ஐப்பசி அன்னாபிஷேகம் - சொர்க்கலோக வாழ்வு தரும் சிவ தரிசனம் - அஸ்ட்ரோ சுந்தரராஜன்
அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேக விழாவாக சிவன் கோயில்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.
சென்னை: ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.
இன்று மாலை ஐப்பசி மாத பெளர்ணமியில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு திருமயிலை கபாலீஸ்வரர், சுக்கிர ஸ்தலமான வெள்ளீஸ்வரர், சிதம்பரம் நடராஜர், திருவண்ணாமலை, காசி விசுவநாதர் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
இன்று உணவின் காரகரான சந்திரனுக்கு சுக்கிரவாரத்தில் ஜெயந்தி நாள் வந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகிறான். அன்று அவனது கலை அமிர்த கலையாகும்.
அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று, அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.
அன்னாபிஷேகமும் ஜோதிடமும்
ஜோதிடத்தில் அன்னம் எனப்படும் உணவிற்க்கான காரக கிரகம் சந்திரன். அன்னை எனப்படும் மாத்ரு காரகனும் சந்திரனேதான். நமக்கெல்லாம் படியளக்கும் அன்னப்பூரனியான பார்வதியை வணங்க காரக கிரகமும் சந்திரனேதான்.
இன்னும் சொல்லப்போனால் ஸ்ரீ மகாலக்ஷமியை கூட சந்திர சகோதரி என வேதம் குறிப்பிடுகிறது. மேலும் பாசம் அன்பு போன்ற உணர்ச்சிகளை குறிக்கும் கிரகமும் சந்திரனேதான.
சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் தொடர்பு
இன்னும் சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் பகலில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் மாத்ரு காரகன் எனவும் இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மாத்ரு காரகன் எனவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆக சந்திரன் உச்சமாவதுகூட சுக்கிரனின் வீட்டில்தான். ஆக சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் எப்பொதும் ஒரு தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கும். அப்படி இருப்பதுதான் நன்மையும் கூட.
அன்னையும் பிதாவும்
எப்போதும் வீட்டிலிருக்கும் வரை தந்தைக்கு அன்னையின் உணவின் அருமை தெரிவதில்லை. ஆனால் வெளியில் சென்றிருக்கும்போது அது நன்றாக புரிந்துக்கொள்ளுவார். மேற்கூறிய கருத்தை உண்மையாக்கும்படிஇந்த வருட அன்னாபிஷேக நாளான ஐப்பசி 17ம் நாள் (நவம்பர் 3) அன்றைய கிரகநிலை அமைந்திருப்பது விந்தையிலும் விந்தை. தந்தையான சூரியன் இருப்பது சுக்கிரனின் வீடான துலா ராசியில் ராகு சாரத்தில். ஆனால் மாத்ரு காரகனான சந்திரன் அஸ்வினி நக்ஷத்திர சாரத்தில் 180 பாகையில் சம சப்தமமாக நின்று மாத்ருகாரகனும் பித்ருகாரகனும் பௌர்னமி யோகத்துடன் ஓருவரை ஒருவர் அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் என்பற்கிணங்க கிரஹ அமைவு பெற்ற சந்திர பலம் பெற்ற சுக்கிர வார பௌர்னமி தினத்தில் அன்னாபிஷேகம் அமைந்திருக்கிறது.
சந்திரனின் அருள்
மேலும் சிறப்பாக உணவின் காரகனான சந்திரனுக்கும் ஜெயந்தி நாள் அன்னாபிஷேக தினம் மற்றும் வெள்ளிக்கிழமையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சந்திர ஜெயந்தி அன்று (03.11.2017) சந்திர ஓரையில் காலை 07.59 முதல் 08.57 வரை, மாலை 2.46 முதல் 3.45 வரை மற்றும் இரவு 9.48 முதல் 10.52 வரை உள்ள இந்த நேரத்தில் காலையிலோ அல்லது மாலையிலோ வீட்டில் உள்ள தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பின்பு அவர்களையும் அழைத்துக்கொண்டு கோயிலுக்கு சென்று நவக்கிரகங்களில் வீற்றிருக்கின்ற சந்திர பகவானை வெள்ளை வஸ்திரம் சாத்தி, வெள்ளை அல்லி மலர்களால் அர்ச்சனை செய்து புஜித்து, கோயிலுக்கு வருபவர்களுக்கு வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கி சந்திர பகவானின் புரண அருளை பெறலாம்.
ஜாதகப்படி அன்ன தோஷமும் அன்ன துவேஷமும் யாருக்கு?
அன்னதோஷத்தாலும் அன்ன துவேஷத்தலும் பீடிக்கப்பட்டவர்களும் அன்னாபிஷேக நாளில் அன்னாபிஷேக கோலத்தில் தரிசனம் செய்வது அன்னதோஷம் நீங்கும். மேலும் உணவின் மீது வெறுப்படைய செய்யும் நோயான அன்னதுவேஷம் நீங்கும்.
ஜோதிடத்தில் அடிப்படை உணவின் காரகர் சந்திர பகவான் ஆவார். சுவையான உணவு வகைகளின் காரகர் சுக்கிரன் ஆவார். உணவினை குறிக்கும் போஜன ஸ்தானம் எனப்படுவது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபம் மற்றும் ஜாதக இரண்டாம் பாவமாகும். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் அடைவதும் சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.
