ஆடிப்பூரம் திருவிழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்கத்தேரோட்டம் தடையின்றி நடக்குமா?
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவை கோவிலுக்கு உள்ளேயே நடத்தவும் தங்கத்தேர் எடுக்கவும் அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோயில் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது
ஸ்ரீவில்லிபுத்தூர்: பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை கோவிலுக்குள் நடத்த அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கோவிலுக்கு உள்ளேயே ஒன்பது நாள் திருவிழாவை நடத்தவும் 24ஆம் தேதி தங்கத்தேர் இழுக்கவும் அந்த கடிதத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சிறிய கோவில்கள் முதல் பெரிய கோவில்கள் வரை பூட்டப்பட்டதால் எந்த விழாக்களும் நடைபெறவில்லை. கோவிலுக்குள் சாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் மட்டும் தடையின்றி நடைபெற்று வருகின்றன.
தற்போது சிறுகோவில்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவான ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இந்த முறை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இந்த முறை விழாவை தடையில்லாமல் உள்ளேயே நடத்தவேண்டும் என்று அறநிலையத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் விழாவை நடத்த அனுமதி கோரி கோவில் நிர்வாகத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி வனத்தில் ஆண்டாள் அவதரித்தார். அந்த கண்ணனை காதலனாக பாவித்து இறைவனின் திருவடி சேர்ந்தார். ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக நடைபெறும். தேரோட்டமும் வெகு சிறப்பாக நடைபெறும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 16ஆம் தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெறும் என்று தெரிகிறது. இதனால் ஆடிப்பூர திருவிழாவில் 10 முதல் 20 பேர் வரை மட்டுமே கலந்து கொண்டு பூஜைகளை செய்யவும் கோவிலுக்கு உள்ளேயே ஒன்பது நாள் திருவிழாவை நடத்தவும் 24ஆம் தேதி தங்கத்தேர் இழுக்கவும் அனுமதிக்கக் கோரி கோயில் நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதனிடையே திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர விழா இன்று செவ்வாய்க்கிழமை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் ஆடிப்பூர விழாவில் கொடியேற்றமின்றி பூஜைகள் மட்டும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கஷ்டத்தில் இருந்து காப்பாற்றும் கந்த சஷ்டி கவசம் - தீராத நோய்களும் தீரும்
இன்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை அம்பாள் சன்னதியில் தினமும் ஹோமம் நடத்தப்பட்டு, கும்பம் வைத்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளை பக்தர்கள் பார்க்க வசதியாக செயலி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.