ஐப்பசி பவுர்ணமி : சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் - தரிசித்தால் அன்னதோஷம் போகும்
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்திலும் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் வரும் 11ஆம் தேதியன்று அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கடலூர்: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்திலும் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலிலும் வரும் 11ஆம் தேதியன்று அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது. சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு பருக்கை சாதமும் ஒரு சிவலிங்கமாக கருதப்படும். இதனால் ஒரே சமயத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி, அமாவாசை தினங்களை இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதி, சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகம், மற்றும் பூஜைகள் செய்வது வழக்கம். அதிலும், மாசி மாதத்தில் வரும் மஹாசிவராத்திரியை விட, சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஐப்பசி பவுர்ணமி, கார்த்திகை பவுர்ணமி, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களை இந்துக்கள் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரையில் வரும் பவுர்ணமியன்று மதுரையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறும்.
வைகாசி மாதத்தில் வரும் பவுர்ணமியை ஒட்டி அனைத்து முருகன் ஆலயங்களிலும் விசாகத் திருவிழா நடைபெறும். அன்றைக்கு முருகப்பெருமானின் அவதார திருநாள் என்பதால் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
இதையடுத்து, ஆடிமாதத்தில் வரும் பவுர்ணமியன்று சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவும், வைணவ ஆலயங்களில் ஆடிப்பூரம் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். மேலும், கார்த்திகையில் திருவண்ணாமலையிலும், மார்கழி திருவாதிரி தினத்தன்று உத்தரகோசமங்கையில் உள்ள மங்களேசுவரர் கோவிலும், தைப்பூச தினத்தில் பழனி முருகன் ஆலயத்திலும், மாசி மாதத்தில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலும், பங்குனி உத்திர நாளில் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலிலும் திருவிழா நடைபெறுவது தொண்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
அது மாதிரியே, ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். அதிலும் குறிப்பாக தஞ்சை பெருவுடையார் கோவிலிலும், கங்கை கொண்டபுரம் பிரகதீஸ்வரர் கோவிலிலும் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
தஞ்சை பெருவுடையார் கோவிலில் ஆண்டு தோறும் 1 டன் பச்சரிசி சாதத்தில் அன்னாபிஷேகம் நடக்கும். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகிலுள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில், 800 ஆண்டுகள் பழமையான முதலாம் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலும் அன்னாபிஷேகம் நடைபெறும்.
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தைப் போலவே, கங்கை கொண்ட சோழபுரத்திலும், மிகப்பிரமாண்டமான சிவலிங்கம் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிவலிங்கமும் ஒரே கல்லால் செதுக்கப்பட்டதாகும். இந்த சிவலிங்கத்தின் சுற்றளவு 60 அடியாகும். 13.5 அடி உயரமும் கொண்டதாகும்.
இந்த சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 100 மூட்டை பச்சரிசியால் சமைத்த சாதத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வது வழக்கம். சமைத்த அன்னத்தை சிவலிங்கத்தின் சாத்தி அபிஷேகம் செய்வதை பார்த்தால் ஏழேழு பிறவிக்கும், நமக்கு சாப்பாட்டிற்கு பிரச்சனை ஏற்படாது என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு, வரும் நவம்பர் 11ஆம் தேதியன்று இந்த கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது. சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு பருக்கை சாதமும் ஒரு சிவலிங்கமாக கருதப்படும். இதனால் ஒரே சமயத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
இந்த அன்னாபிஷேகத்தை கண்டு வணங்கிச் செல்ல இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை கொண்டசோழபுரத்திற்கு வருகை தருவதுண்டு. இதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு, கோவில் நிர்வாகத்தினரும், அன்னாபிஷேக குழுவினரும் இப்போதே தயாராகி வருகின்றனர்.