா விளக்கேற்றியும் வழிபாடு நடத்தினர். திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எலுமிச்சை மாலை சாற்றியும், எலுமிச்சை விளக்கேற்றியும் அம்மனை வழிபட்டனர். ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.