ஆடிப்பூரம்: அம்மன் வளைகாப்பு விழாவில் வளையல் வாங்கினால் வீட்டில் தொட்டில் ஆடும்
ஆடிப்பூரம் தினத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களில் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கன்னிப்பெண்களும், திருமணமானவர்களும் வளையல்களை வாங்கிக் கொடுத்து அம்மனுக்கு சாற்றி பிரசாதமாக பெற்றுச்சென்றனர்.
சென்னை: ஆடிப்பூரம் தினமான இன்று காலை முதலே அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வளையல்களை வாங்கிக் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு மிகவும் சிறப்பானது. திருமணத் தடை உள்ள கன்னிப்பெண்களும், குழந்தைச் செல்வம் கேட்டு அம்பாளின் அருள் பெறுவதற்காகப் பிரார்த்திக்கும் பெண்களும் இந்த வளையல் சாற்று வைபவத்தில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள்.
மயிலை முண்டகக் கண்ணியம்மன், கோலவிழியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி இன்று பெண்கள் அதிக அளவில் திரண்டு சாமிதரிசனம் செய்தனர். அம்மனுக்கு சாற்றிய வளையல்கள் பெண் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கஞ்சிக்கலயம் சுமந்து வந்து அம்மனை வழிபட்டனர். விழாவை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.
வளைகாப்பு
ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்பதால், திருவாடிபூரம் பெண்களுக்கு ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது.மங்கையர்களுக்கு அரசியான அந்த அம்மனுக்கு பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம்.எப்படி இந்த வளையல் விழா நடைபெறுகிறது என்பது பற்றி சுவையான கதை ஒன்றை கூறுகின்றனர்.
அம்மனுக்கு வளையல்
ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார். இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்.
வளையல் மீது ஆசை
அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும் என்று கூறினாள் அம்பாள்.
சுயம்புவாக தோன்றிய அம்மன்
தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார். இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கும் கைநிறைய வளையல் அணியவேண்டும் என்று ஆசை ஏற்பட்டதால்தான் அந்த வளையல் வியாபாரி வைத்திருந்த வளையல்களை எடுத்துக்கொண்டார் அம்பாள். வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள்.
வளையல் பிரசாதம்
இதனை முன்னிட்டே திருவாடிப்பூர தினத்தன்று எல்லா கோவில்களிலும் அம்பாளுக்கு வளையல் சாற்றுகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். அம்மனுக்கு படைத்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில் அணிந்துக்கொண்டால், சுகப்பிரசவம் நிகழும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை.