சகல சவுபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி - பாலபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்
இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் பக்தர்கள் பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். சென்னையில் உள்ள பிரபல ஆலயங்களில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
சென்னை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் சென்னையில் உள்ள பிரபல அம்மன் கோவில்களாக முண்டகக்கன்னி அம்மன் கோவிலிலும், கோல விழி அம்மன் கோவிலிலும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிசேகம் செய்தும் வழிபாடு நடத்தினர். ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் சுமங்கலி பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கணவரின் ஆயுள் கூடும், மணமாகாத பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். மணமாகி குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
ஆடிமாதம் என்பது அம்மன் கோவில்களுக்கு மிக உகந்தமாதம் ஆகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தீமிதி திருவிழா, தேர்திருவிழா, என அனைத்து திருவிழாக்களும் நடைபெறும், குறிப்பாக இந்த மாதத்தில் உள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திர் ஆரோக்ய பீடத்தில் இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகமும், ப்ரத்யங்கிரா தேவிக்கு மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது.
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு கொண்டவை. ஐந்து வெள்ளிக்கிழமைகளிலும் மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
மாங்கல்ய பாக்யம் கிடைக்கும்
அம்மன் ஆலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், அலங்காரமும் எப்போதும் நடைபெறுவது வழக்கம். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு கொண்டவை. அந்த வகையில் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சரப சூலினி ப்ரத்யங்கிரா யாகத்தில் கலந்து கொண்டு சுக்கிர பலம் பொருந்திய வெள்ளிக்கிழமைகளில் அனைத்து அம்மன்களையும், மகாலட்சுமியையும் வணங்கி மாங்கல்ய பலம், செல்வ செழிப்பு, குடும்ப நன்மை காளி தேவியை வணங்கி அருள் பெறலாம்.
எலுமிச்சை விளக்கு
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எலுமிச்சை மாலை சாற்றியும், எலுமிச்சை விளக்கேற்றியும் அம்மனை வழிபட்டனர்.
குவியும் பக்தர்கள்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமைந்துள்ள இருக்கண்குடி மாரியம்மன் ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். குழந்தையில்லாதவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமான பக்தர்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசிக்க குவிந்துள்ளனர்.
பொங்கல் வைத்து வழிபாடு
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள முண்டகக்கன்னியம்மன், கோலவிழி பத்ரகாளியம்மன் ஆலயங்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அங்குள்ள புற்றுக்கும் சிலைகளுக்கும் பால் ஊற்றியும் வழிபட்டனர்.
இதன்மூலம் நாக தோஷங்கள் நீங்கி குலம் தழைக்கும் என்பது ஐதீகம். பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமானோர் பாலபிஷேகம் செய்தும், விளக்குகள் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர்.
மாரியம்மனுக்கு வழிபாடு
தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில், திருச்சியில் சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, உறையூர் வெக்காளியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோயிலில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் கவலைகள் நீங்கும், செல்வ வளம் பெருகும். எனவே ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபடுவோம்.
வளம் பெருவோம்.