மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா - வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்
பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த 40 அடி தீ குண்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்
கோவை: பொள்ளாச்சி ஆணைமலை குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த 40 அடி தீ குண்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது மாசாணி அம்மன் கோயில். இந்தக் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இலங்கையில் சீதா தேவியை மீட்க சென்றபோது இங்கு வந்து மாசாணியம்மனை ராமர் வழிபட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த அம்மன் கையில் உடுக்கையுடன் சயன நிலையில் காணப்படுகிறார்.
பெண்களின் காவல் தெய்வமான மாசாணியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மனதில் நினைத்து வந்த காரியத்தை இந்த அம்மனை வணங்கிச் சென்றால், உடனே கைகூடும் என்பது நம்பிக்கை.
கோவில் மண்டபச் சுவற்றிலே ஸ்ரீராமபிரான் தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன. மகாமுனியப்பரின் தெற்குப்புறம் லிங்க வடிவத்திலான கல் ஒன்று கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது, அந்தக் கல்லின் மீது மிளகாய் அரைத்துப் பூசப்படுகிறது.
நீதிக்கல்லில் மிளகாய் பூச்சு
பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களும் சொத்துக்களையோ தமது உடைமைகளையோ பறிகொடுத்தவர்களும் திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு ஆளனவர்களும் இங்கு வந்து அம்மனின் முன்னால் நின்று தங்களுக்கு நேரிட்ட இன்னல்களை நினைத்து முறையிட்டு விட்டு கோயிலின் தென் மேற்குப் பகுதியில் போடப்பட்டுள்ள ஆட்டுக்கல்லில் மிளகாயைத் துவையலாக அரைத்தெடுத்து வந்து லிங்க வடிவில் ஆன கல் மீது பூசிவிட்டுச் செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் பரிகாரம் பெறுவதும் குற்றவாளிகள் தண்டனைக்கு ஆளாவதும் இன்றைக்கும் கூட இந்தத் தெய்வத்தின் நீதித் தன்மையை நடைமுறையில் காட்டுகிற செயல்களாக விளங்கி வருகின்றன.
மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஆண்டுதோறும் குண்டம் திருவிழா மாசி மாதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த தை அம்மாவாசை அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய பூஜையான மயான பூஜை கடந்த 14ஆம் தேதி நடந்தது. ஆனைமலை வேட்டைக்காரன்புதூர் ரோட்டில் உள்ள மாசாணியம்மன் திருமண மண்டபத்தை ஒட்டிய பகுதியில் குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. 40 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட இந்த குண்டத்தில் பூ வளர்த்து தயார் நிலையில் இருந்தது. தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார். இதனையடுத்து பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் குண்டம் திருவிழா 20ஆம் தேதி நடைபெற்றது.
குண்டம் இறங்கிய பக்தர்கள்
கோவில் அருளாளி தலைமையில் முறைதாரர்கள் உப்பாற்றங்கரையில் திரிசூலம் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் 40 அடி நீளமுள்ள குண்டத்தில் திரிசூலம் ஆபரண பெட்டியை வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவில் அருளாளி பூ பந்தை உருட்டி தீ மிதித்தார். இவரைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது உடலை வருத்தி பக்தி பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரசியல் கட்சியினர் பங்கேற்பு
ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடித்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாசாணிக்கு மகா அபிஷேகம்
மாசாணி அம்மனை நினைத்து ஒரு மாதம் விரதம் இருந்து குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்று பக்தர்கள் தெரிவித்தனர். நேற்று கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், மகா முனி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று வெள்ளிக்கிழமை மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் குண்டம் விழா நிறைவடைந்தது.