For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடீஸ்வரர்களாக மாற்றும் குபேர ஆலயங்கள் - ஆலய தரிசனம்

வளமான வாழ்வுக்காக இங்கு லட்சுமி குபேர பூஜை செய்வது விசேஷம். இந்த பூஜையை பவுர்ணமி மற்றும் அமாவாசையில் செய்வது மிகுந்த பலன் தரும்.

Google Oneindia Tamil News

சென்னை: வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்பது பழமொழி. குபேரன் இருக்கும் திசையும் வடக்குதான். கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பது அனைவருக்குமே ஆசைதான். எனவேதானே கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் போது என்னை குபேரனாக மாற்று என்று வணங்குகின்றனர். குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார்.

வற்றாத செல்வ வரம் தரும் அஷ்டதிக் பாலகர்களில், குபேரனும் ஒருவர். ஒருமுறை தன்னுடைய சகல நிதிகளையும் இழந்து கஷ்டப்பட்டபோது, அவன் ஈசனிடம் வேண்டி நின்றான். ஈசன் அவனுக்காக இரங்கி சகல செல்வ வளங்களையும் அளித்தார். அப்படி ஈசனை குபேரன் பூஜித்த, தரிசித்த கோயில்களுக்கு நாம் சென்று வரும்போது, நமக்கும் வறுமை தீர்ந்து செல்வம் பெருகுகிறது.

குபேரனின் விமானம் எங்கு பறந்து சென்றாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். குபேரனை ராவணன் இலங்கையில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்தே அவன் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது என்றும் புராண கதைகள் கூறுகின்றன.

Ancient Temple for Lord of Wealth Kubera

குபேரன் தலங்கள்

குபேரன் வறுமையில் தள்ளப்படுவதற்கும், அதிலிருந்து மீண்டு வருவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் மிகத் தீவிரமாக ஈசனை நோக்கியோ அல்லது மகாவிஷ்ணுவை நோக்கியோ தவமிருந்து பூஜிக்கப்பட்ட லிங்கங்களோ, மூர்த்தங்களோ பின்னாளில் கோயிலாக மாறியிருக்கின்றன. குபேரன் எந்த நோக்கத்திற்காக தன்னுடைய தபோ பலத்தை, தவச் சக்தியை வளர்த்தானோ அந்த சக்தியும் அதே நோக்கத்தோடேயே அங்கும் செயல்படும். நான் என்ன வேண்டிக் கொண்டேனோ அதை இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கும் கொடு என்றுதான் ஈசனிடம் கோரிக்கை வைக்கிறான். எனவே, அவனால் பூஜிக்கப்பட்ட தலங்களுக்கு சென்று வழிபட செல்வ வளம் பெருகும்.

செல்லூர்

மதுரையிலுள்ள வைகையாற்றின் வடபுறத்தில் அமைந்துள்ளது திருவாப்புடையார் கோயில். திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலாகவும் திகழ்கிறது. சகல செல்வத்திற்கும் அதிபதியாக வேண்டுமென புண்ணிய சேனன் என்பான் விரும்பினான். அகத்தியரின் பாதம் படர்ந்து எழுந்தான். திருவாப்புடையார் எனும் இத்தல ஈசனை நோக்கி தவம் புரியச் சொன்னார், அகத்தியர். அவனின் தவம் பலித்தது. ஆனால், அவனின் அகங்காரம் பெருகியது.

Ancient Temple for Lord of Wealth Kubera

கண்மண் தெரியாமல் தவறுகளை செய்தவனின் ஒரு கண்ணை ஈசன் பறித்தார். புண்ணிய சேனன் வருந்தினான். மீண்டும் தவம் செய்து தொழுதான் ஈசனும் அவனை மன்னித்து இன்றிலிருந்து உன் பெயர் குபேரன். நீயே சகல செல்வங்களுக்கும் அதிபதி என்றார். இதுவே குபேரன் உற்பவித்த தலமாகும். நாமும் குபேரன் தோன்றிய தலத்திற்குச் சென்று திருவாப்புடையாரை தரிசித்து வளம் பெறுவோம்.

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள்

குபேரன் ஒன்பது வகையான நவநிதிகளுக்கும், எண்ணிலடங்கா பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி தனது அளகாபுரியை ஆண்டான். அவன் சிறந்த சிவபக்தனாக இருந்தான். ஆனாலும் தான் செல்வப் பெருவேந்தன் என்று கர்வத்தோடு அலைந்தான். கயிலாயத்திற்கு வந்தான். ஈசன் உமையோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததை கண்டான். சித்த விகாரத்தால் உலகாளும் அன்னையென்று பாராமல் அழகை ரசித்தான். சட்டென்று சுதாரிப்பதற்குள் ஈசனுன், உமையும் அவன் மனதறிந்தனர். இவனும் வெட்கித் தலைவணங்கினான்.

