ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஓணம், கோகுலாஷ்டமி -ஆகஸ்ட் மாத பண்டிகைகளை கொண்டாட தயாராகுங்கள்
ஆடி ஆவணி மாதங்கள் இணைந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், ஓணம் பண்டிகை கோகுலாஷ்டமி உள்ளிட்ட பல முக்கிய பண்டிகைகள் உள்ளன.
சென்னை: ஆகஸ்ட் மாதம் ஆங்கில மாதத்தில் எட்டாவது மாதம்,தமிழ் மாதங்களில் ஆடி, ஆவணி மாதங்கள் இணைந்த மாதம் இந்த மாதத்தில் சூரியன் கடக ராசியிலும் சிம்ம ராசியிலும் பயணம் செய்கிறார். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கோலம்தான். ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஓணம் பண்டிகை, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் இந்த மாதத்தில் கொண்டாடப்படுகின்றன.
ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படுகிறது. ஆடிக்கிருத்திகை முருகன் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை, திருத்தணியில் மூன்று நாட்கள் தெப்ப உற்சவத்துடன் ஆடிக்கிருத்திகை விழா நடைபெறும். பக்தர்கள் காவடி சுமந்து வந்து முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்படுகிறது. காவிரி, வைகை, தாமிரபரணி, பவானி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்படுகிறது. நீர் நிலைகளில் பூக்களை தூவி விளக்கேற்றி வழிபடுவார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் காவிரி அன்னையை தங்கையாக பாவித்து சீர் கொண்டு வந்து கொடுப்பது சிறப்பாக கொண்டாடப்படும்.
ஆகஸ்ட் 8 ஞாயிறுக்கிழமை ஆடி அமாவாசை இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள்.
ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆடிப்பூரம். அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் நாளில் வளைகாப்பு விழா நடத்துவார்கள். சிவ ஆலயங்களில் ஆடிப்பூரம் விழா கொண்டாடப்படுவது போல விஷ்ணு ஆலயங்களில் ஆண்டாள் பிறந்தநாளாக ஆடிப்பூரம் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி திருவாடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி நாக சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. நாகர் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் நாக தோஷங்கள் நீங்கும். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நாக பஞ்சமி, கருட கடைபிடிக்கப்படுகிறது. நாகர், கருடனை வழிபட ஏற்றநாள். ஆகஸ்ட் 14 கருடாழ்வார் ஜெயந்தியாக கடைபிடிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 15 பானு சப்தமி விரதம். சப்தமி திதி சூரியனுக்கு உகந்த நாள். ரத சப்தமி சிறப்பான நாள். இதே போல ஞாயிறன்று வரும் சப்தமி பானு சப்தமி விரத நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அரசு வேலை பதவி உயர்வுக்காக வேண்டுபவர்கள் பானு சப்தமி விரதம் இருந்து சூரிய பகவானை வணங்கலாம்.
ஆகஸ்ட் 20 வெள்ளிக்கிழமை பிரதோஷ நாள் வரலட்சுமி விரதம். பெண்கள் விரதமிருந்து மகாலட்சுமியை வணங்க மாங்கல்ய பலம் அதிகரிக்கும். தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.
ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பிக்கு புதிய பதவி - மத்திய அரசு புதிய உத்தரவு
ஆகஸ்ட் 21 திருவோணத்திருவிழா ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வாமன ஜெயந்தியாகவும் கடைபிடிக்கப்படுகிறது. பகவான் மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து வந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு பாதாள லோகத்திற்கு அனுப்பி வைத்தார் என்கிறது புராண கதை. கேரளாவில் இந்த பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும். தமிழகத்திலும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவது சிறப்பு. ஹயக்ரீவர் ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 22 பௌர்ணமி ஆவணி அவிட்டம் விழா கொண்டாடப்படுகிறது. இன்று வாஸ்து நாள் வீடு கட்ட பூஜை செய்ய சிறந்தநாள். சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷா பந்தன் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 25 மகாசங்கடஹர சதுர்த்தி பண்டிகை விநாயகர் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 29 பானு சப்தமி அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் விரதம் இருந்து சூரியனை வணங்கலாம்.
ஆகஸ்ட் 30 ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 31 பஞ்சாட்சர ஜெயந்தி, ஸ்ரீ சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.