ஆடி வெள்ளி அம்மன் தரிசனம்: மயிலை காவல் தெய்வம் கோலவிழியம்மன்
சென்னை: மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கோலவிழி அம்மன் கோவில் உள்ளது. தன்னுடைய அருட் பார்வையினால் பக்தர்களை காத்தருளும் இந்த அம்மனை வழிப்பட்டால் தீராத குறைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சென்னையில் காவல் தெய்வமாக போற்றப்படும் கோல விழியம்மன் ஆலயம் இது சோழர் காலத்தைச் சார்ந்தது என்கின்றனர். தச்சனின் யாகத்தை அழித்தவர் வீரபத்திரர் என்பது புராணம். அதை உறுதிப்படுத்தும் வகையில் வீரபத்திரர் ஆலயம், பத்ரகாளி எனும் கோலவிழியம்மன் கோவிலுக்கு மேற்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. விக்கிரமாதித்தன் காலத்துக் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் என சித்தர் வாக்கின் மூலம் தெரிய வருகிறது.
இந்த திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது. இது சோழர் காலத்தைச் சார்ந்ததாகும். சிதில மடைந்திருந்த இந்தக் கோவில் 1981ம் ஆண்டு அடியார்கள் ஆதரவினாலும், மயிலை குருஜி சுந்தரராம சுவாமிகளின் ஆதரவினாலும் திருப்பணி செய்யப்பட்டு வழிபாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நன்கு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அம்மனுக்கு முதல் மரியாதை
அறுபத்து மூவர் திருவிழாவானது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனிப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடத்தப்படுகிறது. சிறப்பு மிக்க இந்த பெருவிழாவிற்குத் தொடக்கமாக முதல் மரியாதை பெறும் தலமாகத் திகழ்வது, மயிலாப்பூரில் உள்ள கோலவிழி அம்மன் என்னும் பத்ரகாளி திருக் கோவிலாகும்.
காவல் தெய்வம்
இந்த முதல் மரியாதைக்குக் காரணம், இது கபாலீஸ்வரர் திருக்கோவிலின் துணைக் கோவில் என்பது மட்டுமல்ல; மயிலாப்பூர் நகரின் எல்லைகளைக் காத்தருளும் காவல் தெய்வமாக இத்தல அம்மன் விளங்குகின்றாள் என்பதே முதன்மையான காரணம்.
வடக்கு நோக்கிய அம்மன்
வடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சன்னிதி, அரசடி விநாயகர், சப்தமாதர்கள், கருவறை முன்புறம் விநாயகர், பாலமுருகன் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். அம்மனுக்கு எதிரே பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை காட்சி தருகின்றன.
கருணை அருளும் நாயகி
அம்மனின் இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். ‘பத்ர' என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். ஸ்ரீபத்ரகாளி உக்கிர தெய்வம். ஸ்ரீபத்ரகாளி அம்மனுக்கு, தைலக்காப்பு மட்டுமே சார்த்தப்படுகிறது.
கோல விழியம்மன்
பத்ரகாளியை குளிர்விக்க, கோலவிழி அம்மனின் விக்கிரகத்தை வைத்து வழிபடுவதாகச் சொல்கின்றனர். அபிஷேகம் முழுவதும் கோலவிழி அம்மனுக்கே!
அன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். அன்னையின் கண்களைக் காண கண் கோடி வேண்டும்.
பிரம்மாண்ட அம்மன்
வடக்கு நோக்கிய கருவறைக்குள் முன்புறம் சிறிய வடிவிலான அம்மனும், பின்புறம் பிரமாண்ட கோலத்தில் சுதைச் சிற்பமாக அமர்ந்த கோலத்திலும் கோலவிழி அம்மன் காட்சி தருகின்றனர். மர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, கோலவிழி அம்மனாக விளங்குகிறாள்.
அன்னையின் உருவம்
இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது எண் கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது எண் கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலதுபுறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள்.
குறை தீர்க்கும் அம்மன்
திருமணப் பேறு, குழந்தைப் பேறு, குடும்பச் சிக்கல்கள், பிணி தீர்த்தல், மன அமைதி மற்றும் ராகு தோஷம் போன்றவற்றை தீர்த்து வைக்கும் கண்கண்ட தெய்வ மாகக் கோலவிழி அம்மன் விளங்குகின்றாள். ராகுதோஷம் உள்ளவர்கள் கோலவிழி அம்மனையும், இங்குள்ள வராகியையும் வழிபட்டு சிறப்பான பலன் பெறலாம்.
நோய் தீர்க்கும் ஆமை சிற்பம்
அதேபோல, தீராத நோயுற்றவர்கள் கருவறையின் வெளியே உள்ள ஆமை புடைப்புச் சிற்பத்திற்கு ராகு காலத்தில் இளநீர் அபிஷேகம் செய்து, அர்ச்சனை, ஆராதனை செய்தால் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து நோய் குணமாகும் என்பது ஐதீகம்.
தீவினை போக்கும் ஆலயம்
பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாலயத்தில் மனம் உருக வேண்டி ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வலமாக 27 சுற்றும் இடமாக இரண்டு சுற்றும் சுற்றி வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
ராகு தோஷம் நீங்கும்
ராகு தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் தோஷம் நீங்கும் என்றும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் அம்மனைத் தரிசித்து, அபிஷேகம் செய்தால், நற்பலன்கள் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்.
பூட்டு பிராத்தனை
பூட்டுப் பிரார்த்தனை விசேஷம். அதாவது, பக்தர்கள் தங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்னை நேர்ந்தாலும், அம்மனின் காலடியில் பூட்டு வைத்து பூஜித்துவிட்டு, பிறகு இந்த வேலியில் பூட்டிவிட்டு, சாவியை அம்மனின் திருவடியில் வைத்துவிட்டால் பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்
திருவிழாக்கள்
சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும்.
எங்கு உள்ளது?
சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அதேபோல, முண்டகக் கண்ணியம்மன் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்.
தரிசன நேரம்
இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.