வடகிழக்கு பருவமழை காலத்தில் எத்தனை புயல்கள் தாக்கும் - பஞ்சாங்கம் கணிப்பு
வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் கஜா கரையைக் கடக்கப் போகிறது. இந்த புயல் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும், இன்னும் எத்தனை புயல்கள் கரையை கடக்க காத்திருக்கின்றன என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
சென்னை: கஜா புயல் கரையைக் கடக்கப் போகிறது. புயலின் வேகம் தீவிரமடைந்துள்ளதால் மழையும் பல இடங்களில் கொட்டித்தீர்க்கிறது. புயல் மழைக்குப் பின் நோய்களின் தாக்கமும் ஏற்படும். இந்த ஆண்டு எத்தனை புயல் கரையை கடக்கும் எத்தனை புயல் பலவீனமடையும் என்று விளம்பி ஆண்டின் பஞ்சாங்கம் கணித்துள்ளது. அதேபோல டெங்கு பாதிப்பும் தீவிரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சந்திரகிரகணம் வாயு மண்டலம் மற்றும் குபேர மண்டலம் வருவதால் எங்கும் சூறாவளியுடன் கூடிய நல்ல மழை பெய்யும் என்று விளம்பி ஆண்டு பஞ்சாங்கத்தில் நவ நாயகர்களின் ஆதிபத்திய பலனில் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 9 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உற்பத்தியாகி 5 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலவீனம் அடையும். 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.
எங்கெங்கு பாதிப்பு
இந்த ஆண்டு புயலினால் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், நெல்லூர், விசாகப்பட்டினம், விஜயவாடா, ஒரிஸா, அந்தமான், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம். மாலை மற்றும் இரவில் அதிக மழை பொழியும்.
சனி செவ்வாய் தொடர்பு
பூமி காரகன் செவ்வாய் இந்த ஆண்டு சனியுடன் தொடர்பு பெற்று இருப்பதால் அனைத்து இடங்களிலும் நல்ல மழை பெய்யும். ஆடி முதல் கார்த்திகை வரை நல்ல மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பெருக்கெடுக்கும்
தமிழகம் முழுவதும் முக்கிய ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கும். எங்கும் தண்ணீர் பிரச்சினை தீரும். இந்தியாவின் மைய கடல் பகுதியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு அதனால் பெரிய புயல் உற்பத்தியாகி தமிழகம், கேரளா, கர்நாடாகவில் வெள்ளம் ஏற்படும். சென்னையை புயல் பலமாக தாக்கும் என்று கணித்துள்ளது.
டெங்கு நோய் பாதிப்பு
கொசுக்களினால் புதிய நோய்கள் ஏற்படும். டெங்கு பாதிப்பு கடுமையாக இருக்கும். அரசியல் கட்சி தலைவர்கள் சிலருக்கு கெண்டாதி கெண்டம் ஏற்பட்டு உயிர் பிரிய நேரிடும். இந்த ஆண்டு மக்களிடையே பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.