திருவாதிரை திருவிழா : உத்தரகோசமங்கையில் சந்தனம் களையப்பட்ட நடராஜர் தரிசனம் நாளை பார்க்கலாம்
ராமநாதபுரம்: ஆருத்ரா தரிசன நிகழ்வை ஒட்டி புகழ்பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில், பச்சை மரகத கல்லால் ஆன நடராஜருக்கு பூசப்பட்டிருந்த சந்தனக் காப்பு நாளை களையப்படுகிறது. நாளை காலை 9 மணிக்கு 18 வகையான மகா அபிஷேகம் நடைபெறும். அன்று முழுவதும் பக்தர்கள் பச்சை மரகத நடராஜரை தரிசிக்கலாம்.
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை என்றாலே, அது ஆருத்ரா தரிசன நிகழ்வு தான். இந்தியாவிலும் மற்ற வெளிநாடுகளிலும் ஆருத்ரா தரிசன நிகழ்வு கொண்டாடப்பட்டாலும், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் தான் சிறப்பு வாய்ந்ததும், உலகப்புகழ் பெற்றதும் ஆகும்.
மற்ற சிவாலயங்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவை விட இங்கு நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா அதிமுக்கியத்துவம் பெற காரணம், இக்கோவிலில் இருக்கும் பச்சை மரகத நடராஜர் சிலை தான். பச்சை மரகத கல்லில் 6 அடியில், ஒரு காலை படமெடுத்து ஆடும் நாகத்தின் தலை மேல் வைத்தபடியம், ஒற்றைக் காலை தூக்கி நடனமாடும் கோலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிலை தான் நடராஜர் உலகில் உருவான முதல் நடராஜர் சிலையாகும்.
நடராஜர் சிலையானது முழுவதும் மரகத கல்லால் ஆனதால், எந்நேரமும் அக்கல்லில் இருந்து வெப்பம் வெளியேறிக்கொண்டிருக்கும் என்பதாலும், சிறு சத்தம் கேட்டாலும் மரகத சிலைக்கு சேதாரம் ஏற்படும் என்ற காரணத்தினாலும், ஆண்டு முழுவதும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனக் காப்பு பூசப்பட்டிருக்கும். ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும், அதாவது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசன நாளன்று மட்டுமே, நடராஜர் மேல் பூசப்பட்டிருக்கும் சந்தனக் காப்பு களையப்படும். அன்றைக்கு மட்டுமே பக்தர்கள் மரகத நடராஜரை கண்குளிர தரிசிக்க முடியும்.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வரும் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில், பச்சை மரகத நடராஜர் சிலையின் மீது சாற்றப்பட்டுள்ள சந்தனக் காப்பு நாளை களையப்படுகிறது.
ஆருத்ரா தரிசன விழா ஏற்பாடு குறித்து தெரிவித்த கோவிலின் நிர்வாக செயலர் பழனிவேல் பாண்டியன், ஆருத்ரா தரிசன விழா ஜனவரி 10ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, நாளை காலை 8 மணிக்கு பச்சை மரகத நடராஜர் திருமேனி மீது பூசப்பட்டிருக்கும் சந்தனக் காப்பு நாளை களையப்படும். பின்பு காலை 9 மணிக்கு 18 வகையான மகா அபிஷேகம் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு கூத்தர் பெருமான் கல்தேர் மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு மேல் மரகத நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறும். நாளை முழுவதும் பக்தர்கள் பச்சை மரகத நடராஜரை கண்குளிர தரிசிக்கலாம்.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஜனவரி 10ஆம் தேதியன்று அதிகாலை ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து பச்சை மரகத நடராஜருக்கு புதிய சந்தனக் காப்பு இடப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவிலான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடராஜரை பக்தர்கள் சிரமமின்றி நடராஜரை தரிசனம் செய்வதற்கு வசதியாக, இலவச தரிசனம், 10 ரூபாய், 20 ரூபாய் என சிறப்பு தரிசன வரிசையும், கூடுதலாக விஐபி தரிசனத்திற்காக 250 ரூபாய் கட்டண வரிசையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விஐபி தரிசனத்திற்கு பிரசாதப் பை மற்றும் நடராஜருக்கு சாத்தப்பட்டிருந்த சந்தனமும் வழங்கப்படுகிறது. மேலும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதியன்று காலை முதல் இரவு வரையிலும் அன்னதானமும் வழங்கப்படுகிறது, என்று கூறினார்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நாளை மாலை 6 மணி முதல் ஜனவரி 10ஆம் தேதி காலை 6 மணி வரையிலும் பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக மதுரையில் இருந்தும், ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.