சினிமா மற்றும் கலைத்துறையில் பிரபலமாகனுமா? நடராஜரை வணங்குங்க!
- அஸ்ட்ரோ சுந்தர ராஜன்
மாதங்களில் சிறந்த மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம், திருவாதிரைப் பண்டிகை. இதனை ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். சிதம்பரம் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் நேற்று மார்கழி திருமஞ்சனம் எனப்படும் ஆருத்ரா அபிஷேகத்தை தொடர்ந்து அனைத்து சிவாலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
நடராஜர் என்றதும் முதலில் நம் நினைவிற்கு வருவது சிதம்பரம்தான். அதேப்போல் சிதம்பரம் என்றதும் நம் நினைவிற்கு வருவதும் ஆருத்ரா தரிசனம் தான். “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.
சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், பெளர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் திருவாதிரை' விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை "ஆருத்ரா தரிசனம்'' என்றும் அழைக்கின்றனர். ஆருத்ரா என்ற வடமொழிச்சொல் திரிந்து தமிழில் ஆதிரை ஆனது. அதோடு திரு என்ற அடைமொழியை பெற்று திருவாதிரை என்றானது. சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம் என பழம்பெரும் ஜோதிட நூலாகிய நட்சத்திர சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.
ஆருத்ரா அபிஷேகம்:
அபிஷேகம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. வைஷ்ணவ ஸ்தலங்களில் ஸ்வாமிக்கு மங்கள நீராட்டு செய்வதை "திருமஞ்சனம்" என்றும் சிவ ஸ்தலங்களில் "அபிஷேகம்" என்றும் கூறுவது வழக்கம். ஆனால் மிகச்சிறப்பாக சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனிமாதத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆனித்திருமஞ்சனம் என்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆருத்ரா அபிஷேகம் என்றும் அழைக்கப்படுகிறது.
அபிஷேகத்தன்று இறைவனுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனபொடி, பஞ்சாமிர்தம்(பழங்கள்), தேன் சந்தனம். திருமஞ்சனம் செய்யபடுகிறது. பிறகு ஸ்நபனமாக கும்பதீர்த்தம் சேர்க்கப்படுகிறது. இதனால் பகவான் குளிர்ச்சி அடைகிறார். சான்னித்யம் கிடைக்கிறது.
ஆருத்ரா தரிசனம்:
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமான மார்கழி தக்ஷிணாயனத்தின் கடைசி மாதம். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம் காலைப்பொழுது மாசி மாதம்; உச்சிக் காலம் சித்திரை. மாலைப்பொழுது ஆனி; இரவு ஆவணி; அர்த்தசாமம் புரட்டாசி என்பர். தேவர்களின் இரவுப்பொழுதான தக்ஷிணாயனத்தில் கடைசி மாதம் மார்கழி. இந்த மாதத்தில் வரும் திருவாதிரை நக்ஷத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு விடியற்காலை நேர பூஜை செய்கதாக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆருத்ரா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் என்று கூறுவர்.
ஜோதிடத்தில் ஆருத்ரா அபிஷேகமும் தரிசனமும்:
ஈசனின் திருநட்சத்திரம் திருவாதிரை. மிக உஷ்ணமான நட்சத்திரம் இது. தவிர, ஆலகாலம் உண்ட நீலகண்டன் அல்லவா அவர். சாம்பல் தரித்தவன். அக்னியை ஏந்திக் கொண்டிருப்பவன். ஆக மொத்தம் உஷ்ணாதிக்கத்துடன் இருப்பவன். எனவே, அவனுக்குக் குளிரக் குளிர அபிஷேகம் செய்யச் சொல்கிறது ஆகம விதி. இதனால்தான் சிவபெருமானை அபிஷேகப் பிரியன் என்று கொண்டாடுகிறோம்.
உஷ்ண நக்ஷத்திரமான திருவாதிரை நக்ஷத்திரத்தின் அதிபதியான ருத்ர மூர்த்தியான சிவனை குளிர்விப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும் வருடத்திற்கு ஆறுமுறைதான் அபிஷேகம் நடைபெறும்.
சாதாரணமாக குளியலுக்கு காரகர் நீர் ராசி அதிபதியான சந்திரன் ஆகும். ஆனால் திருமஞ்சனம் என்பது பலவித வாசனை பொருட்கள் மற்றும் குளிர்விக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படுவதால் திருமஞ்சனத்தின் காரகர் சுக்கிரன் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.
