மார்கழி திருவாதிரையில் சிவ ஆலயங்களில் நடராஜருக்கு மகா அபிஷேகம் - ஆருத்ரா தரிசனம்
மார்கழி திருவாதிரையை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள சிவ ஆலயங்களிலும் வெளிநாடுகளில் உள்ள சிவ ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடைபெற்றது.
கடலூர்: மார்கழி திருவாதிரையை முன்னிட்டு சிவ ஆலயங்களில் அதிகாலையில் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. நமக்கு ஓர் ஆண்டு, தேவர்களுக்கு ஒரு நாளாகும். ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். அதில் மார்கழி திருவாதிரை நாளில் நடத்தப்படும் அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் அற்புதமானது. சிதம்பரத்தில் நடராஜருக்கு நடைபெற்ற அபிஷேகத்தினை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
நடராஜருக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில், மாலையில் அபிஷேகம் நடைபெறும். ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படும். ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
புரட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில், மாலையில் அபிஷேகம் நடைபெறும். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகமும் நடைபெறும். மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம். இந்த நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும் போது நடராஜரை கண்டு வணங்கி வழிபடுவது மிகவும் நல்லது. விசேஷமானது.
நடராஜர் நாட்டியம்
பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்சசபைகளில் பொற்சபையாகவும் விளங்குவது கடலூர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சிவாலயம் தில்லையம்பலம் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில். பரதம் என்னும் நாட்டியக் கலையை தோற்றுவித்த நாயகரான நடராஜர் நாட்டியமாடும் கோலத்தில் இருக்கும் தலம். இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சம், மனித உடலமைப்பை பிரதிபலிக்கும் கோவிலாகவும் உள்ளது.
அற்புத அழகு
பொதுவாக மற்ற சிவாலயங்களில் இருக்கும் நடராஜர் சிலையை விட, தில்லையம்பலம் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் இருக்கும் நடராஜர் சிலையானது வேறுபட்டிருக்கும். இச்சிலையும், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் இருக்கும் நடராஜர் சிலையும் ஒரே மாதிரி இருக்கும். காரணம், சிவபெருமானின் நடராஜர் தோற்றத்தில் முதன் முதலில் உத்தரகோசமங்கையிலும், மறுநாளில் சிதம்பரத்திலும் உருவாக்கியது தான். இவ்விரண்டு நடராஜர் சிலைகளையும் உருவாக்கியவர் ஒருவரே.
விழாவின் சிறப்பு
அதன் காரணமாகவே, இவ்விரண்டு கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்பதோடு, உலகப்புகழ்பெற்று விளங்குகிறது. மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரே உற்சவராகவும் இருப்பதால், இக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நடராஜர் அபிஷேகம்
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த 21ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினந்தோறும் மூலவரான நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், காலையிலும் மாலையிலும் பஞ்சமூர்த்திகளின் திருவீதியுலாவும் நடைபெற்றது.
கோலாகல தோரோட்டம்
ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்ட வைபவம் நடைபெற்றது. தேரோட்டத்தில் நடராஜர், சிவகாம சுந்தரி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆருத்ரா தரிசனம்
மார்கழி திருவாதிரையை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகா அபிஷேகம் நடைபெறும். பின்னர் திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகளின் வீதியுலா காட்சியும், பிற்பகல் 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன நிகழ்வும் நடக்கிறது. நாளை 31ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் திருவீதியுலா நடைபெறும்.
சிவ ஆலயங்களில் கோலாகலம்
சிதம்பரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களிலும் சிவபெருமானின் பஞ்சபூத தலங்கலான திருவாலங்காடு, திருவண்ணாமலை, திருவையாறு, காஞ்சிபுரம், திருவானைக்காவல், காளஹஸ்தி, ஆகிய தலங்களிலும் பஞ்ச சபைகளிலும் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.