விநாயகர் சதுர்த்தி 2018: பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றி சிதறுகாய் போடுவது ஏன் தெரியுமா?
விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவதோடு சிதறுகாய் நேர்த்திக்கடன் செய்கின்றனர். வினைகள் தீர்க்கும் விக்னேஸ்வரனுக்கு சிதறுகாய் உடைத்து வழிபடுவது வழக்கமாயிற்று.
Recommended Video
சென்னை: தடைகளை தகர்த்து எறியும் விநாயகருக்கு சிதறுகாயை போட்டு வழிபடும் வழக்கம் உள்ளது. அதே போல அருகம்புல்லை வைத்து அர்ச்சனை செய்கிறோம். எத்தனையோ பூக்கள் இருக்க எளிமையான அருகம்புல்லையும், எருக்கம்பூவையும் தனக்கு உரியதாக ஏற்றுக்கொண்டார் பிள்ளையார்.
நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு, விக்னங்களை விலக்கும் விக்னேஸ்வரருக்கு 1, 3, 5, 7, 9, 18 என்ற ஒன்பதின் பெருக்கமாக தேங்காயை சிதறு காயாக உடைத்து வழிபட வேண்டும். இதற்கும் ஒரு புராண கதை உள்ளது.
மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார்.
சிதறுகாய் உடைக்கும் பழக்கம்
எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.
அனலாசுரன் அட்டகாசம்
அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான்.
அருகம்புல் அர்ச்சனை
விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.
வெள்ளெருககம்பூ
"தெய்வீக மூலிகை" பெருமையுடன் விளங்கும் எருக்கம் பூவில் ஒன்பது வகைகள் உள்ளன. விநாயகர் வழிபாட்டில் எருக்கம் பூவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம்பூ. இதனை அர்க்க புஷ்பம் என்பர். அர்க் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எருக்கு என்று பொருள். விநாயகரைப் போலவே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்தது. சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயருண்டு. சூரியனார் கோயிலின் தலவிருட்சம் கூட எருக்கஞ்செடி தான். எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவித்தால் தடைகள் நீங்குவதோடு சூரியனின் அருளால் ஆத்மபலம், ஆரோக்கியம் உண்டாகும். வெள்ளெருக்கம் பூவை சிவனுக்கும் அர்ச்சனை செய்ய பயன்படுத்துகின்றனர். காலையில் வெள்ளெருக்கம் பூவை கொண்டு பூஜை செய்தால் நல்ல பலனை பெறலாம்.