திருவாதிரை விழா: சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் - பக்தர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை: திருவாதிரை திருவிழா தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பாக நடைபெற்றது. சிவ ஆலயங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய தினமே ஆருத்ரா தரிசன நாள் ஆகும்.
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும்,
திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி செய்து படைப்பார்கள். களி என்பது ஆனந்தம் என்றும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்.
ஆருத்ரா தரிசனம்
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ஆம் நாள் இன்று தாமிர சபையில் நடராஜன் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மரகத நடராஜர்
உத்தரகோசமங்கை ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பச்சை மரகத நடராஜர் பெருமானுக்கு சந்தனகாப்பு கலைத்து,அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.
திருவாருர் தியாகராஜர்
திருவாதிரை விழாவின் முதல் நாளான நேற்று இரவு தியாரகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனை நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் சாமியின் பாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாத தரிசனத்தை தொடர்ந்து இன்று மாலை சகஸ்கரநாம அர்ச்சனை மற்றும் மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.
பாத தரிசனம்
திருக்கயலாயத்தில் தேவர்கள் திருவாதிரை நாளில் நடராஜ பெருமானின் நடனத்தை பார்க்க விரும்பியதாகவும், அப்போது நடராஜர் நடனமாடிய போது இடது காலை சிதம்பரம் கோயிலிலும், வலது காலை திருவாரூர் தியாகராஜர் கோயிலில் காட்டியதாகவும் ஐதீகம். இதனையொட்டி இந்த கோயிலில் சாமியின் வலது பாத தரிசன நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஆருத்ரா தரிசனம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மார்கழியில் ஆருத்ரா தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டடம் நடைபெற்றது.
பக்தர்கள் தரிசனம்
சிகர விழாவான ஆருத்ரா தரிசனம் இன்று நடக்கிறது. அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடைபெற்றது. சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சி நடந்து, 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருவாதிரை விழா
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தில் திருவாதிரை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதே போல பாபநாசம் சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.