ஆனாலும், அவன் கர்வத்தை அழித்து, சித்தத்தில் சுத்தமுண்டாக்க உமையன்னை சினம் கொண்டாள். 'உன் உருவம் விகாரமடைந்து, உன்னிடமுள்ள நவநிதிகளும் உன்னைவிட்டகல வேண்டும்' என்று சபித்தாள். குபேரனை விட்டு நவநிதிகளும் அகன்றன. அவனை விட்டகன்ற நிதிகள் தன்னை வைத்துக்கொள்வார் யாருமின்றி பெருமாளை வேண்டி பொருநை நதி நீராடி, பிரார்த்தித்தன. திருமால் நவநிதிகளையும் தன் அருகே வைத்து பாதுகாப்பளித்து அதன் மீது சயனம் கொண்டார். அதனாலேயே அவருக்கு வைத்தமாநிதிப் பெருமாள் எனும் திருநாமம் உண்டாயிற்று.

Ancient Temple for Lord of Wealth Kubera

வேறொரு புறம் குபேரன் தன் தவறுணர்ந்து பரமசிவனின் பாதத்தில் வீழ்ந்தான். பார்வதியிடம் மன்னிப்பு கோரினான். 'நான் உன்னை சபித்தவாறே உன் மேனியின் விகாரம் மறையாது. ஒரு கண்ணும் தெரியாது. ஆனால், நீ இழந்த பெருஞ் செல்வங்களின் சாரமான நவநிதிகளும் தாமிரபரணிநதியின் தென்கரையில் அமைந்துள்ள தர்மபிசுன க்ஷேத்ரத்திலுள்ள (இன்றைய திருக்கோளூர்) திருமாலிடம் தஞ்சமடைந்துள்ளன,' என்றார்.

திருக்கோளூர் வந்தவன் பெருமாளைக் குறித்து பெருந்தவம் புரிந்து மன்றாடினான். திருமால் மனமிரங்கி குபேரனை மன்னித்து நவநிதிகளைத் தந்தருளினார். இன்றும் வறுமையில் வாழ்பவர்களும், செல்வம் இழந்தவர்களும், இன்னும் செல்வங்கள் பெருகவும் வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி சகல சம்பந்துமிக்க வாழ்க்கையைப் பெறுகின்றனர். இங்கு தீர்த்தமே குபேர தீர்த்தம்தான். நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் இதுவொன்றாகும். இத்தலம் நெல்லைக்கு அருகே உள்ளது.

திருவண்ணாமலை குபேர லிங்கம்

அருணாசல மலையை கிரிவலமாக வரும்போது குபேர லிங்கத்தை தரிசிக்கலாம். இங்கு இது ஏழாவது லிங்கமாக விளங்குகிறது. இது குபேரனால் வழிபடப்பட்ட லிங்கமாகும். எனவே, பொருளாதாரத்தில் குன்றி இருப்போர் இந்த லிங்கத்தை வழிபட செல்வ வளம் பெருகும்.

Ancient Temple for Lord of Wealth Kubera

திருச்சி - திருவானைக்காவல்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலின் கிழக்கு கோபுர வாயிலில் நுழைந்ததும் எதிரே குபேர லிங்க கோயிலை காணலாம். இந்த லிங்கம் மகாலட்சுமியிடமிருந்து குபேரன் தவமிருந்து பெற்றதாக புராணங்கள் பகர்கின்றன. தன்னிடமிருக்கும் சங்கநிதி, பதுமநிதிகள் நீங்காதிருக்க ஈசனை நோக்கி குபேரன் தவமியற்றினான்.

ஈசனோ, உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருப்பது என்பது மகாலட்சுமியின் அருளால்தான் உள்ளது என்று சொல்லி மறைந்தார். குபேரன் மகாலட்சுமியை நோக்கி தவமியற்றி திருமகளின் திருக்கரத்தால் சுயம்பு லிங்கத்தை பெற்று இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இன்றும் குபேர லிங்கத்தினை சுக்கிர ஹோரையில், அர்ச்சித்து வெண் பட்டாடை சமர்பித்து வழிபட வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

தஞ்சாவூர்

எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் குபேரன் இலங்கையில் ஆட்சி புரிந்துகொண்டிருந்தான். ராவணனால் தன் நாடு, நகரம், புஷ்பக விமானம் எல்லாம் இழந்து வடதிசை நோக்கி வந்து, சசிவனம் என்னும் வன்னிக்காட்டுப் பகுதிக்கு வந்தான். சுயம்புவாக தோன்றிய அமலேஸ்வரர் என்ற பெயருடன் திகழ்ந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கி, தொண்டு செய்து வந்தான். அவன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், குபேரனுக்கு உமாதேவியுடன் மேற்கு நோக்கி காட்சி தந்தார். சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளும் தந்து அருள்புரிந்தார். இதனால் இந்த தலம் ஸித்தி தரும் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

Ancient Temple for Lord of Wealth Kubera

ஈசனிடமிருந்து வரங்கள் பெற்ற குபேரன், தன் சக்தி வலிமையால் அழகாபுரி என்ற நகரை உருவாக்கினான். இந்த தலத்தில் வழிபடும் அனைவருக்கும் வேண்டும் வரங்கள் தந்து அருளுமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டான். இக்கோயிலில் குபேரன், குபேர மகாலட்சுமி ஆகியோர் தனிச் சந்நதியில் அருளுகின்றனர். தீபாவளியன்று நடைபெறும் மஹா குபேர ஹோமம் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து குழுமுகிறார்கள். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தஞ்சபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

செட்டிகுளம்

செட்டிகுளம், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடம்ப மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்தது. சோழனும், பாண்டியனும் சேர்ந்து கட்டிய திருக்கோயிலாகும். இறைவன் ஏகாம்பரேஸ்வரர் எனவும், இறைவி காமாட்சி அம்மை என்கிற திருப்பெயரோடும் அருள்பாலிக்கின்றனர். சுமார் 800 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. பொதுவாக ஆலயங்களில் குபேரனின் உருவம் சிற்பமாகவோ, சுதை வடிவிலோ, கல் திருமேனியாகவோ காணப்படுவது வழக்கம்.

ஆனால் இங்கே, கல் தூண்கள், தேவகோட்டம், கோபுர முகப்பு என மொத்தம் 12 இடங்களில் குபேரன் சிற்ப வடிவில் காட்சி தருகிறார். அதாவது மேஷம் முதலான 12 ராசிகளுக்கும் இந்த குபேரர்கள் அருள் வழங்குகிறார்கள். ஒவ்வொரு ராசிக்காரரும், அந்தந்த ராசி குபேரனை வணங்கி, தம் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு பெறுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் குறிப்பிட்ட குபேரனுக்கு 'குபேர ஹோமம்' நடத்துகின்றனர். இந்த 12 குபேரர்கள் தவிர, மகா குபேரனின் சிற்பமொன்றும் ஆலய கோபுரத்தின் உட்புறம் வடக்குத் திசையில் உள்ளது. திருச்சி, துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கீவளூர்

சந்திரகுப்தன் எனும் வைசியன் தன்னிடமிருந்த சகல செல்வங்களையும் இழந்தான். மனம் நொந்து திசை தேசம் தெரியாது ஈசனருளால் அவர் கேடிலியப்பர் எனும் திருப்பெயரோடு அருளும் கீவளூர் தலத்தை அடைந்தான். திருக்கோயிலுக்குள் புகுந்து நந்தியெம்பெருமானின் காலடியில் வீழ்ந்தான். கோயிலை மும்முறை வலம் வந்தான். ஈசன் கருணைக் கண்களால் அவனைக் கண்டார். இத்தலத்திலேயே நித்திய வாசம் புரியும் குபேரனுக்கு, வைசியனை அடையாளம் காட்டினார். சந்திரகுப்தன் இத்தலத்தில் தனிச் சந்நதியில் அருளும் குபேரனை வணங்கி பெருஞ் செல்வம் பெற்றான். இத்தலம் நாகப்பட்டிணம் - திருவாரூர் பாதையில் அமைந்துள்ளது.

Ancient Temple for Lord of Wealth Kubera

கல்லிடைக்குறிச்சி

இக்கோயிலின் கருவறையில் வராஹரின் வலப்புறத்தே பூமா தேவியார் அமர்ந்திருக்கும் கோலம் காணக் கிடைக்காதது. பேரழகானது. இத்தல பெருமாள் இங்கு எழுந்தருளும்போதே குபேரன் முதன் முதலாக வந்து கைகூப்பி தொழுதான். விஷ்ணு தர்மன் என்னும் அரசன் அந்த ராஜ்யத்தை பரிபாலித்தான். குபேரன் அந்த அரசனைக் கூப்பிட்டு இந்த புண்ணிய தலத்தில் யாகசொரூபியான வராஹருக்கு ஓர் கோயில் கட்ட வேண்டும் என்று பணித்தார்.

