ஆனி அமாவாசை சூலினி துர்கா ஹோமம்: சதுரகிரி, மேல்மலையனூரில் பக்தர்கள் வழிபாடு
வேலூர்: ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலிலும், மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்திலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நேற்று காலை 11.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது. இயற்கைச் சீற்றங்கள் குறையவும், மழை வேண்டியும், சகல வளங்களையும் பெறவும், தொழில், உத்யோக அபிவிருத்தி, வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நன்மைகளுக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
ஆனி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும் என்பதால் ஏராளமானோர் புனித நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
திருஷ்டி தோஷத்தினால் ஏற்படும் வியாதி, பணப் பிரச்னை, வேலை இல்லாமல் இருப்பது, கணவன் மனைவிக்குள் பிரச்னை, சொத்துப் பிரச்னை, நேர்மையாகக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பது, குடும்பத்துக்குள் தகராறு போன்ற பல பிரச்னைகள் நிவர்த்தியாக மேலும் பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாகவும், மாத்ரு பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், சூலினி துர்கா ஹோமமும் நடைபெற்றது.
இந்த யாகங்களில் மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், கடுகு, வெண் கடுகு, நாயுருவி, சிகப்பு அரளி, 108 மூலிகைகள், கல் உப்பு, எலுமிச்சை சாதம், புளி சாதம், சர்க்கரை பொங்கல், இனிப்பு மற்றும் கார வகைகள், சிகப்பு குங்குமம், மஞ்சள், 108 முறம், 108 வெள்ளை பூசணிக்காய் போன்ற பல்வேறு விசேஷ திரவியங்கள் சேர்க்கப்பட்டது.
சதுரகிரியில் வழிபாடு
பூலோக கயிலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்
நடைபெற்றன. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறி இறைவனை வழிபட்டனர். இந்த கோவிலில் அன்னதானம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக மதுரை திருநகரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார், அதில் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்ய வருபவர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், மாற்றுதிறனாளிகள் என அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றனர். அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மலையேறி வந்த பக்தர்களுக்கு சாமி தரிசனம் முடித்தவுடன் அன்னதானம் வழங்கப்படுவதால் ஏழை பக்தர்கள் திருப்தியுடன் செல்கின்றனர். ஆனால் தற்போது தனியார் உணவகங்கள் அமைக்க கோவில் நிர்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து அன்னதானம் நிறுத்தப்பட்டது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் எனவே அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமிகள் திருக்கோவிலில் அன்னதானம் வழங்க. முகாம்கள் அமைக்க கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். நேற்று ஆனி அமாவாசை தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டது. உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களால் ஆன மாலைகளாலும், எலுமிச்சம் பழம் மாலைகளாலும், வலக்கரங்களில் கத்தி, உடுக்கை, சக்கரம், இடக்கரங்களில் சூலம், கபாலம், சங்கு மற்றும் அபாயகரத்துடன் எட்டு கரங்கள் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு 11.30 மணியளவில் அங்கு உற்சவ அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் அமர்த்தப்பட்டது. அதன் பிறகு பூசாரிகள் அம்மனுக்கு பக்தி பாடல்களை பாடினர். இதை கண்ட பக்தர்கள் பலர் அருள் வந்து ஆடினர். இரவு 12.30 மணியளவில் தாலாட்டு பாடிய உடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது.