ஐப்பசி பவுர்ணமியில் பசிப்பிணி போக்கும் சிவனின் அன்னாபிஷேக தரிசனம் பாருங்க
ஐப்பசி மாதத்தில் சிவ பெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசனம் செய்தால் பசியில்லாத வாழ்வும் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்கும்.
சென்னை: ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாள் சிறப்பு வாய்ந்தது. இன்றைய தினம் சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் லிங்கத்திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்படும். அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமானை தரிசனம் செய்தால் பசியில்லாத உணவு கிடைக்கும் உணவுப்பஞ்சம் நீங்கும் என்பது ஐதீகம்.
உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும். அப்படிப்பட்ட அன்னத்தை தனக்கானதாக மட்டுமே வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களால் இறைவனையும், இறையருளையும் அடைய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
ஐப்பசி பவுர்ணமி சிறப்பு
சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமிஆகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அன்னதானத்தின் மகிமை
தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. எனவேதான் புரட்டாசி மாத மகாளய பட்ச காலத்தில் அன்னதானம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பக்தர்களுக்கும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பசிப்பிணி நீங்கும்
ஐப்பசி பவுர்ணமி சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த பிரசாதத்தை கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்பது நிதர்சனமான உண்மை.
ஏழைகளுக்கு அன்னதானம்
சிலருக்கு பசி இருக்கும் ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்' என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.
சிவ தரிசனம்
பணக்காரர்களாகவும் செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே சிலருக்கு வெறுப்பாக இருக்கும். ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். எனவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னதானம் செய்வதோடு சிவ தரிசனமும் செய்வோம்.