ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம் : தடையை மீறி வழிபட்ட பக்தர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா தடையை மீறி பக்தர்கள் குவிந்தனர். வரும் 24ஆம் தேதி தங்கத் தேரோட்டம் கோவில் வளாகத்தில் நடைபெறும் என்
ஸ்ரீவில்லிபுத்தூர்: மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் மிக முக்கிய திவ்ய தேசமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் ஆடிப்பூரம் விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வரும் 24ஆம் தேதி கோவில் வளாகத்திற்குள்ளேயே தங்கத்தேரோட்டம் நடைபெறும். கொரோனா லாக்டவுன் தடையை மீறி இன்று பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அம்மன் கோவில்களில் ஆடி மாதம் திருவிழா கோலமாக இருக்கும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கோவில்களில் ஆரவாரமின்றி விழாக்கள் நடைபெறுகின்றன. திருநெல்வேலியில் ஆடிப்பூர விழாவில் கொடியேற்றமின்றி பூஜைகள் மட்டும் நடைபெறுகிறது.
இதேபோல திருவையாறு ஐயாரப்பர் கோவில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ஆடிப்பூர விழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறுகிறது.
ஆடிப்பூர விழா
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரம் விழா நேற்று தொடங்கி 23ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அம்பாள் சன்னதியில் தினமும் ஹோமம் நடத்தப்பட்டு, கும்பம் வைத்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளை பக்தர்கள் பார்க்க வசதியாக செயலி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார்
ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதரித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி செடியின் அடிவாரத்தில் குழந்தையை கண்டெடுத்த பெரியாழ்வார் அந்த குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். கண்ணன் மீதான காதலில் தான் சூடிக்கொடுத்த மாலையை இறைவனுக்கு அணிவித்து அழகு பார்த்த ஆண்டாள் அந்த கண்ணனின் திருப்பாதங்களை சரணடைந்தாள். ஆண்டாளுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா நடைபெறும்.
ஆடிப்பூர கொடியேற்றம்
கொரோனா பரவல் காரணமாக அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, கோவில் வளாகத்திற்கு உள்ளேயே கொடியேற்ற விழாவையும், தேர் திருவிழாவையும் நடத்த அனுமதி அளித்துள்ளார். இந்த ஆண்டு ஆடிப்பூர விழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு
தடையை மீறி ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். கொடியேற்ற நிகழ்வைக் காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தகவல் பரவியதால் பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் குவிந்தனர். கொரோனா பரவலால் அர்ச்சகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையிலும் தடையை மீறி பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர்.
தங்கத்தேரோட்டம்
ஆடிப்பூர விழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து 9 நாள் திருவிழாக்களும் பக்தர்கள் யாருமின்றி கோவில் நிர்வாகத்தினர், அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தலதார்கள் பங்கேற்கும் வகையில் அரசு உத்தரவுப்படி நடைபெறும். கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் கோவில் வளாகத்திற்குள் நடைபெறும் தேரோட்டம் ஆகியவற்றை பொதுமக்கள் யூடியூப் மூலம் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 24ல் தங்கத்தேரோட்டம்
தங்கத் தேரோட்ட நிகழ்ச்சி வரும் 24ஆம்தேதி காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. கோவில் வளாகத்தில் நடைபெறும் இந்த தேர் திருவிழாவிற்கு அரசு உத்தரவுப்படி யாருக்கும் அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகி தெரிவித்துள்ளார். இதேபோல திருவையாறு ஐயாரப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.