ஆருத்ரா தரிசனம்: உத்தரகோசமங்கையில் மரகத நடராஜருக்கு அபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டு நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்குளிர தரிசித்தனர்.
ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான திருஉத்தரகோசமங்கை கோவில். உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற பெருமை உடைய இந்த கோவிலில் மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இங்கு நடராஜருக்கு தனிசன்னதி அமைந்துள்ளது. இந்த நடராஜர் சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது.
மரகத நடராஜர் தரிசனம்
"மத்தளம் முழங்க மரகதம் உடைபடும்" என்பதால் ஒளி-ஒலி அதிர்வுகளில் இருந்து காப்பதற்காக மரகத நடராஜர் சிலை மீது ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு பூசப்பட்டிருக்கும்.வருடத்தில் ஒருநாள் சிவனுக்கு உகந்த நாளான திருவாதிரைக்கு முதல்நாள் இந்த சந்தனக் காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம்.
சந்தனக்காப்பு களையப்பட்டது
அதன்படி, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று 9.15 மணிக்கு சந்தனக் காப்பு களையப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
நடராஜர் அபிஷேகம்
இதைத் தொடர்ந்து மரகத நடராஜருக்கு சந்தனாதி, நெய், பால், தயிர், தேன், மஞ்சள், நெல்லிப்பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 32 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் மிகுந்தது என கருதப்படுவதால் களையப்பட்ட இந்த சந்தனத்தை பக்தர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.
சந்தனம் பூசப்படும் நடராஜர்
இன்று ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜரின் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படுகிறது. தொடர்ந்து நடராஜருக்கு பல்வேறு ஆராதனைகள் நடத்தப்படும். நடராஜரின் தரிசனத்தைக் காண ஏராளமானோர் உத்தரகோசமங்கையில் குவிந்துள்ளனர்.