தீராத நோய் தீர்த்து குலம் தழைக்கச் செய்யும் கோவை தண்டு மாரியம்மன்
கோவையில் ஆட்சிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும் தீராத நோய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள்.
கோவை: தண்டுமாரியம்மன்தான் கோவையின் காவல் தெய்வமாக மக்களை காத்து நிற்கிறாள். துர்கையின் அம்சமாக வீற்றிருக்கும் தண்டு மாரியம்மன் தீராத நோய் தீர்த்து மக்களின் குலம் தழைக்கச் செய்கிறாள்.
கோயம்புத்தூர் கோட்டையிலே வேப்ப மரம், தொரட்டி மரத்தின் நிழலிலே வடக்கு நோக்கி தண்டு மாரியம்மன் காட்சி தருகிறார். மைசூர் மன்னன் திப்பு சுல்தான் ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்க்க படை திரட்டினார். அப்போது தனது படைகளுடன் கோவை கோட்டைக்குள் முகாமிட்டிருந்தபோதுதான் அன்னை தண்டுமாரி தனது இருப்பிடத்தை உணர்த்தி வெளிப்பட்டாள்.
கொங்கு நாட்டு கோட்டைகளில் முக்கியமானதாக விளங்கிய கோயம்புத்தூர் கோட்டை 1768 லிருந்து 1791 ஆம் ஆண்டு வரை மூன்று தடவை முற்றுகையிடப்பட்டது. ஆங்கிலேயரை எதிர்க்க மைசூரில் இருந்து வந்த திப்பு சுல்தான் படைகள் கோட்டையில் முகாமிட்டிருந்தன.
திப்பு சுல்தான் படையில் உள்ள வீரர்களில் ஒரு வீரர் தீவிர அம்மன் பக்தர். அம்மனை நித்தம் வழிபடும் ஒரு தீவிர பக்கர். ஒருநாள் இரவில் அவரது கனவில் தோன்றிய மாரியம்மன், வீரர்கள் குடியிருக்கும் பகுதியில், வேப்பமரங்களுக்கும் காட்டுக்கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் தான் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி, தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.
கனவில் அம்பாளின் அரிய திருமேனியைக் கண்ட அவ்வீரன் மறுநாள் காலையில், அம்பாள் வீற்றிருப்பது போல் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்பமரம் தொரட்டி மரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட தெய்வமாக அம்பாள் அங்கே வீற்றிருந்தாள். அங்கேயே அம்பாளை வணங்கிய அவர் சக படைவீரர்களுக்கும், கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தார். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி அவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டனர்.
ஒரு சமயம், பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தாக்கியது. அம்மை விலக அம்பாளை வணங்கி, அருகில் காய்த்திருந்த தண்டுக்கீரையை அரைத்து அதில் உள்ள சாறை பிழிந்து அதனை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு, அத்தீர்த்தத்தைப் அம்மை நோய் பாதித்த அனைத்து வீரர்களும் அருந்தினர். அந்த தீர்த்தத்தை பருகிய உடன் அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை குணமான அதிசயம் நிகழ்ந்தது. இந்த நிகழ்விற்கு பிறகு தண்டுக்கீரையின் பயன்பாடு ஆடி மாதம் தோறும் அம்மனுக்கு கூழ்வார்க்கும் பக்தர்கள் கடைபிடிக்கத் துவங்கியதாக கூறப்படுகிறது.
அன்றைக்கு மக்களை பிளேக், காலரா, அம்மை போன்ற கொடிய நோய்கள் தாக்கி மரணத்தை தழுவியபோது மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், தண்டு மாரியம்மனை சரணடைய, வேப்பிலை, திருநீறு, தீர்த்தம் மூலமாக அவர்களை அன்னை காத்தருளினாள்.
காவல் தெய்வமாக வீற்றிருந்த அம்மனுக்கு புதிய ஆலயம் எழுப்பும் பணி தொடங்கப்பட்டு, காலப்போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர். அத்திருக்கோயில்தான் தண்டு மாரியம்மன் திருக்கோவிலாகும். அன்று முதல் கோட்டையில் துர்க்கா தேவியின் அம்சமாக அன்னை தண்டுமாரியம்மன் தீராத நோய் தீர்க்கும் தாயாக அருள்பாலித்து வருகிறாள்.
அதே சமயம் தண்டு மாரியம்மன் என்ற பெயருக்கு இன்னொரு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. "தண்டு" என்றால் "படை வீரர்கள் தங்கும் கூடாரம்" எனப்பொருள். அங்கு கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் "தண்டுமாரியம்மன்" என்று அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர்.
தண்டு மாரியம்மன் சன்னதிக்கு மேல்புறம் அரசமரத்தின் கீழ் கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார். இத்தல விநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். முன் மண்டபத்தில் அஷ்ட லட்சுமியின் திருஉருவங்கள் உள்ளன. இந்த கோவிலின் தல விருட்சம் தொரட்டி மரம். தல விருட்சத்திற்கு நெய்விளக்கேற்றி வழிபட்டால் வழிபடுபவர்களது குலம் தழைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அம்மன் கோவில்களில் முதன் முறையாக அம்மனின் உற்சவ மூர்த்தியை தங்க ரதத்தில் வைத்து பவனி வந்த சிறப்பு இந்த கோவிலையே சேர்ந்ததாகும். பக்தர்கள் தாங்கள் நினைந்த காரியங்கள் நிறைவேற அம்மனை தங்கத்தேரில் வைத்து தங்கள் குடும்பத்தினருடன் தாங்களே அம்மன் தேரினை திருஉலா செய்து வழிபட்டு அம்மனின் திருவருள் பெற்றுச் செல்கின்றனர்.
படைக்கலன்களுக்கு தண்டு என்று பொருள் அதனாலேயே தண்டுமாரியம்மன் எனும் பெயர் நிலைத்து விட்டது. ஒவ்வாரு ஆண்டும் சித்திரை மாத்தின் முதல் செவ்வாய் கிழமை தொடங்கி 13 நாட்களுக்கு பிரம்மோற்சவமும், ஆண்டு திருவிழாவும் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இந்த தண்டுமாரியம்மன்தான் கோவையின் காவல்தெய்வமாக இருக்கிறார். துர்கா தேவியின் அம்சமாக வீற்றிருக்கும் தண்டு மாரியம்மன் தீராத நோய் தீர்ப்பதில் வல்லவள். செவ்வாய்க்கிழமைகள் ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி 9 வாரம் வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும்.
அன்னையின் அருட்பார்வை பட்டாலே போதும் துன்பங்கள் அகன்றுவிடும். அவளது திருவடி தரிசனம் தீர்க்கமுடியாத பிரச்னைகளையும்,
முடிவுக்கு வராத வழக்குகளையும் தீர்த்திடும். மனவேற்றுமையால் பிரிந்து சென்ற தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அன்னையின் அருளால் நோய் தீரப்பெற்றவர்கள் அக்னி சட்டி ஏந்தியும், உலோக விழிகளை செலுத்தியும் வழிபடுகின்றனர். குழந்தை வரம் பெற்றவர்கள் மண் உருவ பொம்மை, தங்க, வெள்ளியினால் ஆன உருவங்களை வைத்து வழிபடுகின்றனர்.