அழகா கள்ளழகா... மலையை விட்டு இறங்காமல் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்
கொரோனா வைரஸ் பாதிப்பினால் அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்படுவது, எதிர் சேவை, வைகை ஆற்றில் எழுந்தருள்வது, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவது, தசாவதாரம், பூப்பல்லக்கு உள்ளிட்ட அனைத்து
மதுரை: சித்திரை திருவிழா வரலாற்றில் முதன் முறையாக அழகர் மலை கள்ளழகர் மலையை விட்டு இறங்காமல் வைகையில் கால் வைக்காமல் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் மட்ம் தரப்போகிறார்.திருமாலிருஞ்சோலை எனப்படும் அழகர் மலையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மே 8ஆம் தேதி நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்படுவது, எதிர் சேவை, வைகை ஆற்றில் எழுந்தருள்வது, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவது, தசாவதாரம், பூப்பல்லக்கு உள்ளிட்ட அனைத்து மதுரை நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Recommended Video
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை தொடங்கி பங்குனி மாதம் வரை பல திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது. சித்திரை மாதத்தில்தான் மலையை விட்டு இறங்கி வரும் கள்ளழகர் எனப்படும் சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆகமவிதிப்படி கோவில் வளாகத்தில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெறுகின்றன. அழகர் கோவில் வளாகத்தில் வருகிற 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஆகமவிதிப்படி நடைபெற உள்ளது.
சித்ரா பௌர்ணமி கிரிவலம் வர திருவண்ணாமலைக்கு போகாதீங்க - வீட்டிலேயே நிலாச்சோறு சாப்பிடலாம்
தியானத்தில் இருந்த முனிவர்
அழகர் ஆற்றில் இறங்காவிட்டாலும் மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடக்கிறதே ஏன் என்று பலரும் யோசிக்கலாம் யார் இந்த மகரிஷி அவர் எப்படி மண்டூகமாக மாறினார் என்பது ஒரு புராண கதை. மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்ட மகாவிஷ்ணு இந்த உலகத்தை அளக்க தனது திருவடியை மேலே தூக்கிய போது பிரம்மன், மகாவிஷ்ணுவின் பாதத்தை கழுவி பூஜை செய்தார். அப்படி பூஜை போது மகாவிஷ்ணுவின் கால் சிலம்பு எனப்படும் நூபுரம் அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெறித்து அழகர்மலை மீது விழுந்தது. அதுவே இந்த நூபுர கங்கை தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி சுந்தரராஜ பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார்.
சாபம் கொடுத்த துர்வாசர்
அப்போது சுதபஸ் முனிவரை காண துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை கவனிக்கவில்லை. அவரை சரியாக உபசரிக்கவில்லை. இதனால் துர்வாச முனிவருக்கு கோபம் தலைக்கு ஏறியது. மரியாதை தெரியாத "மண்டூகமான நீ மண்டூகமாகவே போ என சாபமிட்டார். மண்டூகம் என்றால் தவளை என்று பொருள்.
சாப விமோசனம்
சாபம் பெற்ற சுதபஸ், கண்ணீர் விட்டார், கைகூப்பிய அவர், துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்கள் வருகையை கவனிக்கவில்லை. எனவே, எனக்கு தாங்கள் சாப விமோசனம் தந்தருள வேண்டும், என வேண்டினார். அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய் என்றார். அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றும் கூறினார்.
வைகையில் இறங்கும் கள்ளழகர்
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் ஆக கண்டாங்கி சேலை உடுத்தி தங்க பல்லாக்கில் கிளம்பி மதுரைக்கு வருவார். அவரை லட்சக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைப்பார்கள். சித்ரா பௌர்ணமி தினத்தில் தல்லாகுளத்தில் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் ஏறி வந்து ஆற்றில் இறங்குவார் கள்ளழகர். சித்ரா பெளர்ணமிக்கு மறுநாள் தோனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருவார். அழகரை தரிசிக்க அவர் கூடவே லட்சக்கணக்கான பக்தர்களும் பயணப்படுவார்கள்.
மதுரைவாசிகள் கவலை
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பினால் அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்படுவது, எதிர் சேவை, வைகை ஆற்றில் எழுந்தருள்வது, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவது, தசாவதாரம், பூப்பல்லக்கு உள்ளிட்ட அனைத்து மதுரை நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மதுரைவாசிகள் கவலையடைந்துள்ளனர். அதே நேரத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெறுகிறது.
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்
மே 8ஆம் தேதியன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை விசுவரூபம் நடைபெறும். அதன்பின்னர் கள்ளழகர் ஆண்டாள் சன்னதி முன்பாக எழுந்தருள்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு எதிர் சேவை, அலங்கார சேவை, 10 மணிக்கு தங்கக்குதிரை வாகன சேவையும், 12 மணிக்கு சைத்ரோ உபசார சேவையும் நடைபெறும். தொடர்ந்து அன்று பகல் 1.30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு, மாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் கருட சேவையும், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல் மற்றும் புராணம் வாசித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
கள்ளழகர் தரிசனம்
மாலை 6.30 மணிக்கு புஷ்ப பல்லக்கு, இரவு 8 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் இருப்பிடம் செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை பக்தர்கள் நேரில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. ஒரே நாளில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. இணையதளம், யூ டியுப் மற்றும் முகநூல் மூலம் பக்தர்கள் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே 8 மாலை 4. 30 மணி முதல் 5 மணி வரை பக்தர்கள் வீட்டில் இருந்தே நேரடி ஒளிபரப்பை பார்த்து தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளழகர் மதுரைக்கு வந்த கதை
திருமலைநாயக்கர் காலத்திற்கு முன்பு வரை கள்ளழகர் அழகர் மலையில் இருந்து இறங்கி வந்து அலங்காநல்லூர் வழியாக வைகையிர் இறங்கி தேனூர் சென்று வைகை ஆற்றில் தவமிருக்கும் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பார். பின்னர் வண்டியூரில் தங்கியிருந்து பின்னர் மீண்டும் அழகர் மலைக்கு கிளம்புவார். திருமலைநாயக்கர் காலத்திற்குப் பின்னர்தான் சித்திரை திருவிழா மதுரைக்கு மாற்றப்பட்டது. கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த ஆண்டு கள்ளழகர் மதுரைக்கு வந்து வைகை ஆற்றில் இறங்காவிட்டாலும் ஆன்லைனில் பார்த்து ரசிக்கலாம்.