திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி - இன்று ஆழ்வார் திருமஞ்சனம் - டிச.18 நள்ளிரவில் சொர்க்கவாசல் திறப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. டிசம்பர் 18ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் இன்று 6 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 18ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 19ஆம் தேதி துவாதசி விழா நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசியொட்டி முன்னதாக வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
அதன்படி வரும் 18ஆம்தேதி வைகுண்ட ஏகாதசி, 19ஆம்தேதி துவாதசி ஆகிய இரண்டு நாட்கள் பரமபத வாயில் எனும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் 11 மணி வரை இந்நிகழ்வு நடைபெறுவதால் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி நிறுத்தி வைக்கப்படுகிறது. பகல் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இன்று அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையை தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து சேவைகளும் வழக்கம்போல் நடைபெறும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிசம்பர் 18 சொர்க்கவாசல் திறப்பு
டிசம்பர் 18ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று நள்ளிரவு 12.30 மணியளவில் ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்படும். ஏகாதசி தினமான டிசம்பர் 18 மற்றும் துவாதசி தினமான டிசம்பர் 19 ஆகிய 2 நாட்களும் ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு இருக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பக்தர்களுக்கு அனுமதி
டிசம்பர் 18, நள்ளிரவு 1.30 மணி முதல் மிக முக்கிய மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்குள் சென்று ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் காலை 4 மணி முதல் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்களுக்கு வசதி
பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 18, 19 ஆகிய இரண்டு நாட்களும் திருப்பதி மலைப் பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் அமர அனுமதி அளிக்கப்படும். வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள் நிறைந்தபின், மற்ற பக்தர்கள் நாராயணகிரி பூந்தோட்டம், மாட வீதிகள் ஆகியவற்றில் அமைக்கப்படும் தற்காலிக ஷெட்டுகளில் தங்க வைக்கப்படுவார்கள் என
தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கூட்ட நெரிசல்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 17 முதல் 20 வரை மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர் ஆகியோருக்கான முன்னுரிமை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் 8,000 பேருக்கு மாதத்தில் இரு நாட்களும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு சுபாதம் பகுதி வழியாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாதந்தோறும் இரண்டு நாட்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி வந்தது. கூட்ட நெரிசலை முன்னிட்டு இந்த தரிசனத்தை ரத்து செய்து தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.