For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

படுக்கை சுகமளிக்கும் அசூன்ய சயன விரதம்!

By Staff
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை:தேவர்களின் பகல் பொழுது முடிந்துவிட்டது. ஆடி ஒன்றாம் தேதி முதல் தேவர்களின் இரவுப்பொழுதான தக்ஷிணாயன புண்ய காலம் ஆரம்பித்துவிட்டது. அதனை தொடர்ந்து பித்ருகாரகனான சூரிய பகவான் மாத்ருகாரகனான சந்திரனின் வீட்டில் தஞ்சம் அடைந்து கிடக்கிறார்.

சிராவண (ஆடி) மாத கிருஷ்ண பட்ச த்விதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

adhunys vrath for good sleep and bed comfort

இத்தகைய அசூன்ய சயன விரத நாளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து முதலில் விக்நேஸ்வர பூஜை, குரு பூஜை பிறகு விஷ்ணு பூஜை, ஸ்ரீரங்கநாதாஷ்டகம் மற்றும் ஸ்ரீரங்கநாதர் துதிகளை ஓதி, இல்லத்திலும், சயனக் கோல மூர்த்தி ஆலயங்களில் தரிசித்தல் வேண்டும்.

அன்று மாலை பூஜையறையில் ஸ்ரீகிருஷ்ணர் - மகாலட்சுமி விக்ரகம் அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து, காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்து, புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை, தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும்.

பிறகு,

'லக்ஷ்ம்யா வியுஜ்யதே தேவ ந கதாசித்யதோ பவான் ததா களத்ர ஸம்பந்தோ தேவமா மே வியுஜ்யதாம்'

(ஹே க்ருஷ்ண! எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் தாங்கள் சேர்ந்தே இருக்கிறீர்களோஅப்படி நானும் எனது மனைவியுடன் - கணவனுடன் என்றும் இணைபிரியாமல் ஒன்றுசேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும்) என்னும் ஸ்லோகம் சொல்லி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.

மறுநாள் காலை மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணர்- லக்ஷ்மி விக்ரகங்களுக்கு பூஜை செய்து நிவேதனம் செய்து நமஸ்கரித்து, கிருஷ்ணரை படுக்கவைத்த அந்தப் புதிய படுக்கையை தானம் தந்துவிட வேண்டும். இவ்வாறு செய்பவர்களின் வீட்டில், ஸ்ரீகிருஷ்ணர் அருளால் படுக்கை எப்போதும் கணவன்- மனைவியுடன் சேர்ந்ததாகவே இருக்கும். ஒருபோதும் தம்பதிகள் பிரியமாட்டார்கள். அவர்கள் சொத்தும் பணமும் அவர்களை விட்டுவிலகாது என்கிறது பத்ம புராணம்.

தூக்கமின்மைக்கான ஜோதிட காரணங்கள்:

"மெத்தையை வாங்கினேன், தூக்கத்தை தொலைத்தேன்" என

கவிஞர் கண்ணதாசன் எழுதினார். ஆம்! நல்ல தூக்கம் ஒரு வரப்பிரசாதாம். ஆனால் எப்படிப்பட்ட தூக்கம் என்பதை ஒருவர் ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளே தீர்மாணிக்கின்றன.

1. நன்றாக தூங்கினாலும் சரி! தூக்கமின்மையால் அவதியுற்றாலும் சரி! அதனால் பாதிப்படைவது மூளைதான். மேலும் தூக்கமின்மைக்கும் நரம்புகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இந்த மூளைக்கும் நரம்பிற்க்கும் அதிபதியான வித்யாகாரகனான புதபகவான்தான் தூக்கத்திற்க்கு முக்கிய காரக கிரகமாகும்.

ஒருவருக்கு மூளை கோளாறுகள், மன அமைதியின்மை, கோமா நிலை போன்றவற்றையெல்லாம் புதனின் அசுப சேர்க்கைகள் ஏற்படுத்திவிடுகிறது.

2. ஒருவருக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும்.அதிக மகிழ்ச்சி, கோபம், அதிக பயம் இதுபோன்ற உணர்வுகள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. ஆக ஒருவருக்கு நல்ல மனோநிலை அமைய சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும்.

