சிதம்பரத்தில் ஆடலரசனுக்கு ஆனித்திருமஞ்சனம்
சிதம்பரம் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு ஆனித்திருமஞ்சனம் இன்று நடைபெறுகிறது.
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: சிதம்பரம் என்றதும் நம் நினைவிற்கு வருவது நடராஜப் பெருமான் தான். சிவாலயங்களில் நடராஜப் பெருமான், நடனக் கோலத்தில் காட்சி தருவார். சிதம்பரம் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு ஆனித்திருமஞ்சனம் இன்று நடைபெறுகிறது.
தில்லையில் ஆடலரசனுக்கு ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன விழா நடைபெறும்.விரதமிருந்து அதில் கலந்து கொண்டு நடராஜரைத் தரிசித்தால் நலம் யாவும் வந்து சேரும்.
இந்த ஆண்டின் ஆனி திருமஞ்சன விரத நாள், ஆனி மாதம் 16ஆம் தேதி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
திருமஞ்சனம்
திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. வைஷ்ணவ ஸ்தலங்களில் ஸ்வாமிக்கு மங்கள நீராட்டு செய்வதை "திருமஞ்சனம்" என்றும் சிவ ஸ்தலங்களில் "அபிஷேகம்" என்றும் கூறுவது வழக்கம். ஆனால் விதிவிலக்காக சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருமஞ்சனம் என்றே அழைக்கப்படுகிறது.
அபிஷேக ஆராதனைகள்
திருமஞ்சனத்தன்று இறைவனுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனபொடி, பஞ்சாமிர்தம்(பழங்கள்), தேன் சந்தனம். திருமஞ்சனம் செய்யபடுகிறது. பிறகு ஸ்நபனமாக கும்பதீர்த்தம் சேர்க்கப்படுகிறது. இதனால் பகவான் குளிர்ச்சி அடைகிறார். சான்னித்யம் கிடைக்கிறது
அபிஷேக பிரியன்
ஈசனின் திருநட்சத்திரம் திருவாதிரை. மிக உஷ்ணமான நட்சத்திரம் இது. தவிர, ஆலகாலம் உண்ட நீலகண்டன் அல்லவா அவர். சாம்பல் தரித்தவன். அக்னியை ஏந்திக் கொண்டிருப்பவன். ஆக மொத்தம் உஷ்ணாதிக்கத்துடன் இருப்பவன். எனவே, அவனுக்குக் குளிரக் குளிர அபிஷேகம் செய்யச் சொல்கிறது ஆகம விதி. இதனால்தான் சிவபெருமானை அபிஷேகப் பிரியன் என்று கொண்டாடுகிறோம்.
ஆண்டுக்கு 6 முறை அபிஷேகம்
உஷ்ண நக்ஷத்திரமான திருவாதிரை நக்ஷத்திரத்தின் அதிபதியான ருத்ர மூர்த்தியான சிவனை குளிர்விப்பதற்காக
வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும் வருடத்திற்கு ஆறுமுறைதான் அபிஷேகம் நடைபெறும்.
பூஜை செய்யும் தேவர்கள்
தேவர்களின் பகல்பொழுதான உத்திராயணத்தின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர்.
அழகான வாழ்க்கை
ஆடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை அழகாகவும் அமைதியாகவும் மாறவேண்டுமானால், ஆயக் கலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சிபெற வேண்டுமானால், நாம் வழிபட வேண்டிய தெய்வம் ஆடலரச பெருமானும், சிவகாமி அம்மனும் தான்.
ஜோதிடத்தில் திருமஞ்சனம்
சாதாரணமாக குளியலுக்கு காரகர் நீர் ராசி அதிபதியான சந்திரன் ஆகும். ஆனால் திருமஞ்சனம் என்பது பலவித வாசனை பொருட்கள் மற்றும் குளிர்விக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படுவதால் திருமஞ்சனத்தின் காரகர்.... அதாங்க! நம்ம சுக்கிர பகவானைதாங்க. இந்தவருடம் ஆனித்திருமஞ்சனம் சுக்கிரவாரத்தில் அமைந்திருப்பது சிறப்பாகும்.
நாட்டியக்கலை
இந்த ஆனித்திருமஞ்சன நாயகர் நடராஜரின் சிறப்பே நாட்டியம்தான். அத்தகைய நாட்டியக்கலையை கற்று தேர்ச்சிபெரும் அமைப்பு யாருக்கு?
1. நாட்டியம் மற்றும் கலைகள், ஆடல் பாடல், கூத்து, சினிமா போன்றவற்றின் காரகர் நம்ம ஹீரோ சுக்கிர பகவான்தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.
2. நாட்டியத்திற்க்கு கால் பாதம் தான் அடிப்படையாகும். காலபுருஷனுக்கு 12ம்பாவமான மீன ராசி நாட்டியத்திற்க்கான பாவமாகும். எனவே சுக்கிரன், காலபுருஷனுக்கு 12ம்பாவம மீனம் மற்றும் அதன் அதிபதி குரு, ஜாதகத்தில் 12ம் பாவம் மற்றும் அதன் அதிபதி ஆகியவை காரக கிரகங்களாவர்.
ஜோதிடத்தில் பரதநாட்டியத்திற்கான கிரக நிலைகள்:
1. சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலா ராசியை லக்னமாக கொண்டு சுக்கிரன் ஆட்சி பெறுவது.
2. காலபுருஷனுக்கு பன்னிரெண்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெறுவது.
3. சுக்கிரனும் காலபுருஷனுக்கு பன்னிரெண்டாம் வீட்டதிபதியான குருவும் பரிவர்தனை பெற்று நிற்பது.
4. சுக்கிரனும் பன்னிரெண்டாம் வீட்டதிபதியும் சேர்க்கை பெறுவது.
5. கால்களையும் எலும்புகளையும் குறிக்கும் சனைஸ்வர பகவானின் வீட்டில் சுக்கிரன் நிற்பது மற்றும் சுக்கிரனின் வீட்டில் சனி உச்சமடைவது.
6. உடம்பை முறுக்கி ஆட மூலை ராசிகளில் சர்ப கிரகங்கள் நிற்பது.
வணங்க வேண்டிய ஸ்தலங்கள்
சிதம்பரம் நடராஜபெருமானின் நடனம் நாட்டிய சாஸ்திரத்தின் உச்ச நிலையினை குறிக்கும் அம்சமாகும். சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம், திருவாலங்காடு ஆகிய பஞ்ச சபைகளில் நடராஜ பெருமானை வணங்குவது, நடனம் யோககலை ஆகியவற்றில் உன்னத நிலை அடைய செய்யும்.
சுகமான வாழ்வு கிடைக்கும்
ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும் கிடைப்பதாகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்றும் ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், வளமும் கூடும் என்றும் கருதப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.