ஐப்பசி அன்னாபிஷேகம் கோலாகலம் - தஞ்சை பெருவுடையாருக்கு 750 கிலோ சாதத்தால் அபிஷேகம்
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சிவபெருமானை தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
சென்னை: உயிர்களை படைக்க கூடிய சிவ பெருமான் அனைத்து உயிர்களுக்கும் அன்னமிடக் கூடிய நாளாக ஐப்பசி மாத பவுர்ணமி போற்றப்படுகிறது. பவுர்ணமி தினமான நேற்று அனைத்து சிவ ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தஞ்சை பெருவுடையாருக்கு 750 கிலோ சாதம் சமைத்து பிரம்மாண்டமாக நடைபெற்ற அபிஷேகத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
சிவன் கோவில்களில் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் விசேஷ பூஜை நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் நடக்கக்கூடிய அன்னாபிஷேகமானது தனித்துவம் வாய்ந்ததாகும். உயிர்களை படைக்க கூடிய சிவ பெருமான் அனைத்து உயிர்களுக்கும் அன்னமிடக் கூடிய நாளாக ஐப்பசி மாத பவுர்ணமி போற்றப்படுகிறது.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
ஒவ்வொரு அன்ன பருக்கையிலும் சிவரூபம் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்க கூடாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீக தன்மையை எடுத்து காட்டவும் ஒவ்வொரு ஆண்டும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை அனைத்து சிவன் கோவில்களிலும் நடைபெற்றது.
பிரகதீஷ்வரர் ஆலயம்
பிரசித்தி பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் உலகிலேயே மிகப் பெரியதாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பெருவுடையார், 13 அடி உயரம், 23.5 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
அரிசி சாதம்,காய்கறிகள்
சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் செய்வதற்காக 750 கிலோ பச்சரிசி, 600 கிலோ காய்கனிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது.
காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
பக்தர்களுக்கு பிரசாதம்
அன்னாபிஷேகம் முடிந்து மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அன்னத்தால் அலங்காரம்
கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர், மற்றும் அங்குள்ள நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனை வழிபட்டு சென்றனர். கோடீஸ்வரர் கோவில் மற்றும் படிகட்டுதுறையில் அமைந்துள்ள வஞ்சுலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மகா அபிஷேகம்
லாலாபேட்டையில் உள்ள புகழ்பெற்ற செம்போர் ஜோதி ஈஸ்வரர் கோவிலில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள் படையலிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாலீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. சின்னசேங்கல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் மணவாசி மத்திய புரீஸ்வரர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. குளித்தலையில் பிரசித்திபெற்ற கோவிலான கடம்பவனேசுவரர் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது.
கண் குளிர தரிசனம்
திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரன் உடனுறை மாதேஸ்வரி ஆலயத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 50 கிலோ எடையுள்ள அரிசின் மூலம் சாதம் தயாரிக்கப்பட்டு மாதேஸ்வரருக்கு சாத்தப்பட்டது. பின்னர் காய்கறி மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுவாமி மீது சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.