ஐப்பசி அன்னாபிஷேகம்: உணவை வீணாக்காதீர்கள்... அன்னதோஷம் வரும்
அன்னதோஷத்தாலும் அன்ன துவேஷத்தலும் பாதிக்கப்பட்டவர்கள் ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேக கோலத்தில் சிவ தரிசனம் செய்வது நல்லது. இதனால் அன்னதோஷம் நீங்குவதோடு உணவின் மீது வெறுப்படைய செய்யும் நோயான அன்னது
சென்னை: அன்னதோஷம், அன்ன துவேஷத்தினால் பாதிக்கப்பட்டு சாப்பிட உணவு இல்லாமல் சிரமப்படுபவர்கள் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானை தரிசனம் செய்வது நன்மை ஏற்படும்.
அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம்தங்காது. உணவு இருந்தாலும் ஒரு வாய் கூட ஒழுங்காக சாப்பிட முடியாது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும். இதற்கு அன்னபூரணி விரதம் இருந்து பசியென்று வருவோர்க்கு சாப்பாடு தரவேண்டும்.
ஜோதிடத்தில் அன்னம் எனப்படும் உணவிற்கான காரக கிரகம் சந்திரன். அன்னை எனப்படும் மாத்ரு காரகனும் சந்திரனேதான். நமக்கெல்லாம் படியளக்கும் அன்னப்பூரனியான பார்வதியை வணங்க காரக கிரகமும் சந்திரனே.
யாருக்கு அன்னதோஷம்
பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் சாப்பிட எதுவும் கொடுக்காதவர்களையும். வயதானவர்களையும், கர்ப்பிணிகளையும் சாப்பிட விடாமல் தடுப்பவர்களையும் அன்னதோஷம் பீடிக்கும். பந்தியில் சாப்பிட உட்கார்ந்தவர்களை எழுப்புவதும் பாபமாகும்.
தான் உண்டது போக ஏராளமான உணவு கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களையும், உணவுகளை வீணாக்குபவர்களையும் அன்னதோஷம் பாதிக்கும். பெற்றவர்களுக்கு உணவு கொடுக்காதவர்களையும், பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களை அன்னதோஷம் பீடிக்கும்.
உணவை வீணாக்காதீர்கள்
அடிப்படை உணவின் காரகர் சந்திரன். சுவையான உணவுக்கு காரகர் சுக்கிரன். உணவினை குறிக்கும் போஜன ஸ்தானம் எனப்படுவது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபம் மற்றும் ஜாதக இரண்டாம் பாவமாகும். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் அடைகிறார். இது சுக்கிரனின் ஆட்சி வீடாகும். ரிஷபத்திலும் உணவை குறிக்கும் சந்திரனின் ஆட்சிவீடான கடகத்திலும் அசுப கிரகங்கள் நிற்க அஞ்சாமல் உணவுப்பொருட்களை வீணடிப்பார் இதனால் அன்னதோஷம் ஏற்படும். எந்த ராசி நேயர்களாக இருந்தாலும் சந்திராஷ்டம தினங்களில் சாப்பிடாமல் வீணடிப்பார். இதனாலும் அன்னதோஷம் ஏற்படும் எனவே உணவை வீணாக்காதீர்கள்.
அன்னாபிஷேக தரிசனம்
அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்க்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி (பச்சரிசி) வாங்கி கோயிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்துபேருக்கு அன்னதானம் செய்யலாம்.
ஸ்ரீ அன்னபூரனியை வணங்கிவர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுபாடின்றி கிடைக்கும்.
ஸ்ரீரங்கநாதர் தரிசனம்
சுக்கிரனின் அதிதேவதை மற்றும் சந்திர சகோதரியான தான்யலக்ஷமியை வணங்கிவர உணவு வீணவது குறையும். அவரவர்கள் கிராம தேவதைக்கு பொங்கல் வைத்து வழிபட உணவு வீணாவது குறையும். ஸ்ரீரங்கநாதரை வணங்கிவர உணவு வீணாவது குறையும். முன்னோர்களின் திதி நாட்களில் பிராமணர்களுக்கு தானம் அளிப்பது அன்ன தோஷத்தோடு பித்ரு தோஷத்தையும் போக்கும்.
ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்
ஐப்பசி 24ஆம் தேதி பவுர்ணமி தினமாகும். இந்த நாளில் அனைத்து சிவ ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடக்கிறது. தஞ்சாவூர் பெரியகோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் டன் சாதத்தால் அலங்கரித்து அந்த உணவை பிரசாதமாக கொடுப்பார்கள். தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகமும் ஒன்று. இந்த நாளில் சிவபெருமானை தரிசிக்க அன்னாபிஷேகமும், அன்னதுவேஷமும் நீங்கும்.