சிவகாசியில் திருவாதிரை தேரோட்டம் - ஆருத்ரா தரிசனம் கண்ட பக்தர்கள்
சிவகாசி : மார்கழி திருவாதிரை திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை சிறப்பு அபிஷேகத்திற்குப் பின்னர் நடராஜர் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தாயில்பட்டியை அடுத்த தா.ராமலிங்கபுரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பவனி வந்து அருள்பாலித்தார்.
மார்கழி மாத முக்கிய விழாவான திருவாதிரைத் திருவிழா சிவகாசியில் இன்று நடைபெற்றது. சிவன் கோவில் வீதிகளில் கரும்பு கட்டுகள் மற்றும் பனங்கிழங்குகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. திருவாதிரைத் திருவிழாவையொட்டி இன்று காலை சிவன் கோவில், முருகன்கோவில் மற்றும் கடைக்கோவிலிலிருந்து உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவாதிரைத் திருவிழாவையொட்டி சிவகாசியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் சாமிதரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் தைப்பொங்கலுக்கு மட்டுமே விற்பனைக்கு வரும் கரும்புகள் இன்று சிவகாசியில் ரத வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளன. திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை சிறப்பு அபிஷேகத்திற்குப் பின்னர் நடராஜர் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகாசி தேரோட்டம்
திருவாதிரை விழாவினை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. தொடந்து ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயிலிருந்து நடராஜா்-சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகா் மஞ்சள் வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்தனா்.
மூன்று தேர்கள்
பத்திரகாளியம்மன் மற்றும் மாரியம்மன் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்தனா். மூன்று தோ்களும் தெற்கு ரதவீதியில் ஒரே கோட்டில் நின்று பக்கா்களுக்கு காட்சியளித்தனா். திருவாதிரைத் திருவிழாவையொட்டி சிவகாசியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் சாமிதரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் தைப்பொங்கலுக்கு மட்டுமே விற்பனைக்கு வரும் கரும்புகள் இன்று சிவகாசியில் ரத வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளன.
திருவாதிரை விழா
சிவகாசியை அடுத்த தாயில்பட்டி ராமலிங்கபுரத்தில் சௌடாம்பிகை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா திருவெம்பானை நோன்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் எழுந்து பஜனைகள் பாடி அம்மனை வழிபட்டு ஏராளமான கன்னிப்பெண்கள் நோன்பு இருக்கின்றனர்.
அலங்கார சப்பரம்
திருவாதிரை திருவிழா தினமான இன்று சௌடாம்பிகை உற்சவ அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வலம் வந்தார். அப்போது கிராம பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் உடைத்து சிறப்பு செய்தனர். காலையில் தொடங்கிய சப்பர பவனி பிற்பகல் வரை நீடித்தது.
திருவாதிரை களி
சப்பர பவனி முடிந்த உடன் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. தீர்த்தம் தெளிக்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. திருவாதிரை களி பிரசாதமும், லெமன்சாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.