நோய் தீர்க்கும் ஐப்பசி அன்னாபிஷேகம் - சிவ ஆலயங்களில் நாளை கோலாகலம்
லிங்க வடிவில் வீற்றிருக்கும் எம்பெருமான் ஈசனுக்கு அன்னத்தினால் செய்யப்படுகின்ற அபிஷேகத்தை தரிசித்து அந்த பிரசாதத்தை உண்ணும் பக்தர்களுக்கு நோய்கள் மற்றும் வறுமை அகலுதோடு உணவுப் பஞ்சம் ஏற்படாமல் விவசாயம
திருச்சி: ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று நடைபெறும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நாளை 12.11.19 செவ்வாய்க்கிழமையன்று பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்பேகேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள குபேர லிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது. நல்ல நல்ல அதிர்வுகளும், உடலுக்கு தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்துள்ள சிவலிங்கத்தின் மேல் பாகத்தில் சாற்றப்பட்ட அன்னம் மனிதர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்த அன்னப்பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் நெருங்காது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
இவ்வுலகில் வாழம் அனைத்து ஜீவராசிகளுக்கும் அடைப்படையாக விளங்குவது அன்னம் தான். உலக உயிர்களை படைப்பதோடு நில்லாமல், அவை உண்பதற்கு தேவையான ஆகாரத்தையும், படைத்தருளிய இறைவன் ஈசனுக்கு நன்றி சொல்லும் விதத்தில், அனைத்து சிவாலயங்களிலும், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
ஐப்பசி மாத பவுர்ணமி தினத்துக்கு மட்டும் மற்ற மாத பவுர்ணமிக்கு இல்லாத தனிச்சிறப்பு உண்டு. அன்று சந்திரன் தன்னுடைய சாபம் முழுமையாக நீங்கப்பெற்று, பதினாறு கலைகளுடன் பூமிக்கு வெகு அருகில் வந்து புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும்.
பிறை நிலவை தன்னுடைய தலையில் சூடியவருக்கு, அந்த முழுமதி பிரகாசிக்கும் ஐப்பசி பவுர்ணமி நாளில் வழிபாடு செய்வது சிறப்பானது என்ற காரணத்தினாலும், நவகிரகங்களில் சந்திரனக்கு உரிய தானியம் அரிசி என்பதாலும், அரிசியில் சிவன் இருப்பதாக பக்தர்கள் நம்புவதாலும், ஐப்பசி பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடாக இறையனார் ஈசனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
லிங்க வடிவில் வீற்றிருக்கும் எம்பெருமான் ஈசனுக்கு அன்னத்தினால் செய்யப்படுகின்ற அபிஷேகத்தை தரிசித்து அந்த பிரசாதத்தை உண்ணும் பக்தர்களுக்கு நோய்கள் மற்றும் வறுமை அகலுதோடு உணவுப் பஞ்சம் ஏற்படாமல் விவசாயமும் செழித்தோங்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேகத்தின் போது சிவலிங்கத்தின் மீது சாற்றப்படும் சாதம் லிங்கத்தின் தன்மை பெறும் என்பதால், அன்னாபிஷேகத்தை தரிசிப்பதால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
வைத்தியநாத ஸ்வாமி
அரியலூர் மாவட்டத்தில், திருமழபாடி கிராமத்தில் அமைந்திருக்கும் சுற்றுலா தலமான சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில், ஆண்டு தோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அன்னாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது. உமையொரு பாகனான ஈசன், அபிஷேகப்பிரியர் என்பதால், நாளை இரவு 7 மணிக்கு, அவருக்கு தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், திரவியப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகிய 11 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் தீபாராதனையும் காட்டப்படும்.
இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகம் தான். ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப்பொறுத்தே அவனுடைய மனமும் இருக்கும் என்று நான்கு வேதங்களும் உபநிடதங்களும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்கக் கூடாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஆகவே தான், அன்னாபிஷேக தினமான நாளை, சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில், வடித்து சற்று ஆறவைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு லிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதன் மேல் காய் கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். அப்போது வேத மந்திரங்கள் முழுங்கப்படும். பின்னர் இரவு வேளையில், லிங்கத்தின் மீது சாற்றப்பட்ட அன்னத்தை எடுத்துச்சென்று கோவில் குளம் மற்றும் ஆற்றில், நீரில் வாழும் ஜீவராசிகளுக்கு உணவாக அளிப்பார்கள்.
திருவானைக்காவல் குபேர லிங்கம்
பஞ்சபூத திருத்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில், 12.11.19ஆம் தேதியான நாளை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி, 10 படி அரிசியால் சாதம் சமைத்து, ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் தெற்கு கோபுரத்தின் அருகில் அமைந்துள்ள குபேர லிங்கத்திற்கு நாளை மாலை 6 மணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயம், காரைக்கால் கைலாசநாதர் ஆலயம், கோயில்பத்து பார்வதீஸ்வரர் ஆலயம், திருவேட்டைக்குடி திருமேனியழகர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் நாளை பகல் 1 மணி முதல் இரவு வரை அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.
அதே போல், திருச்சியில் புகழ்பெற்ற மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மாலை 6 மணியளவில், இக்கோவிலின் மூலஸ்தனத்திலுள்ள லிங்கத்திற்கு அன்னம் சாற்றி அலங்காரம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இரவில் சுவாமிக்கு சாற்றப்பட்ட அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாகவும், காவிரி ஆற்றில் மீன்களுக்கு உணவாகவும் அளிக்கப்படும்.
மேலும், மலைக்கோட்டை நந்தி கோவில் தெருவில் உள்ள நாகநாசுவாமி கோவிலும் இன்று மாலையில்வ அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது. உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் உட்பட திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.
நல்ல நல்ல அதிர்வுகளும், உடலுக்கு தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்துள்ள சிவலிங்கத்தின் மேல் பாகத்தில் சாற்றப்பட்ட அன்னம் மனிதர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்த அன்னப்பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் நெருங்காது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.