ஐப்பசி அன்னாபிஷேகம்: சோறு கண்ட இடம் சொர்க்கம் அர்த்தம் தெரியுமா?
ஐப்பசி பவுர்ணமியன்று சிவனுக்கு வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் செய்வர். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதைத்தான் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சொல்கிறார்கள்.
சென்னை: உலகில் வாழும் உயிரினங்களுக்கு எல்லாம் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகவே ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம். இதைத்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கூறியுள்ளனர்.
கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர்வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ’ என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான்' என்பதே இதன் பொருள்.
அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான உணவையும் படைத்த இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பவுர்ணமி தினமான இன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
'அன்னம் ப்ரபிரம்மம்' என்பர். இதற்கு 'சோறே தெய்வம்' என்று பொருள். சாப்பாட்டை தெய்வம் போல கருதவேண்டும் என்பதற்காகவே இன்று உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வார்கள்.
சிவனேபிரானே உலகிலுள்ள ஸகல ஜீவ ராசிகளுக்கும் படியளப்பவர் அதனால் அந்த ஈசனுக்கு அன்னத்தை அபிஷேகம் செய்வோருக்கும் அதனை தரிசிப்போருக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்பதாலேயே இப்படிக் கூறினார் தஞ்சை பெரிய கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்ய 100 மூட்டை அரிசிகள் கொண்டு அன்னம் தயாரிக்கப்படுகிறது.
சமைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து காய்கறிகள்,பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர். அன்னாபிஷேக நாளில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அந்த அன்னமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுபவர்களுக்கு உணவு பஞ்சமே ஏற்படாது என்பது நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானை தரிசிக்க அன்னாபிஷேகமும், அன்னதுவேஷமும் நீங்கும்.