பித்ருக்களின் ஆசி நிறைந்த மஹாளய அமாவாசை - பிள்ளை வரத் தரும் அமாசோமவார விரதம்
அமாவாசையும், சோமவாரம் என்றழைக்கப்படும் திங்கட் கிழமையும் இணைந்து வரும் நாளே அமாசோமவாரம் என்கிறோம். மகாளய அமாவாசை நாளான இன்று அமாசோமவாரம் வந்துள்ளது சிறப்பு வாய்ந்தது.
சென்னை: மகாளய அமாவாசை தினமான இன்று அமாசோமவாரம் இணைந்துள்ளதால் சிறப்பு வாய்ந்தநாளாக கருதப்படுகிறது. முன்னோர்களுக்கு இன்றைய தினம் திதி தர்ப்பணம் அளிக்க சிறப்பான நாளாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குளித்து விட்டு ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மஹாளய அமாவாசை என்பது இறந்த நம் முன்னோர்கள் நம்மை காண வரும் நாள். இந்நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நமது வழக்கம். பொதுவாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, ஆகிய நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதை விட இந்த மஹாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு திதி கொடுப்பது மிக நல்லதாகும்.
நாம் எவ்வித குறைபாடின்றி நிம்மதியாகவும், சந்தோஷமாக வாழவும், இல்லறம் தழைக்கவும், நம் முன்னோர்களின்(பித்ருக்கள்) ஆசி மிக மிக முக்கியம். அவர்களுக்கு செய்ய வேண்டிய சாஸ்திர மத ரீதியிலான சம்பிரதாயங்களை புறக்கணித்துவிட்டு என்ன தான் புண்ணியம் செய்தாலும் கோவில் கோவிலாக சுற்றினாலும் பலன் தராது.
தர்ப்பணம் கொடுப்பதன் பலன்
நீங்கள் செய்யும் சிரார்த்தம் மற்றும் சடங்குகள் மூலம் தான் அவர்களுக்கு மேல் உலகத்தில் உணவும் நீரும் கிடைக்கும். நீங்கள் எந்த ஒரு சடங்கும் செய்யாமலிருந்தால் அவர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரிடும். பலர் வீடுகளில் வசதி வாய்ப்புகள் இருந்தும் சுப காரியத் தடைகள் ஏற்படும் காரணம் இதுதான்.
அமாவாசை தர்ப்பணம்
அப்படிப்பட்ட நம் இறந்த முன்னோர்களை நினைவு கூறும் நாள் தான் அமாவாசை. நாம் அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீயசொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் நாம் நல்ல நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி சொல்வதற்கும் அமாவாசை அன்று பித்ருக்களுக்கு வழிபாடு செய்கிறோம். பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு உணவு கொடுப்பது போலவும், அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுப்பது போலவும் நம்பிக்கை உள்ளது.
மஹாளய அமாவாசை
புரட்டாசி மாதத்தில் பௌர்ணமி முதல் அமாவாசை வரையிலான இந்த 15 நாட்களும் இறந்த நம் முன்னோர்கள் நம்மை காண நம் வீட்டிற்கு வருகை தருகின்றனர். இந்த நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும். தினமும் செய்ய முடியாதவர்கள் தம் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் புரட்டாசி அமாவசை அன்றாவது அன்னதானம் செய்ய வேண்டும். அதுவும் முடியாதவர்கள் பசுவுக்கு கேரட், முள்ளங்கி, அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுக்கலாம். பித்ரு பூஜைகளை மனப்பூர்வமாகவும் உள்ளன்போடும் செய்ய வேண்டும்.
முன்னோர்கள் வடிவில் காகங்கள்
அமாவாசை நாளில் நாம் உணவு சமைத்து காகங்களுக்கு படைப்பதன் மூலமும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நம் முன்னோர்கள்
காகங்களின் வடிவில் இந்த பூவுலகத்தில் வலம் வருகின்றனர். மேலும் பித்ரு பூஜைகளை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்தாலே போதும் அதனால் முன்னோர்கள் சந்தோசப்பட்டு திருப்தியுடன் ஆசி வழங்கி மகிழ்வார்கள். அன்னதானமும் தீபவழிபாடும் பித்ருக்களின் மகிழ்ச்சியையும் ஆசியையும் பெற்றுத் தரும்.
அரசமர வழிபாடு
இந்த ஆண்டு அமாவாசை திங்கட்கிழமை வருவது மிகவும் விசேசமாக சொல்லப்படுகிறது. "அமாசோமவாரம்" என்று கூறப்படும் இந்நாளில் அரசமரத்தை சுற்றி வருவது நன்மை பயக்கும். அரசமரம் பிரம்மா, சிவன், விஷ்ணு, ருத்ரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபமாக சிறப்பித்து சொல்வார்கள். அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் இந்நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் இன்னும் சிறப்பாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபமே அரச மரம். மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு.
108 சுற்றுக்கள்
அரச மரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்தி மிகுந்திருக்கும்.
எனவேதான், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்கில விருத்தி அதிகமாகி குழந்தைப் பேறுக்கு வழிவகுக்கும்.
தானம் தர வேண்டும்
சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், அவனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து 108 முறை வலம் வரவேண்டும். வலம் வரும்போது, தங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ அல்லது வேறு பொருளோ மரத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும். நூற்றியெட்டு சுற்றுகள் முடிந்ததும் அப்பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். இவ்விரதம் மேற்கொள்ளும் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியமும், கர்ப்பப்பை கோளாறும் நீங்கும்.