அக்னி நட்சத்திர காலத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
அக்னி நட்சத்திரம் தொடங்கப் போவதால் வெயில் வறுத்து எடுக்குமோ என்று மக்கள் அலறத் தொடங்கி விட்டனர். அக்னி நட்சத்திர காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை: அக்னி நட்சத்திர காலத்தில் எந்த விதமான சுப காரியங்களும் தொடங்க மாட்டார்கள். புதிய பேச்சுவார்த்தைகளும் துவக்க மாட்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் இது அக்னி நட்சத்திர தோஷம் என்று அழைக்கப்படுகிறது.
ஜோதிடத்தில் உள்ள அஸ்வினி முதல் ரேவதி வடி 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. அப்புறம் எப்படி அக்னி நட்சத்திரம் என்று வந்தது என்று கேட்கலாம்.
சித்திரை மாதம், பரணி 4ஆம் பாதத்தில் தொடங்கி ரோகிணி முதல் பாதம் வரை சூரியன் சஞ்சாரிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. அக்னி நட்சத்திரத்தை முன் ஏழு, பின் ஏழு என 2 பிரிவாக பிரித்து கூறுகிறது ஜோதிட சாஸ்திரம். சித்திரை கடைசி வாரம் தொடங்கி, வைகாசி முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான கத்திரி வெயில் எனப்படுகிறது.
சந்திரன் சஞ்சாரம்
இந்த ஆண்டு 4-5-2018 முதல் 28-5-2017 வரை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.
பஞ்சாங்கம் என்பது இந்துமத கால அட்டவணை. வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்து அங்கங்களே பஞ்ச அங்கம் எனப்படுகிறது. இதில் பூமியை சுற்றி வரும் சந்திரன், குறிப்பிட்ட நேரத்தில் எங்கு இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய நட்சத்திரம் நடப்பதாக கணிக்கப்படுகிறது.
சூரியன் உச்சம்
ஒவ்வொரு கிரகமும் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கிறதோ, அந்த கிரகத்தின் சாரத்தில் செல்வதாக சொல்வார்கள். அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் காலகட்டம் சூரியனின் சஞ்சாரத்தை மையமாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும் போது உச்சமடைகிறார். அப்போது சூரியனின் கதிர்கள் நம்மை சுட்டு பொசுக்குகிறது. கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன், அதிதேவதை அக்னி. ஆகவேதான் நெருப்புக்கு இணையான வெப்பத்தை கக்குவதால் அக்னி நட்சத்திரம் என்கின்றனர்.
நெருப்பு கோள் சூரியன்
மேஷ ராசி செவ்வாயின் வீடாகும். நெருப்பு ராசியான மேஷத்தில் நெருப்புக் கோள் செவ்வாயின் ஆட்சி வீடு என்பதால் நெருப்பு கிரகமான சூரியன், மேஷத்தில் சஞ்சாரிக்கும் போது வெயில் உக்கிரமாக தகிக்கிறது.
கடும் வெப்பம் நிலவும் காலம் என்பதால், அக்னி நட்சத்திர காலம் தோஷ காலமாக கருதப்படுகிறது. அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க, காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப் பலகையில் போட்டு, சூரிய காயத்திரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம்.
திருமணம் செய்யலாம்
இந்த நாட்களில் நல்ல காரியங்கள் செய்யலாமா என்ற சந்தேகம் எல்லாருக்கும் உண்டு. அக்னி நட்சத்திர நாட்களில் என்ன செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், உபநயனம் ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை. சுப விசேஷங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்.
கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது
இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது, நார் உரிக்கக்கூடாது, விதை விதைக்கக்கூடாது, கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது, நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது,வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது. முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் செய்தல், பூமி பூஜை செய்வது, கிணறு வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை தொடங்குவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.
குழந்தை பிறப்பு
நமது கலாசாரப்படி, ஆடி மாதத்தில் புதுமண தம்பதிக்கு ஆடி சீர் வைப்பது வழக்கம். சீர் வைத்து புதுப்பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து சென்று விடுவார்கள். ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். சித்திரை கடும் வெப்ப காலம் என்பதால் பிரசவித்த பெண்களுக்கு உடல் உபாதைகள், நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். இதை தவிர்க்கும் நோக்கிலேயே, ஆடியில் பெண்கள் கருத்தரிப்பதை தவிர்ப்பதற்காக தம்பதிகளை பிரித்து வைக்கும் வழக்கம் உருவானது. விதிப்படி சூரியன் உச்சத்தில் இருக்கும் போது குழந்தை பிறந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.
கோவில்களில் தோஷ நிவர்த்தி
இந்த ஆண்டு 4-5-2018 முதல் 28-5-2017 வரை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.
அக்னி நட்சத்திர தோஷ காலம் முடிந்த பிறகு, எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கும். இதை அக்னி கழிவு என்று கொண்டாடுவார்கள். கிராமங்களில் அம்மன் கோவில்களில் கொடை விழா நடைபெறும், பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.