1. சந்திர பகவான் ஒருவர் ஜாதகத்தில் 6/8/12 தொடர்புகள் பெற்றோ அல்லது பாதகாதிபதி தொடர்பு பெற்று அல்லது நீசமடைந்து நிற்க அவர்களுக்கு பால், தயிர், அரிசி சோறு போன்ற பொருட்களை அடிக்கடி வீணடிப்பதால் அன்னதோஷம் ஏற்படும்.
2. கால புருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபத்திலும் உணவை குறிக்கும் சந்திரனின் ஆட்சிவீடான கடகத்திலும் அசுப கிரகங்கள் நிற்க அஞ்சாமல் உணவுப்பொருட்களை வீணடிப்பார்.
3. ஒரு ஜாதகரின் இரண்டாம் பாவத்தில் சூரியன் அசுப தொடர்பு பெற்று அல்லது பாதகாதிபதியாகி நிற்க கோதுமை மற்றும் கோதுமையில் செய்த உணவு பொருட்கள், தக்காளி, கேரட் போன்ற காய்கறிகள், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை வீணாக்கிடுவார். அதுவே காலபுருஷனுக்கு 6/8/12ம் வீடாக மேற்கண்ட உணவுகளை வெறுத்து ஒதுக்குவார்.
4. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க அந்த ஜாதகர் ஊறுகாய், வடான், வத்தல் வகைகள், சூடான சாப்பாடு வகைகளை கூட வீணாக்கிடுவார். காரம் என்ற காரனத்தை காட்டி ஆகாரத்தை வீணடிப்பார்.
5. ஒருவர் ஜாதகத்தில் புதன் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க்க பசுமையான காய்களை சமைக்காமலேயே வீணக்கிடுவார். மேலும் தேவைக்கு அதிகமாக நொறுக்கு தீனிகளை வாங்கி வீணடிப்பதும் இவர்கள்தான்.
6. ஒருவர் ஜாதகத்தில் குரு அசுபராகி இரண்டில் நிற்க நெய்யில் செய்த இனிப்பு வகைகள், பழங்கள் முதலியவற்றை வீணடிப்பார்.
7. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் அசுபராகி இரண்டாம் பாவத்தில் நிற்க விருந்து மற்றும் உணவகங்களில் உண்டு வீட்டு உணவுகளை வீணடிப்பார்.
8. ஒருவர் ஜாதகத்தில் சனி இரண்டாம் பாவத்தில் அசுப தொடர்பு பெற்று நிற்க எண்ணையில் பொறித்த உணவுகள் கிழங்கு வகைகள் அளவுக்கதிகமாக செய்து வீணடிப்பார். மேலும் பழைய உணவுகளை உண்டு உடம்பை கெடுத்துக்கொள்வர்.
9. ஒருவர் ஜாதகத்தில் ராகு இரண்டாமிடத்தில் நிற்க மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்டு பாரம்பரிய உணவுகளை வீணடிப்பார்.
10. ஒருவர் ஜாதகத்தில் இரண்டில் கேது நிற்க இவருக்ககாக உணவு செய்து வருந்துவதுதான் மிச்சம். உணவிற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடைசியில் ஏதோ ஒரு பழைய உணவை உண்டுவிடுவார்.
11. துலா லக்னமாக இருந்து தர்மகர்மாதிபதியான சந்திரன் இரண்டாம் பாவத்தில் நீசம் பெற்றால் விருந்து என்ற பெயரில் உணவு பொருட்களை வீணடிப்பார்.
12. எந்த ராசி நேயர்களாக இருந்தாலும் சந்திராஷ்டம தினங்களில் சாப்பிடாமல் வீணடிப்பார்.
அன்னதோஷத்தை போக்கும் பரிகாரங்கள்:
1. அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்க்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி (பச்சரிசி) வாங்கி கோயிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்துபேருக்கு போஜனம் அளிப்பது.
2. உணவுப்பொருட்களை குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருவரையும் குறிக்கும் ஸ்ரீ அன்னபூரனியை வணங்கிவர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுபாடின்றி கிடைக்கும்.
3. சுக்கிரனின் அதிதேவதை மற்றும் சந்திர சகோதரியான தான்யலக்ஷமியை வணங்கிவர உணவு வீணவது குறையும்.
4. அவரவர்கள் கிராம தேவதைக்கு பொங்கல் வைத்து வழிபட உணவு வீணாவது குறையும்.
5. அந்தந்தவருட தான்யாதிபதியை பஞ்சாங்கபடி வணங்கிவர உணவு பஞ்சம் நீங்குவதோடு உணவு வீணாவதும் குறையும்.
6. உலகத்துக்கே படியளந்துவிட்டு படியை தலையில் வைத்து படுத்திருக்கும் சுக்கிர ஸ்தல மூர்த்தி ஸ்ரீரங்கநாதரை வணங்கிவர உணவு வீணாவது குறையும்.
7. முன்னோர்களின் திதி நாட்களில் பிராமணர்களுக்கு போஜனம் அளிப்பது அன்ன தோஷத்தோடு பித்ரு தோஷத்தையும் போக்கும்.
இவ்வளவு சிறப்பு பெற்ற சுக்கிரனின் மாதமான ஐப்பசி மாததில் சுக்கிரனின் நாளான வெள்ளி கிழமையில் சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் சுக்கிரனும் சந்திரனும் சம சப்தமமாக பார்வை பெற்ற தினத்தில் அமைந்த அன்னாபிஷேகம் மற்றும் சந்திர ஜெயந்தியில் அம்மையப்பரை தரிசித்து தாயின் ஆசியையும் குடும்ப மகிழ்ச்சியும் பெற்று உணவு பஞ்சம் நீங்கி சகல சந்தோஷமும் பெற்று வாழ்வோமாக!