அச்சன்கோவில், ஆரியங்காவு ஐயப்பனை தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும் நோய்கள் நீங்கும்
ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சபரிமலைக்கு சென்றுதான் தரிசிக்க வேண்டும் என்று இல்லை, அச்சன்கோவில், ஆரியங்காவு என பல கோவில்களுக்கும் சென்றும் ஐயப்பனை தரிசனம் செய்யலாம்.
சென்னை: தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. சபரிமலை முதன்மையானது. சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாவிட்டால் என்ன அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா ஐயப்பனை இந்த கார்த்திகை, மார்கழி மாதத்தில் தரிசனம் செய்து வரலாம் வாருங்கள்.
கார்த்திகை மாதம் பிறந்தாலே சபரிமலை யாத்திரை செல்ல வேண்டும் என்று பல பக்தர்களும் விரும்புவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பலரும் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. உள்ளூரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று வரலாம் என்று பல பக்தர்களும் முடிவு செய்து விட்டனர்.
சபரிமலை ஐயப்பனை நேரில் சென்று தரிசிக்க முடியாவிட்டாலும் ஐயப்பனின் அறுபடை வீடுகளாக ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எரிமேலி,பந்தளம் ஆகிய ஊர்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஐயப்பனை பற்றி அறிந்து கொள்வோம்.
இந்த 6 கோவில்களில் ஏதோனும் ஒரு கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குளத்துப்புழா
செங்கோட்டையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது குளத்துப்புழா. இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் ‘பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். மனித வாழ்க்கையின் பால பருவத்தைக் குறிக்கும் தலமாக இக்கோயில் விளங்குவதால், பால பருவத்தினர் தங்களது படிப்பு, உடல்ஆரோக்கியம் போன்ற விஷயங்களில சிறந்த பலனைப் பெற இங்கு வந்து வழிபடுவது சிறந்தது என்கிறார்கள். இக்கோயிலில் தை மாதம் முதல் தேதி மகர விளக்கு வைபவமும் மிக விமரிசையாக நடக்கும். இங்கு சுற்றுலா போல அனைத்து தரப்பு மக்களும் சென்று ஐயப்பனை தரிசனம் செய்யலாம். இங்கு கோயிலுக்கு அருகில் கல்லடையாறு ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பக்தர்கள் மீன்களுக்கு பொரி போடுவது ஒரு வித வழிபாடாகவே இருக்கிறது.
திருவனந்தபுரத்திலிருந்தும், தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருந்து எளிதில் சென்று வர முடியும்.
ஆரியங்காவு ஐயப்பன்
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கேரளா மாநிலத்தில் ஆரியங்காவு அமைந்துள்ளது. பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு திருக்கல்யாணம் நடக்கும் ஒரே திருத்தலம் ஆரியங்காவுதான். இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சி தருகிறார் ஐயப்பன். இங்கு திருமண கோலத்தில் காட்சி தரும் ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த ஐயப்பனை தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும்.
அச்சன்கோவில்
அச்சன் கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட தலமாகும். இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் ஐயப்பன். அச்சன் கோவில் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலின் கருவறையில், பூர்ணா - புஷ்கலை என்னும் இரண்டு தேவியர்களுடன் அரசரின் தோற்றத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இதனால் இங்கிருக்கும் ஐயப்பனைக் ‘கல்யாண சாஸ்தா' என்று அழைக்கின்றனர். பக்தர்களின் அனைத்து வகையான அச்சங்களையும் நீக்கி, வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவார் என்னும் நம்பிக்கை இருக்கிறது. அச்சன்கோவில் ஐயப்பனை வழிபடுபவருக்குத் திருமணத்தடை இருப்பின் அவை நீங்கும். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மனமகிழ்ச்சியுடனான வாழ்க்கை அமையும்.
விஷக்கடிகள் குணமாகும்
இங்கிருக்கும் ஐயப்பன் வலது கையில் சந்தனம் மற்றும் புனித நீர் இருக்கிறது. இதனால், ஐயப்பனை பெரும் மருத்துவர் என்றும் அழைக்கப்படுகிறார்.பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சி கடித்தவர்களுக்கு இங்கிருக்கும் ஐயப்பன் சிலையிலிருந்து சந்தனம் எடுத்துத் தரப்படுகிறது. சந்தனத்துடன், அர்ச்சகர் தரும் புனித நீரையும் சேர்த்துப் பூசினால் விஷம் உடனடியாக நீங்கிக் குணம் பெறலாம். அச்சன்கோவில் ஐயப்பன் ஆலயத்தில், ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பந்தளத்தில் திருவாபரணம்
பந்தளத்தில் மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார் மணிகண்டனர். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன. பெட்டியை மலைக்கு கொண்டு போகும்போது பகவான் விஷ்ணு கருடன் வடிவில் பெட்டிக்கு காவலாக வருவதாக ஐதீகம். பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் ஐயப்பன் என்றாலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் சபரி மலைக்கு செல்வதை தவிர்ப்பார்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செல்வர்கள். காரணம், தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதை செலுத்த எழுந்து நிற்க வேண்டியது வரும். அதனால் தவம் கலையும். எனவே ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் போதும் என்று ஐயப்பன் தன் குடும்பத்தை கேட்டுக்கொண்டதாக வரலாறு.
பேட்டை துள்ளும் பக்தர்கள்
எருமேலியில் ஐயப்பன் வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். சபரிமலை தர்மசாஸ்தாவை தரிசனம் செய்யும் முன்பு கன்னி சாமிகள் பேட்டை துள்ளி வேடமிட்டு பக்தர்கள் நடனமாடுவார்கள். சபரிமலைக்குச் செல்ல மரபுவழிப்பாதை எருமேலியிலிருந்துதான் தொடங்கும். இங்கு பேட்டை துள்ளி நீராடி பக்தர்கள் புறப்படவேண்டும். இங்கு சாஸ்தாவிற்கு சிறியதும், பெரியதுமாக இரண்டு கோயில்கள் உண்டு.
சபரிமலை தர்மசாஸ்தா
சபரிமலையில் பிரம்மச்சாரியாக தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். ஆண்டு தோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து தரிசனம் செய்ய மலையேறி வருகின்றனர்.