மேலும், இப்பெருமாளை தரிசிப்போர்களுக்கு எக்காலத்தும் வற்றாத செல்வம் அருளுமாறு பக்தர்களின் பொருட்டு தான் எம்பெருமானிடம் கேட்டுக் கொள்வதாய் கைப்பிடித்து உறுதியும் அளித்தார். உடனே, குபேரன் முன் நிற்க, அந்த அரசன் ஏராளமான பொருட் செலவில் கோயில் அமைத்தான். குபேரன் அந்த மன்னனுக்கு சொன்ன சொல், அந்த வார்த்தை இன்றுவரை பிசகாது நிறைவேறுகிறது. இவ்வூரில் உள்ளோரும், இப்பெருமாளை தரிசிப்போரும் சகல செல்வச் செழிப்போடு திகழ்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருத்தேவூர்

ராவணன் குபேரனோடு போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்கிற நிதிக் கலசங்களை எடுத்துச் சென்றான். இதை வைத்துக் கொண்டிருந்தால்தான் அவனே குபேரன் ஆவான். இதனால் குபேரன் தன்னுடைய குபேர ஸ்தானத்தை இழந்தான். இத்தலத்தில் அருளும் தேவபுரீஸ்வரரை குபேரன் செந்தாமரை புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டான். ஈசனின் அருளால் ராவணனிடமிருந்து குபேர கலசங்களை திரும்ப பெற்று மீண்டும் குபேர பட்டத்தை பெற்றான். பெரும் பணக்காரர்களாக இருந்து மீண்டும் வறுமையில் தள்ளப்பட்டோர்கள் இத்தல நாயகரான தேவபுரீஸ்வரரையும், அம்மையான மதுரபாஷினியையும் வழிபட, செல்வச் செழிப்போடு வாழ்வர் என்பது உறுதி. திருவாரூர் - நாகப்பட்டிணம் சாலையிலுள்ள கீவளூர் எனும் தலத்திற்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.

சிவபுரம்

இத்தலத்தின் பூமிக்கடியில் சிவபெருமான் இருப்பதாக ஐதீகம். எனவேதான் திருஞானசம்பந்தர் இத்தலத்தை அங்கப் பிரதட்சணமாக சுற்றிச் சென்றார். தள்ளி நின்று பெருமானைப் பாடினார். அவர் அவ்வாறு பாடிய இடமே 'சுவாமிகள் துறை' என்றழைக்கப்படுகிறது. ஆதிசங்கரின் பெற்றோரான சிவகுருநாதரும், ஆர்யாம்பாளும் இங்கு வாழ்ந்ததாக கூறுவர்.

குபேரன் இத்தலத்திற்கு வந்து வெகுநாட்கள் தங்கியிருந்து வழிபட்டுச் சென்றான். குபேரன் வழிபட்டு பேறு பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. தளபதி எனும் பெயரை உடையவனுக்கு இத்தல ஈசன் குபேர ஸ்தானத்தை அளித்தார். குபேரபுரம் என்றே இத்தலத்திற்கு வேறொரு பெயர் உண்டு. கும்பகோணம் - திருவாரூர் பாதையிலுளள் சாக்கோட்டையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

விருத்தாசலம்

பெரியநாயகி உடனுறை விருத்தகிரீஸ்வரர் எனும் பெருந்தலத்தில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. அதில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தத்திற்கு பெயராகும். விருத்தகிரீஸ்வரரை குபேரன் வழிபட்டு பெரும்பேறு பெற்றான். அவனின் திருப்பெயரிலேயே தீர்த்தமும் அமைந்துள்ளது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

வாலாஜாபேட்டை குபேர தலம்

வாலாஜாபேட்டை அருகே கீழ்ப்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் லட்சுமி குபேரருக்கு ஆலயம் அமைந்துள்ளது. இதே போல ரத்னமங்கலத்தில் குபேர ஆலயம் அமைந்துள்ளது. வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். மகிழ்ச்சியாக இருங்கள் மகாலட்சுமி அருள் தினமும் கிடைக்கும்.

English summary
The only ancient temple for the Lord of wealth Kubera can found in banks of the holy Tamaraparani river in the Tirunelveli district of TamilNadu.Rajalakshmi Kubera Trust has constructed a temple for Lord Kubera at Ratnamangalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X