ஒருவர் இசையில் சிறந்து விளங்க சுக்கிரனின் பலம் ஜாதகத்தில் மிக அவசியமாகும். ஜாதகத்தில் இசையில் சிறந்துவிளங்க தொடர்புள்ள பாவங்கள் காலபுருஷனுக்கு வாக்கு ஸ்தானமான ரிஷபம், தொண்டையை குறிக்கும் மிதுனம் மக்களிடையே பிரபலமாக ஏழாம் பாவம் மற்றும் ஜென வசிய ராசியான துலாம் ஆகிய வீடு மற்றும் அதிபதிகள் சுப பலத்துடன் விளங்க வேண்டும்.
இரண்டாம் வீடு மூன்றாம் வீடு, ஏழாம் வீடு,சுக்கிரன் புதன் பலம் பெற்று இருக்க வேண்டும். சாதாரன பேச்சிற்க்கு வாக்கு ஸ்தான பலமும் புதபலமும் போதும். ஆனால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் இசையில் சிறந்து விளங்க லக்கினம் சுக்கிரனின் வீடாக அமைவது அல்லது வாக்கு ஸ்தானம் சுக்கிரனின் வீடுகளாக அமைவது முக்கியம்.
பொதுவாகவே மனோகாரகன் சந்திரன், புதன் மற்றும் சுக்கிரனின் இணைவு ஒருவரை கலைத்துறையில் பிரபலமடைய செய்யும். இந்தவருடம் ஆருத்ரா தரிசனம் சந்திர பலம் வாய்ந்த பெளர்ணமி நாளில் திங்கள் கிழமையில் அமைந்ததும் சந்திரனும் சுக்கிரனும் சம சப்தமமாக பார்வை பலம் பெற்றதும் குருவும் சுக்கிரனும் பரிவர்தனை பெற்றிருப்பதும் சிறப்பாகும். தரிசனம் என்பது பார்வையை குறிக்கும். ஜோதிடத்தில் பார்வையில் காரகரும் சுக்கிர பகவான் ஆவார். மேலும் ஜோதிடத்தில் வலது கண்ணை குறிக்கும் சூரியனும் இடது கண்ணை குறிக்கும் சந்திரனும் சம சப்தமமாக பலம் பெற்றும் நிற்கும் காலத்தில் ஆருத்ரா தரிசன காட்சி பார்வை பலத்தை பெருக்கும் என்பதும் நிதர்சனம்.
இந்த ஆருத்ரா தரிசன நாயகர் நடராஜரின் சிறப்பே ஆடல், பாடல் மற்றும் நாட்டியம்தான். அத்தகைய நாட்டியக்கலையை கற்று தேர்ச்சிபெரும் அமைப்பு யாருக்கு?
1. நாட்டியம் மற்றும் கலைகள், ஆடல் பாடல், கூத்து, சினிமா போன்றவற்றின் காரகர் நம்ம ஹீரோ சுக்கிர பகவான்தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். என்றாலும் சந்தரன் மற்றும் புதன் துணை நிற்க வேண்டும்.
2. நாட்டியத்திற்க்கு கால் பாதம் தான் அடிப்படையாகும். காலபுருஷனுக்கு பன்னிரெண்டாம் பாவமான மீன ராசி நாட்டியத்திற்க்கான பாவமாகும். எனவே சுக்கிரன், காலபுருஷனுக்கு 12ம்பாவம மீனம் மற்றும் அதன் அதிபதி குரு, ஜாதகத்தில் 12ம் பாவம் மற்றும் அதன் அதிபதி ஆகியவை காரக கிரகங்களாவர்.
3. கிரஹங்களில் கால் மற்றும் எலும்புகளின் காரகர் சனைச்சர பகவான் ஆகும். அவர் ஜாதகத்தில் பலம் பெற்று சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியவர்களுடன் சேர்க்கை பெற்று நிற்க வேண்டும்.
ஜோதிடத்தில் பரதநாட்டியத்திற்கான கிரக நிலைகள்:
1. சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலா ராசியை லக்னமாக கொண்டு சுக்கிரன் ஆட்சி பெறுவது.
2. காலபுருஷனுக்கு பன்னிரெண்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெறுவது.
3. சுக்கிரனும் காலபுருஷனுக்கு பன்னிரெண்டாம் வீட்டதிபதியான குருவும் பரிவர்தனை பெற்று நிற்பது.
4. சுக்கிரனும் பன்னிரெண்டாம் வீட்டதிபதியும் சேர்க்கை பெறுவது.
5. கால்களையும் எலும்புகளையும் குறிக்கும் சனைஸ்வர பகவானின் வீட்டில் சுக்கிரன் நிற்பது மற்றும் சுக்கிரனின் வீட்டில் சனி உச்சமடைவது.
6. உடம்பை முறுக்கி ஆட மூலை ராசிகளில் சர்ப கிரகங்கள் நிற்பது.
