அட்சய திருதியை: காலடியில் கனகதாரா யாகம் - தன்வந்திரி பீடத்தில் லட்சுமி குபேரர் மகா யாகம்
வேலூர்: அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு ஆதிசங்கரர் அவதரித்த கேரளா மாநிலம் காலடியில் நம்பூதிரிகள் நடத்திய கனகதாரா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த யாகத்தில் லட்சுமி யந்திரமும், தங்கம் மற்றும் வெள்ளி நெல்லிக்கனிகள் வைத்து 10008 கனகதாரா ஸ்தோத்திரம் ஜபிக்கப்பட்டது.
இன்று காலை கணபதி வழிபாடு, விஷ்ணு சகஸ்ர நாமத்திற்கு பின் காலை 9 மணிக்கு தங்க நெல்லிக்கனிகளால் விஷ்ணு, லட்சுமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மே9ஆம் தேதி ஆதிசங்கர ஜெயந்தியுடன் விழா நிறைவடைகிறது. அபிஷேகம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள் பிரசாதமாக கோயிலில் விற்பனை செய்யப்படுகிறது. இதனைப் பெற்று வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா அமோகம்.. அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
லட்சுமி குபேர யாகம்
அழகாபுரியாகவும், ஐஸ்வர்ய பீடமாகவும், திகழும் வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் உலக மக்களின் நலன் கருதி இன்று அக்ஷய திரிதியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹாயாகத்துடன், ஷோடஷ திரவிய அபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு 16 கலசங்கள் வைத்து தாமரை மணிகள், தாமரை புஷ்பங்கள், தேன், நெய் மற்றும் பலவிதமான விஷேச புஷ்பங்கள், திரவியங்கள் கொண்டு மாபெரும் ஸ்ரீ குபேர லஷ்மி யாகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு பால், தயிர், கரும்பு சாறு, இளநீர், பஞ்சாமிருதம், சொர்ண தீர்த்தம், புஷ்ப தீர்த்தம், சந்தனம், பன்னீர், மஞ்சள், விபூதி, அபிஷேக பொடி போன்ற 16 விதமான திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகமும் 1008 சொர்ண பைரவர் காசுகளை கொண்டு மகா அர்ச்சனையும் ஸ்ரீ குபேர யந்திர பூஜையும் நடைபெற்றது. மேற்கண்ட வைபவங்களை தொடர்ந்து மாங்கல்ய சரடு, குடை, எண்ணெய், பூ, அரிசி, வஸ்திரம், தேன், நெல்லிக்காய், விதை வித்துகள், தாம்பூலம் போன்ற பொருட்கள் தானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.