அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
சென்னை: அபிஜித் என்ற பெயர் இப்போது அனைவராலும் அறியப்பட்டிருக்கிறது. அபிஜித் பானார்ஜி என்ற இந்தியாவம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார மேதைக்கு நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார துறைக்கான நோபல் பரிசை பெறப்போகும் அபிஜித் என்ற பெயரே வித்தியாசமானதாக இருக்கிறது. அபிஜித் பெயரில் ஒரு நட்சத்திரமும், முகூர்த்தகாலமும் உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும். அற்புதமான அந்த அபிஜித் நட்சத்திரம் பற்றியும் அபிஜித் முகூர்த்தகாலம் பற்றியும் அறிந்து கொள்வோம்.
நல்லகாரியங்கள் செய்ய நல்ல நேரம் பார்க்க வேண்டும். ஆனால் சூரியன் உதயகாலம், அஸ்தமனகாலம், உச்சிகாலம் தோஷமற்ற நேரங்கள் இந்த நேரத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யலாம். ஏனெனில் திதி, கிழமை, நட்சத்திர தோஷ காலங்கள் கிடையாது. அபிஜித் என்றால் வெற்றி, அபிஜித் என்றால் அதிர்ஷ்டம் தரவல்லது நட்சத்திரங்களில் 28வது நட்சத்திரமாக அபிஜித் நட்சத்திரத்தை சொல்வார்கள். அதேபோல அபிஜித் முகூர்த்தகாலமான பகல் முடிந்து உச்சிகாலம் ஆரம்பிக்கும் அந்த முகூர்த்த காலமும் நல்லதையும் வெற்றியையும் தேடித்தரும். அதேபோல சூரிய உதயம், அஸ்தமன நேரங்கள் கோதூளி லக்னம் எனப்படுகிறது. கோதூளி என்றால் பசுக்கள் நடந்து செல்லும் புழுதி எங்கும் பரவுவதால் அந்த நேரத்தில் அத்தனை தோஷங்களும் நீங்குகிறது. எனவேதான் இது அதிர்ஷ்டமான நேரம் என்கின்றனர்.
நண்பகல் உச்சி நேரம் பகல் 11.45 முதல் 12.15 மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும். எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம் காலை 5.45 முதல் காலை 6.15 மணிவரை கோதூளி முகூர்த்தம், உச்சி காலம் காலை 11.45 முதல் 12.15 வரை அபிஜித் முகூர்த்தம் சூரிய அஸ்தமான காலம் மாலை 5.45 முதல் 6.15 மணிவரை கோதூளி முகூர்த்தம் அற்புதமான காலகட்டம். இந்த மூன்று முகூர்த்தங்களும் தோஷமற்ற முகூர்த்த காலங்கள் ஆகும். இந்த மூன்று வேளைக்கும் நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய பஞ்சாங்க தோஷம் கிடையாது. நல்ல பஞ்சாங்க நாளும் மேற்கண்ட கோதூளி முகூர்த்தம் அல்லது அபிஜித் முகூர்த்தமம் வந்தால் அதிக பலன் தரும்.
அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்களைப் பற்றி பார்க்கலாம்:
அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் அனைவருக்கும் தெரியும். ஜோதிடத்தின் ஆரம்ப காலத்தில் 28 நட்சத்திரங்கள் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. விம்சோத்திரி தேசா கணிதத்திற்கு பிறகு 27 நட்சத்திரங்களாக சுருக்கப்பட்டு விட்டது. அபிஜித் நட்சத்திரம் மகர ராசியில் அதாவது உச்சிராசியில் உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி நான்கில் ஒருபங்கும் திருஒணம் நட்சத்திரத்தின் முதல் பதினைந்தில் ஒரு பங்கும் அபிஜித் நட்சத்திரம் ஆகும்.
அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் மிக்கவர்கள். அன்பும், கண்டிப்பும் மிக்கவர். தலைமை பண்பும் சேவை மனமும் கொண்டவர்கள். தொழில் கெளரவம் மிக்கவர்கள், செய்யும் தொழில் மீது பற்றுக்கொண்டவர்கள். சுகமும் மகிழ்ச்சியும் மிக்கவர்கள்.
தாய், தந்தை இருவருக்கும் பிடித்த பிள்ளை. தாய், தந்தை இருவரின் குணமும் ஒருங்கே உள்ளவர். தாய், தந்தை இருவருவரின் சாயலும் உள்ளவர். கல்வி விசயத்தில் கவனம் தேவை, தடைபட வாய்ப்பு உண்டு. தொழிற்கல்வி சிறப்பு தரும். தர்ம குணம் உள்ளவர்கள். மருத்துவ துறையில் பணிபுரியும் வாய்ப்பு உண்டு.
தொடர் முயர்ச்சியாளர். அறிவாளிகளை உடன் வைத்து இருப்பவர். திருமணத்திற்கு பிறகு தந்தை அன்பு தடைபடும் வாய்ப்பு உண்டு. ஆய்வு மனபன்மை உள்ளவர். சுய தொழில் நன்மை தரும். உத்திராடம் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தை குறிக்கும். அதிக நட்பு வட்டாரம் இருக்கும். ஆன்மீக பற்றும் தன்னம்பிக்கையும் ஒருங்கே கொண்டவர்கள்.
அபிஜித் முகூர்த்தம் வேண்டுதல் பலன்கள்:
நண்பகல் உச்சி நேரம் பகல் 11.45 முதல் 12.15 மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும். திங்கட்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் நல்ல வேலை கிடைக்கவும்,மேலதிகாரிகளின் தொந்தரவு தீரவும் வேண்டிக்கொள்ளலாம். அதே போல வீடு யோகம் அமையவும் கடன் தீரவும் செவ்வாய்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம். குழந்தை பாக்கியம் பெறவும், இழந்ததை மீட்கவும் புதன்கிழமை வேண்டிக்கொள்ளலாம். வியாழக்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டினால் வெளிநாடு செல்லும் யோகமும் கல்வியில் மேன்மையும் கிடைக்கும்.
திருமணம் நடைபெறவும் விரும்பியவரை திருமணம் செய்யவும் வெள்ளிக்கிழமைகளில் அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம். சனிக்கிழமை வேண்டினால் வம்பு வழக்குகளில் இருந்து வெற்றி கிடைக்கும். ஞாயிறு அபிஜித் முகூர்த்த வழிபாடு வினைகள் அகலவும் உடல் நலம் மேம்படவும் வேண்டிக்கொள்ளலாம்.