ஐப்பசி துலா ஸ்நானம் - காவிரியில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்று புகழ் பெற்றது மயிலாடுதுறை. 'கங்கையினும் புனிதமாய காவிரி’ என்று பெரியாழ்வாரால் பாடப்பெற்ற துலாக்கட்ட காவிரி நதியில் ஐப்பசி மாதத்தில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்
சென்னை: ஐப்பசி மாதத்தைத் தமிழில் துலா மாதம் என்பார்கள். துலா என்றால் தராசு. தராசு எவ்வாறு நடுநிலையைத் தன் முள் காட்டி நிற்கிறதோ, துலா மாதமும் பகலையும் இரவையும் சமமாகத் துல்லியமாகக் கொண்டுள்ளது என்பதை குறிக்கவே துலா மாதம். சூரியன் இந்த மாதம் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார் எனவே இதுவும் ஒரு காரணமாயிற்று.
காவிரியில் தினசரியும் நீராடினால் நன்மைதான் என்றாலும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம் என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி மாதமானது துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.
எனவே ஐப்பசி மாதத்தில் எல்லா நாள்களிலும் காவிரி துலாக் கட்டத்தில் நீராடி, இறைவனை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. காவிரி ஓடும் ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, சங்கமேஸ்வரர் கோயில் படித்துறை, திருவையாறு திருவிடைமருதூர், பூம்புகார், பவானி, கும்பகோணம், குணசீலம், தலைக்காவிரி, திருச்சி முக்கொம்பு ஆகிய இடங்கள் புனித ஸ்நான கட்டங்களாகக் கருதப்படுகிறது. நீராடிய பின் அன்னதானம் செய்துவிட்டு, பெருமாளை தரிசித்தல் பெரும் புண்ணியம் என்பது ஐதீகம்.
மயிலாடுதுறையில், சிவபெருமான் ஐந்து வள்ளல்களாக ஐந்து இடங்களில் கோயில்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மயூரநாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனைத்தையும் அருளும் வள்ளலாகவும், வள்ளலார் கோயிலில் ஞானத்தை வழங்கும் வள்ளலாகவும், காவிரியில் எங்கே ஸ்நானம் செய்ய வேண்டும் என்று வழி காட்டியதால், விளநகரில் துறை காட்டும் வள்ளலாகவும், மூவலூரில் வழிகாட்டும் வள்ளலாகவும், பெருஞ்சேரியில் பொருள் தரும் வள்ளலாகவும் சிவபெருமான் கோயில் கொண்டிருப்பதால்தான் 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்ற புகழுடன் திகழ்கிறது மயிலாடுதுறை.
துலா காவிரி நீராடல் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும். எனவே, காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும், பாபங்கள் விலகும் என்று நதி தேவதைகளிடம் பிரம்மா கூறினார்.
துலாக் கட்ட வைபவத்தின் கடைசி நாளான 'கடைமுழுக்கு வைபவம்’ அன்று நீராடி, மயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையையும் வழிபட்டால், அனைத்து பாவங்களும் விலகி, மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு கடைமுழுக்கு நவம்பர் 16ஆம் தேதியாகும். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி திதி கொடுப்பவர்களின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள் என்பதால் ஒருநாளாவது காவிரியில் நீராடி முன்னோர் கடன் செலுத்துவோம்.