ஆடிப்பூரம் : அம்மனுக்கு வளைகாப்பு வீட்டிலேயே கொண்டாடுங்க - நன்மைகள் அதிகரிக்கும்
ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். இந்த நாளில் விரதம் இருந்து வளைகாப்பு நடத்தினால் பிள்ளை வரம் தேடி வரும். சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை த
மதுரை: ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நாள் இந்த நாளில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். கோவில்களில் இந்த ஆண்டு பக்தர்கள் யாருமின்றி வளைகாப்பு நடைபெறப்போகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், நெல்லையப்பர் கோவில், அழகர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் அம்மனுக்கு நடைபெறும் வளைகாப்பு விழாவை பக்தர்கள் காணமுடியாவிட்டாலும் வீட்டிலேயே விரதம் இருந்து அம்மனுக்கு வளைகாப்பு கொண்டாடுங்கள். உங்க தலைமுறைக்கும் சந்ததி தழைக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். குழந்தைக்காக தவம் இருப்பவர்களுக்கு பிள்ளை வரம் தேடி வரும்.
ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூர நாளில்தான் அன்னை பூமாதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார்.
ஆடிப்பூரம் விரதம் இருந்து அம்மனை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் வளைகாப்பிற்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு விதம் விதமாக சமையல் செய்து அம்மனுக்கு வளைகாப்பு வீட்டிலேயே கொண்டாடுங்கள். நன்மைகள் தேடி வரும்.
வளைய
ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்பதால், திருவாடிபூரம் பெண்களுக்கு ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. மங்கையர்களுக்கு அரசியான அந்த அம்மனுக்கு பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அம்மனுக்கு வளைகாப்பு விழா ஏன் நடத்தப்படுகிறது என்பது பற்றி சுவையான கதை ஒன்று உள்ளது.
மாயமான வளையல்கள்
ஆந்திராவில் இருந்து வந்து சென்னையில் வளையல் விற்க வந்த வியாபாரி வளையல்களை விற்று விட்டு மீதி வளையல்களுடன் பெரியபாளையத்திற்கு வந்தார். சோர்வோடு மரத்தடியில் படுத்தவர் உறங்கிவிட்டார். காலையில் கண் விழித்து பார்த்த போது வளையல்களை காணவில்லை. தேடியும் கிடைக்காமல் போகவே கவலையோடு ஆந்திராவிற்கு போய் விட்டார்.
வேப்பமரத்தடியில் அம்மன்
அன்றைய தினம் இரவு கனவில் வந்த அம்மன், உன்னுடைய வளையல்களை நான்தான் அணிந்து கொண்டேன். பெரியபாளையம் வேப்ப மரத்தடியின் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் எனது பெயர் ரேணுகா பவானி என்றும் சொன்ன அம்மன், என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும் என்றும் கூறியதோடு வளையல் வியாபாரிக்கு வளங்களையும் அளித்தார்.
பெரியபாளையம் பவானி அம்மம்
தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார். இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள்.
வளையல் அணிய ஆசை
அம்மனுக்கும் கைநிறைய வளையல் அணியவேண்டும் என்று ஆசை ஏற்பட்டதால்தான் அந்த வளையல் வியாபாரி வைத்திருந்த வளையல்களை எடுத்துக்கொண்டார் அம்பாள். வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள்.
இந்த சம்பவத்திற்கு பிறகே திருவாடிப்பூர தினத்தன்று எல்லா கோவில்களிலும் அம்பாளுக்கு வளையல் சாற்றுகின்றனர்.
வளையல் காணிக்கை
பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். அம்மனுக்கு படைத்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில் அணிந்துக்கொண்டால், சுகப்பிரசவம் நிகழும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு கோவிலுக்கு போக முடியாது என்பதால் வீட்டிலேயே வளையல் வாங்கி அம்மன் படத்தின் முன்பு வைத்து வணங்கி அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும்.
தம்பதியர் ஒற்றுமை ஏற்படும்
பூரம் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். சுக்கிரனின் தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். எனவேதான் ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை நேசித்து அவரையே மணந்தாள். சுக்கிரன் அருள் இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும், தாம்பத்ய ஒற்றுமைக்கும் காரணம் சுக்கிரனே. எனவேதான் பூரம் நட்சத்திரத்தில் விரதம் இருந்தால் திருமண வரம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர். ஆடிப்பூர விரதம் இருந்தால் பிரிந்தவர்கள் கூடுவார்கள். பகைவர்களும் நண்பர்கள் ஆவார்கள்.