இன்றைய கோட்சாரத்தில் சந்திரன் காலபுருஷனுக்கு மூன்றாம் வீடான புதனின் மிதுனத்தில் நிற்பதும், சுக்கிரன் சூர்யன் மற்றும் சனியுடன் சேர்க்கை பெற்றும் தனுர் ராசியில் நின்று சந்திரன், புதன், சுக்கிரன், சனி ஆகியவர்களுடன் தொடர்பு பெற்று நிற்பதும் கால புருஷனுக்கு பன்னிரெண்டாம் வீட்டதிபதி குரு சுக்கிரனுடன் பரிவர்தனை பெற்று நிற்பது இதற்கு கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது.
பிரபல நாட்டிய கலைஞர் பால சரஸ்வதி:
பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற பல புகழ்பெற்ற விருதுகளை பெற்றவரான தஞ்சாவூர் பாலசரஸ்வதி தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர். இவருடைய முன்னோர் தஞ்சை மாராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். பாலசரஸ்வதி, தனது நான்காவது வயதிலேயே இசையும் நடனமும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தஞ்சாவூர் நால்வர்களில் ஒருவரான சின்னையாவின் வழிவந்தவரான கண்டப்பா என்பவர் இவரது குரு. ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது.
அவரது ஜாதகத்தில் ஜென வசிய ராசியான துலாம் லக்னமாகி அதன் அதிபதியும் கலை காரகரான சுக்கிரன் உச்சம் மீனத்தில் உச்சம் பெற்று சந்திர கேந்திரத்தில் நின்று மாளவியா யோகம் பெற்றதும், கால புருஷனுக்கு மூன்றாம் வீடாகிய மிதுனம் சந்திர ராசியாகவும் சந்திரனின் வீட்டில் நின்று சுக்கிரனையும் புதனையும் ஏக காலத்தில் திரிகோண பார்வையாலும் பத்தாம் பார்வையாலும் தொடர்பு கொண்டது கலை துறையில் உச்சம் பெறவைத்த அமைப்பாகும். காலபுருஷனுக்கு கால் பாததை குறிக்கும் மீனத்தில் லக்னாதிபதி உச்சம் பெற்றதும் கால் மற்றும் எலும்புகளை குறிக்கும் சனைச்சர பகவான் சுக்கிரனை பார்த்தது பரத நாட்டிய கலையில் புகழ்பெறச்செய்ததோடு பல விருதுகளையும் பெற்றுத்தந்தது.
நாட்டியக்கலையில் சிறந்துவிளங்க வணங்க வேண்டிய ஸ்தலங்கள்:
சிதம்பரம் நடராஜபெருமானின் நடனம் நாட்டிய சாஸ்திரத்தின் உச்ச நிலையினை குறிக்கும் அம்சமாகும். சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம், திருவாலங்காடு ஆகிய பஞ்ச சபைகளில் நடராஜ பெருமானை வணங்குவது, நடனம் யோககலை ஆகியவற்றில் உன்னத நிலை அடைய செய்யும்.
கலைத்துறைகளில் பிரபலமடைந்தவர்களின் வீடுகளில் கண்டிப்பாக பார்வையாளர்களை கவரும் வண்ணம் ஒரு நடராஜர் சிலை வைத்திருப்பார்கள். அதன் காரணம் இதுதான்.
கலைகளின் சிறந்து புதனின் பலமும் மிக முக்கியமாகும். நவரத்திணங்களில் புதனின் ரத்திணம் மரகதமாகும். கலைகளின் நாயகர் மரகத்தில் அமைந்திருந்தால் எப்படி இருக்கும்?
அமைந்திருக்கிறது. ஆம்! இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோச மங்கை எனும் ஸ்தலத்தில் உள்ள் நடராஜர் சிலை மரகதத்தில் உள்ளது. இந்த நடராஜர் தான் ஆதி நடராஜர் என்றும் சொல்லப்படுகிறது.இறைவன் உமையவள் மட்டும் காணுமாறு நடனம் ஆடியது உத்திகோசமங்கையில் மட்டுமே. ஐந்தரை அடி உயரமுள்ள மரகத நடராஜர் சிரித்த முகமாய் இருக்கிறார். உலகிலேயே மிகப்பெரிய மரகதக் கல் அதுவும் சிலை வடிவில், இன்னும் சொல்லப் போனால் நடராசப் பெருமானின் அருள் ஜீவ ஒளிசிந்த ஆடும் திருக்காட்சி இங்குதான்.
ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே நடராஜரை மரகத கோலத்தில் தரிசிக்கமுடியும். மற்ற நாட்களில் சந்தனகாப்பு சார்த்தபட்டிருக்கும். ஆரூதரா தரிசனம் முடிந்த அடுத்த நாள் மீண்டும் சந்தன காப்பு சார்த்தப்பட்டு அடுத்த ஆண்டு ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே களையப்படும்.