ஆடிவெள்ளி... வரலட்சுமி நோன்பு : நோய்கள், தோஷங்கள் நீக்கும் அம்மன் ஆலயங்கள் தரிசனம்
இன்று ஆடி வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு அம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அம்மன் நோய் தீர்ப்பவள். வேண்டும் வரம் தரும் வரப்பிரசாதி. நோய் தீர வேண்டிக்கொண்டாலே போதும் துயர் துடைப்பவள்
மதுரை: ஆடிமாதம் சக்தி நிறைந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் விழாக்கள் களை கட்டும். பூக்குழி இறங்குதல் அக்கினி சட்டி எடுத்தல் அலகு குத்துதல் என ஆலயங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். மாரியம்மனோ காளியம்மனோ முண்டகக்கண்ணியம்மனோ, கோலவிழியம்மனோ எந்த அம்மனாக இருந்தாலும் நம்பிக்கையோடு சென்ற கையெடுத்து கும்பிட்டவர்களை கைவிடமாட்டார்கள். நோய்கள், கஷ்டங்கள், துயரங்களை தீர்த்து வைக்கும் அம்மனுக்காகவே ஆடி மாதத்தில் திருவிழா எடுக்கின்றனர். எந்த கோவிலுக்கு சென்று அம்மனை வணங்கினால் என்ன நோய்கள் தீரும் என்று என்று பட்டியலே உள்ளது. உங்கள் நோய் தீர ஆடி மாதத்தில் இந்த அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள் கை மேல் பலன் கிடைக்கும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். இன்று ஆடி நான்காவது வெள்ளிக்கிழமை கூடவே வரலட்சுமி நோன்பும் இருப்பதால் பக்தர்கள் அதிகாலை முதலே அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
சென்னையில் உள்ள பிரபல அம்மன் கோவில்களாக முண்டகக்கண்ணி அம்மன் கோவிலிலும், கோல விழி அம்மன் கோவிலிலும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிசேகம் செய்தும் வழிபாடு நடத்தினர்.
முண்டக்கண்ணியம்மன்
முண்டகக்கண்ணி அம்மன், கோலவிழி அம்மன் ஆலயங்கள் ராகு கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்த ஆலயங்களுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபாடு செய்வதால் சுமங்கலி பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கணவரின் ஆயுள் கூடும், மணமாகாத பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். மணமாகி குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இந்த தலங்கள்
நோய் தீர்க்கும் தீர்த்தம்
முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் கொடுக்கப்படும் மஞ்சளும் வேப்பிலையும் தீர்த்தமும். அம்மை நோய் தீர்க்கும் அருமருந்தாகும்.
மதுரை சோழவந்தானில் உள்ளது ஜெனகை மாரியம்மன் கோவில் தீர்த்தம் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரசாதமாக உள்ளது. இந்த தீர்த்தத்தை அருந்த அம்மை நோய் மறைகிறது.
குழந்தை வரம் கிடைக்கும்
விருதுநகரில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள். இந்த ஆலயத்தில் அம்மனுக்கு முன்பாக இருக்கும் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றிருள்கிறார். கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்த பொருட்களினால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது.
பிள்ளை வரம் வேண்டுவோர் அம்மனிடம் வேண்டிக்கொள்ள வீட்டில் தொட்டில் ஆடும். அம்மனுக்கு கரும்பு தொட்டில் கட்டி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
பில்லி சூனியம் விலகும்
ஊட்டியில் மகாமாரி, மகாகாளி இருவரும் ஒரே கருவறையில் அருள்கின்றனர். இங்குள்ள காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு, தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் விலக்குகின்றனவாம். நீலகிரி குன்னூரில் தந்திமாரியம்மன் கோவில் உள்ளது. தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் இந்த மாரியிடம் மனமுருக வேண்டிக்கொள்ள, உடனே பெருமழை பெய்கிறது.
தீராத நோய் தீரும்
நாமக்கல் - ராசிபுரத்தில் நித்யசுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுவதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர். ஐப்பசி மாதம் புதுக்கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர் சாத பிரசாதத்தை சாப்பிட்டால் அடுத்த வருடமே குழந்தைப் பேறு கிடைக்கும். புதுக்கோட்டை - நார்த்தாமலையில் முத்து மாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீர்கிறது. மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.
பச்சைப்பட்டினி விரதம்
கோவையில் ஆட்சி புரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும் தீராத நோய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள். திருச்சி மணப்பாறையிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சந்நதியின் பின்னே உள்ள வேப்பமரத்தில் கட்டி நேர்ந்து கொள்ள, விரைவில் மணவாழ்வு கிடைக்கும். சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.