ஆடிப்பூரம் விழா சிவா, விஷ்ணு ஆலயங்களில் கொடியேற்றம் கோலாகலம் - தங்கத்தேரில் உலா வரும் ஆண்டாள்
ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடிப்பூர விழா சிவன், விஷ்ணு ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
சென்னை: ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடிப்பூரத்தில் ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதே போல ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் அம்பிகை அவதரித்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களிலும், மகாவிஷ்ணு ஆலயங்களிலும் ஆடிப்பூரம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
ரயில் முன்பதிவு படிவத்தில் தமிழை காணவில்லை..உடனே நடவடிக்கை எடுத்த தி.மு.க எம்.பி.. குவியும் பாராட்டு
ஆடிப்பூர நாளில்தான் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் துளசி மாடத்தில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் அம்பிகை தேவிக்கு ஆடி மாதத்தில் வரும் பூரம் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்நந்நாளில்தான் அம்பிகை அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
கோதை நாச்சியார்
ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். துளசி தோட்டத்தில் அவதரித்த ஆண்டாளின் இயற்பெயர் கோதை என்பதாகும். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை, வடமாநில மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்து கூறுவர். இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்றுவருவது மிகவும் நன்மை தருவதாகும். எம் பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.
திருமணம் கை கூடும்
அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர் மாலையை தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் ஆண்டாள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம்.
தங்கத்தேரில் ஆண்டாள் ரங்கமன்னார்
ஆடிப்பூர விழாவில் ஐந்தாம் திருநாள் 7ஆம் தேதியும், கருட சேவை 9ஆம் தேதியும் நடைபெறும். முக்கிய நிகழ்வான, திரு ஆடிப்பூர தேரோட்டம் 11ஆம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல், இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரங்கமன்னார் காட்சியளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டாள் அவதாரம்
ஆடிப்பூரத்தில் ஸ்ரீவில்லிப்பூத்தூர் ஆண்டாளையும், அம்பிகையையும் தரிசித்தால் திருமண பாக்கியம் கிடைக்கும். வளையல் வாங்கி அணிவித்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். அதேபோல் இந்த நாளில்தான் அம்மன் கோவில்களில் வளைகாப்பு விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சி கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு பக்தர்கள் இல்லாமல் கொண்டாடப்படவிருக்கிறது.
அம்மன் கோவில்கள்
உலகத்தை படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு நடத்துவார்கள். ஆனால் அன்னைக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பாகும். எனவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
அம்மனுக்கு அலங்காரம்
அம்மன் கோவில்கள் அனைத்திலும், ஆடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறும். திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சி அம்மன், திருக் கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, திருமயிலை கற்பகவல்லி ஆகிய தலங்களில் உள்ள அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பக வல்லிக்கு வளைகாப்பு உற்சவம் நடத்தப்படும். மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு, ஆடிப்பூரம் அன்றைய தினம் கூழ் வார்க்கும் விழா நடைபெறும்.
கொடியேற்றம்
திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தையொட்டி 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா திங்கட்கிழமையன்று காலை கருடாழ்வார் எதிர்சேவையுடன் கோவில் கல்யாண மண்டபத்தில் சவுமிய நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாளுடன் அருள்பாலித்தார். தொடர்ந்து கொடிமரத்தில் சிறப்பு தீபாராதனையுடன் கொடியேற்றப்பட்டு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
உள் பிரகாரத்தில் வலம் வரும் ஆண்டாள்
கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் இன்றி இந்த கொடியேற்ற விழா எளிமையான முறையில் நடைபெற்றது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு கோவில் உள்பிரகாரங்களில் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொரோனா விதிமுறைகளின்படி 10ஆம் நாள் நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.