3. இரவின் காரகன் சந்திரன் ஆகும். அந்த சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொருத்தே ஒருவரின் இரவு பொழுதின் தன்மையையும் தூக்கத்தையும் தீர்மாணிக்கமுடியும். இரவில்தான் தூங்கவேண்டும் என்பது இயற்க்கையின் நியதி. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டுவிட்டால் அவருக்கு தூக்கம் என்பது ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.

4. அடுத்ததாக தூக்கத்தை தீர்மானிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்க்கு வரும். நல்ல சுவையான உணவு (சுக்கிரன்), குளுமையான சூழ்நிலை (சுக்கிரன்) இனிமையான இசை (சுக்கிரன்) வசதியான படுக்கைகள் மற்றும் நறுமணம் மிக்க மலர்கள் மற்றும் சுவை நிறைந்த பழங்கள் (சுக்கிரன்) கூடவே அழகான மற்றும் அன்பான மனைவி (சுக்கிரன்) இவையெல்லாம் நினைத்து பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம் சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும்.

5.ஒரு ஜாதகத்தில் புதன் சந்திரன் சுக்கிரன் ஆகிய மூன்றும் கேந்திர பலம், திரிகோண பலம் பெற்று நல்ல நிலையில் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருப்பதோடு இனிமையான தூக்கத்திற்க்கு குறைவிருக்காது. இந்த மூன்று கிரகங்களில் ஒரு கிரகம் பலமிழந்துவிட்டாலும் அந்த ஜாதகரின் தூக்கம் சுகமானதாக அமையாது.

6. கர்ம வினைக்கும் தூக்கத்திற்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறான காரியங்கள் தொடர்ந்து செய்யும் ஒருவரின் கர்மவினையால் தூக்கம் கேள்விக்குறியாகிவிடும். கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்கள் சனி, ராகு, கேது மற்றும் குருவாகும். சனி, ராகு மற்றும் கேது லக்னத்திலோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களிலோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ அல்லது லக்னாதிபதி, சந்திரன் மற்றும் சூரியனோடு நின்று கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்களாகும். குரு மறைமுகமாக கர்ம வினையை தெரிவிப்பவர் ஆவார்.

7 . பாவக ரீதியாக ஒருவர் தூக்க சுகத்தை அனுபவிக்க லக்ன பாவம் பலமாகவும் அசுப கிரகங்கள் தொடர்பில்லாமலும் சுப கிரக சேர்க்கையும் பெற்று இருக்க வேணெடும். ஓருவர ஜாதகத்தில் லக்னம் கெட்டுப்போன நிலையில் எந்தகிரகம் எந்த சுகம் தந்தாலும் அது ஒட்டை பாத்திரத்தில் நிரப்பிய நீர் போன்று ஜாதகருக்கு பலனளிக்காமல் போய்விடும்.

சூரியன் முதல் பாவத்துக்கு அதிபதி மற்றும் ஆத்ம காரகன் ஆகின்றார். மற்றும் செவ்வாய் காலபுருஷ ராசிக்கு லக்னாதிபதி ஆகின்றார். இவற்களின் நிலையும் நிம்மதியான தூக்கத்திற்க்கு முக்கியமானதாகும்.

8. அடுத்தது தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். எனவேதான் இதனை அயன சயன போக மோக்ஷ. ஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் 12ம் பாவம் வலுவாகவே கூடாது. தூக்கத்தை பொருத்தவரை 12ம் பாவாதிபதியின் நிலையை கொண்டும் அதனோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களை கொண்டும் தூக்கத்தின் தன்மையை தீர்மானித்துவிடலாம். 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல. புதனோ சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூக்கிக்கொண்டே இருப்பார்கள்.

காலபுருஷனுக்கு 12ம்பாவ அதிபதியான குரு கெட்டுவிட்டால் அவர்களுக்கு நல்ல தூக்கம் என்பது கனவில் கூட கிடைக்காது.

9. அடுத்தது தூக்கத்தினை தீர்மானிக்கும் பாவங்கள் சுகஸ்தானம் எனப்படும் 4ம் பாவம், பாவாத்பாவத்தில் 4க்கு 4ஆன. ஏழாம் பாவம் எனப்படும்

களத்திர ஸ்தானமும் 7க்கு 4ஆன பத்தாம் பாவம் எனப்படும் கர்ம ஸ்தானமும் ஆகும்.

