சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 1ல் கொடியேற்றம்
சிவபெருமான் நடனமாடி சிறப்பித்த சபைகள் ஐந்து. பொற்சபை, ரத்தின சபை, சித்திரசபை, வெள்ளி சபை, தாமிர சபை. இவற்றில் சிவபெருமான் ஆனந்த தாண்டவமாடிய சபை தான் பொன்னம்பலம் என்றும், தில்லை என்றும் அழைக்கப்படும்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கோவில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர் கொடியேற்றுகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 9ஆம் தேதியன்று நடைபெறும். ஜனவரி 10ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு திருவாபரண அலங்காரமும், பிற்பகல் 2 மணிக்கு ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.
சிவபெருமான் தன்னுடைய லீலைகளை நிகழ்த்தி, பக்தர்களை ஆட்கொண்ட பஞ்சபூத தலங்கள் காஞ்சிபுரம், திருவானைக்காவல்,. திருவண்ணாமலை, காளஹஸ்தி மற்றும் தில்லையம்பலம் எனப்படும் சிதம்பரம். இவற்றில் சிதம்பரம் ஆகாயதலமாக விளங்குவதோடு, பஞ்சசபைகளில் ஒன்றாகவும் உள்ளது. இக்கோவில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
சிவபெருமான் நடனமாடி சிறப்பித்த சபைகள் ஐந்து. பொற்சபை, ரத்தின சபை, சித்திரசபை, வெள்ளி சபை, தாமிர சபை. இவற்றில் சிவபெருமான் ஆனந்த தாண்டவமாடிய சபை தான் பொன்னம்பலம் என்றும், தில்லை என்றும் அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில்.
சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவமாடும் கோலத்தில் உள்ள பொற்சபை ஆகும். இங்கு இவருக்கு தான் தினசரி பூஜைகள் நடைபெறுகிறது. ஆனந்த தாண்டவத்தில் இருக்கும் மூலவர் நடராஜரே, ஆண்டுக்கு இருமுறை உற்சவராக மாறி பக்தர்களுக்கு உலா வந்து காட்சி கொடுப்பார்.
ஆனி மாதத்தில் நடக்கும் திருமஞ்சன விழாவிலும், மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவிலும் மூலவரான நடராஜர் உற்சவராக மாறி வெளியில் வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இது வேறு எந்த கோவிலிலும் காண முடியாத அற்புத காட்சியாகும்.
இந்த ஆண்டு, ஆருத்ரா தரிசன விழா வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, உற்சவ ஆச்சாரியார் சிதம்பரசபாபதி தீட்சிதர் கோவிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றுகிறார்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து, ஜனவரி 2ஆம் தேதியன்று நடராஜர் வெள்ளி சந்திரபிரமை வாகனத்திலும், 3ஆம் தேதியன்று தங்க சூர்ய பிரபை வாகனத்திலும், ஜனவரி 4ஆம் தேதியன்று வெள்ளி பூத வாகனத்திலும் எழுந்தருளி திருவீதியுலா வைபவம் நடைபெற உள்ளது.
பின்னர், ஜனவரி 5ஆம் தேதியன்று வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஜனவரி 6ஆம் தேதியன்று வெள்ளி யானை வாகனத்திலும், 7ஆம் தேதியன்று தங்க கைலாச வாகனத்திலும், 8ஆம் தேதியன்று பிச்சாண்டவர் கோலத்தில் தங்க ரதத்திலும் நடராஜர் திருவீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 9ஆம் தேதியன்று நடைபெறும்.
ஆருத்ரா தரிசன விழாவின் இறுதி நிகழ்வாக, ஜனவரி 10ஆம் தேதியன்று அதிகாலை 3 மணிக்கு ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கு மகா அபிஷேகமும், காலை 10 மணியளவில் திருவாபரண அலங்காரமும், பிற்பகல் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.
11ஆம் தேதியன்று பஞ்சமூர்த்திகளின் முத்துப்பல்லக்கில் திருவீதியுலா வைபவம் நடைபெறும்.