சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம் - அதிகாலையில் ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மாட வீதிகளில் வலம் வந்த தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடலூர்: சிதம்பரம் நகரமெங்கும் சங்கொலி கேட்டது... ஓம் நமச்சிவாயா என்ற முழக்கம் எங்கும் எதிரொலிக்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார் நடராஜர். வரிசையாக சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் என வரிசையாக ஐந்து தெய்வங்களும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி வரிசையாக மாட வீதிகளில் வலம் வந்ததை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்தனர். மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் நாளை அதிகாலை நடைபெற உள்ளது.
Recommended Video
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளினர். இன்று தேரோட்டம் நடைபெற்றதால் நகரமே விழாக்கோலம் பூண்டது. வீதிகள் தோறும் வண்ண வண்ண கோலமிட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு நகர்வலம் வந்த நடராஜரையும் சிவகாமி சுந்தரி அம்பாளையும் வரவேற்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேரோட்டத்தில் பங்கேற்க வரும் வெளியூர், உள்ளூர் பக்தர்களுக்கு இ - பாஸ் முறை கட்டாயம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த முறையை ரத்து செய்ய கூறி தீட்சிதர்கள், பொதுமக்கள், பக்தர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இ - பாஸ் முறை ரத்து செய்யப்பட்டால் தான் கோயிலுக்குள் இருக்கும் சாமிகளை ஊர்வலமாக எடுத்து வந்து தேரில் வைத்து தேரோட்டத்தை நடத்துவோம் என்று தீட்சிதர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதன் காரணமாக, ஆண்டு தேரோட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பமான சூழ்நிலை இருந்தது.
இதற்கிடையில் மாவட்ட நிர்வாகம் இ - பாஸ் முறை பின்பற்றப்படாது. பக்தர்கள் வழக்கம் போல் வரலாம் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தேரோட்டம் நடத்துவதற்கு தீட்சிதர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.
சிவகாம சுந்தரி அம்பாள் சமேத நடராஜர் மூர்த்தி சுவாமிகள் கோயிலின் சித்சபைக்கு கொண்டுவரப்பட்டனர். அங்கிருந்து நடராஜர், சிவகாம சுந்தரி, சண்டிகேசுவரர், விநாயகர், முருகன் ஆகிய சாமிகள் தனித்தனித் தேரில் எழுந்தருளி மேளதாளம் முழங்க, வேத மந்திரங்கள் ஓத காலை எட்டு மணியளவில் பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேருக்கு முன்பாக சிவனடியார்கள் மேளதாள முழக்கத்துடன் நடனமாடிச் சென்றனர். நான்கு ரத வீதிகளிலும் உபயதாரர் களின் மண்டகபடி நடந்தது. தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீதிகளில் உலாவந்த சாமியை வரவேற்பதற்காக பக்தர்கள் தங்களது இல்லங்களுக்கு முன்பு வண்ண கோலங்களால் அலங்கரித்தனர்.
கொரோனா தடுப்பு தடவடிக்கையாக பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தேரினை இழுத்து சென்றனர். தேரானது மாடவீதியில் சுற்றி வந்த பிறகு, மாலை ஆயிரங்கால் மண்டபத்தில் 5 சாமிகளும் வைக்கப்படுவார்கள். அங்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். சிதம்பரம் நடராஜர் கோயிலின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை அதிகாலை நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என அனுமதி அழைக்கப்பட்டுள்ளது.