அந்தியூர் பத்ரகாளியம்மன் ஊஞ்சல் ஆடியதாக பரபரப்பு.. சிசிடிவி வீடியோ
ஈரோடு: அந்தியூரில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில், இரவு நேரத்தில் கோவிலில் இருக்கும் ஊஞ்சல் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். இத்தகவல் காட்டுத் தீ போல் பரவியதால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர்.
கடவுள் இல்லை, கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் சுத்த மடத்தனம், அதெல்லாம் சோம்பேறிகள் சொல்லும் கட்டுக்கதைகள், இதெல்லாம் அறிவியில் பூர்வமாக நடப்பவை என்று நாத்திகவாதிகள் அரற்றிக்கொண்டிருந்தாலும், நமக்கும் மேலே ஒரு சக்தி உண்டு, அது தான் இந்த உலகத்தையும், ஜீவராசிகள் அனைத்தையும் ஆட்டுவிக்கின்றது என்பதை உணர்த்த, ஏதாவது ஒரு ரூபத்தில் அல்லது ஏதாவது ஒரு அசாத்தியமான செயலை நிகழ்த்தி தான் யார் என்பதை கடவுள் வெளிப்படுத்துவதுண்டு. அதை உணர்த்துவது போல் கடந்த டிசம்பர் 10ஆம் தேதியன்று ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூரில் உள்ளது புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில். இக்கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி, கடந்த டிசம்பர் 10ஆம் தேதியன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். பின்பு இரவு பூஜைக்கு பின்பு கோவில் நடை சாத்தப்பட்டது. இக்கோவிலில் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமாராவும் பொருத்தப்பட்டுள்ளது.
மறுநாள் காலையில், அதாவது கடந்த டிசம்பர் 11ஆம் தேதியன்று அதிகாலையில் கோவிலை திறந்த கோவிலின் செயல் அதிகாரியான சரவணனும் கோவில் ஊழியர்களும், அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வழக்கமாக ஆய்வு செய்தனர். அப்போது அதில் பதிவான காட்சிகளை பார்த்து ஆச்சர்யமடைந்தனர்.
அந்த காட்சியில், கருவறையின் முன்பு தொங்கவிடப்பட்டுள்ள திரைச்சீலையின் பின்னால் இருக்கும் ஊஞ்சல் ஆடியது போன்று ஒரு பிரகாசமான ஒளி வெள்ளம் தெரிந்ததால் பரவசமடைந்தனர். ஒருவேளை திரைச்சீலை தீப்பற்றி எரியும் காட்சியாக இருக்குமோ என்ற நினைப்பில் மீண்டும் மீண்டும் அந்த காட்சியை ரீப்ளே செய்து போட்டு பார்த்தனர்.
சிசிடிவி கேமராவில் பதிவான முழு வீடியோ காட்சிகளையும் தீவிரமாக ஆராய்ந்து பார்த்த போது, இரவு 8.30 மணியளவில் ஒரு பெண் உருவம் பத்ரகாளியம்மனின் கருவறைக்குள் நுழைவதும், அதனையடுத்து, அந்த பெண் உருவம் திரைச்சீலையைத் தொடுவதுமாக இருந்தது. பின்னர் இரவு 10.45 மணியளவில் அந்த பெண் உருவம் மெல்ல மறைந்து விட்டது. சுமார் 2.15 மணி நேரம் வரை நிகழ்ந்த இந்த காட்சிகளை செயல் அதிகாரி சரவணனும் மற்ற ஊழியர்களும் ஆச்சரியத்துடனும் பயபக்தியுடனும் பார்த்துவிட்டு வீடு திரும்பினர்.
மறுநாள் காலையில் கோவில் நடையை திறந்து பார்த்து கருவறை கேமராவை முழுவதும் ஆராய்ந்தனர். அதில் ஏதாவது பூச்சியோ அல்லது சிலந்தி வலையோ உள்ளதா என்று பார்த்த போது. அப்படி எதுவும் இல்லை எனத் தெரிந்தது. இதனால் இரவு நேரத்தில் ஊஞ்சலில் ஆடியது சாட்சாத் அந்த பத்ரகாளி அம்மன் தான் என்று உறுதிப்படுத்தினார்கள்.
இந்த செய்த காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது. சமூக வலைதளங்களிலும் அந்த வீடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பத்ரகாளி அம்மன் கோவில் முன் திரண்டனர். பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அதன் பிறகு, அதே போன்று மீண்டும் எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பதையும் கோவில் அதிகாரிகளும் ஊழியர்களும் உறுதிப்படுத்தினர்.