அட்சய திருதியை நாளில் ஐஸ்வர்யம் பெருக குல தெய்வத்திற்கு இந்த பரிகாரம் செய்யுங்கள்
ஐஸ்வர்யம் பெருகவும் மகிழ்ச்சியும் மனநிம்மதியும் கிடைக்கவும் அட்சய திருதியை நாளில் குடும்பத்துடன் குல தெய்வத்தை வணங்கலாம். குலதெய்வத்தின் அருள் கிடைப்பதோடு வீட்டில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும்.
சென்னை: அட்சய திரிதியை அன்று நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது பலமடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. நம்முடைய வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்க, ஐஸ்வர்யம் பெருக இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் குல தெய்வத்தை வணங்கலாம். குலதெய்வத்தின் அருள் கிடைப்பதோடு நமது மன நிம்மதியும் அதிகரிக்கும்.
அட்சய திருதியை இந்த ஆண்டு நாளை மே 14ஆம் தேதி சுக்கிரனின் அருள் நிறைந்த மகாலட்சுமியின் அருளும் ஆசியும் நிறைந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அட்சய என்றால் வளர்க என்று பொருள்படும். இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் பன் மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.
அட்சய திருதியை நாளில் அதிகாலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றி இறைவனை மனதார வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை அட்சயதிருதியை நாளில் குலதெய்வத்தை வேண்டி வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.
சிகப்பு நிற துணியில் 11 ஏலக்காய், சோம்பு 11, கிராம்பு 11 சிறிதளவு பச்சை கற்பூரம் இவை அனைத்தையும் வைத்து, குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, மொத்தமாக ஒரு பச்சைக் கலர் நூலில் கட்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு அதை உங்கள் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமியின் முன்பு வைத்து மனதார, குலதெய்வத்தை நினைத்து வேண்டிக்கொண்டு, பிரம்ம முகூர்த்த வெளியிலேயே உங்கள் வீட்டு பீரோவில் வைத்துவிடுங்கள்.
பிரம்ம முகூர்த்த வேளையில் நீங்கள் கட்டும் இந்த முடிச்சின் மூலம் மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், குலதெய்வத்தின் அனுகிரகமும் கட்டாயம் கிடைக்கும். குறிப்பாக அட்சய திருதியை நாளில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதன் மூலம் உங்களது குடும்பம் 16 வகையான செல்வங்களையும் பெற்று, சிறப்படையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்சய திருதியை தினத்தன்று யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம், நீங்களும் யாருக்கும் கடன் தர வேண்டாம். தானமாக கொடுங்கள். உங்களுக்கு புண்ணியம் அதிகரிக்கும். வீட்டில் சண்டை போடாதீர்கள். கூடுமானவரை நல்ல வார்த்தைகளையும் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் வார்த்தைகளையும் பேசுங்கள். இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு, இந்த சின்ன பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்வதன் மூலம், பெரிய பலனடையலாம்.