காலபுருஷனுக்கு கேந்திரவஸ்தானங்களிலோ அல்லது ஜெனன ஜாதக கேந்திர ஸ்தானங்களிலோ சனி அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு ஆயுள் முழுவதும் கோழி தூக்கம்தான்.

10. ஒருவர் ஜாதகத்தில் சுகஸ்தானம் கெட்டுவிட்டாலோ அல்லது சுகஸ்தானாதிபதி அசுப சேர்க்கை பெற்று விட்டாலோ அவர்களின் சுகம் மற்றும் தூக்கம் கேள்விக்குறிதான். அவர்களுக்கு அன்னை மற்றும் அன்னைக்கினையான பெண்களாலும் சொத்துக்களாலும் வாகனங்களாலும் தூக்கம் பறிபோகும்.

11. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப்படுகிறது. ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் மனைவியும் நண்பர்களும் நமது தூக்கத்தை சூறையாடிவிடுவார்கள்.

13. சுகஸ்தானமான 4ம் பாவத்திற்க்கு 7ம் பாவம் பத்தாம் பாவமாகும். எனவே ஒருவருடைய சுகமும் வேலையின் தன்மையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். ஒன்று வலுக்கும்போது மற்றொன்று செயலிழந்துவிடும். ஒருவர் தூக்கத்தையே கதி என்று இருப்பதும் வேலையே கதி என்று இருப்பதும் தீர்மானிப்பது இந்த இருபாவ தொடர்புகளாகும்.

படுக்கை சுகமளிக்கும் பரிகார ஸ்தலங்கள்:

வாழ்க்கையில் எத்தன வசதிகள் இருந்தாலும் படுக்கை சுகமும் உறக்கமும் சரியாக அமையவில்லையென்றால் ஈன்ற பொருள் அனைத்தும் வீண்தான். அத்தகைய சோக நிலையடைந்தவர்கள் எங்கும் சுற்றி ரங்கனை தேடு என அரங்கனிடம் செல்வதுதான் சிறந்த பரிகாரம்.

பூலோக வைகுண்டம் ஸ்ரீ ரங்கம்:

களத்திர தோஷமிருப்பவரகள் கணவன் மனைவிக்குள் பிரச்சனை உள்ளவர்கள் களத்திர தோஷம் நீங்கி படுக்கை சுகமும் நிம்மதியான உறக்கம் கிடைக்க திருச்சி ஸ்ரீ ரங்கநாதரை வெள்ளிக்கிழமையில் வழிபடுவது சிறப்பாகும்.

திரு இந்தளூர் பரிமளரங்கநாதர்

மனநிம்மதியின்றி தவிப்பவர்கள் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யமின்றி இருப்பவர்கள் நிம்மதியும் படுக்கை சுகமும் உறக்கமும் பெற சந்திரபகவான் வணங்கிய திரு இந்தளூர் பரிமள ரங்கநாரை திங்கள் கிழமையில் வழிபடுவது சிறப்பு.

கடல்மல்லை (மாமல்லபுரம்) ஸ்தலசயன பெருமாள்:

கடன் தொல்லையால் உறக்கமின்றி தவிப்பவர்கள், வருமானம் பெருகி கடன் அடையவும் நிம்மதியான உறக்கம் கிடைக்கவும் மனைவியிடத்தில் கௌரவம் பெறவும் ஸ்தல சயன பெருமாளை புதன் கிழமையில்

வணங்குவது சிறப்பு.

ஆதி திருவரங்கம்:

கணவன் மனைவிக்குள் எத்தகைய பிரச்சனை யினாலும்

கட்டில் சுகமும் தொட்டில் வரமும் இன்றி தவிப்பவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் பெண்ணையாற்றின் கரையில் சயன கோலத்தில் விளங்கும் ஆதிரங்கநாதரை வெள்ளிக்கிழமை வணங்கிவர

கணவன் மனைவிக்குள் திகட்ட திகட்ட இன்பமும் நிம்மதியான உறக்கமும் மழலை செல்வமும் ஏற்படும்.

English summary
Ashunya Shayan Vrat, also known as Ashunya Sayana Dwitiya, is an observance dedicated to Lord Vishnu and Goddess Lakshmi. Ashunya Shayan Vrata is observed in the Shravan month (July – August) in the traditional calendar followed in North India. It is believed that those who observe Ashunya Shayan Vrat will attain material progress and prosperity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X