மனஅமைதி தரும் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத திரிசூலநாதர் ஆலயம்
சென்னை: கோடி கோடியாய் கொட்டி வைத்திருந்தாலும், தங்கமும் வைரமும் குவிந்திருந்தாலும் மன அமைதி இழந்து தவிப்பவர்கள் பலர் உண்டு. பணமே இல்லையென்றால் நிம்மதியுடனும், மன அமைதியுடனும் இருப்பவர்கள் இன்றைக்கு இருக்கின்றனர். மனஅமைதி வேண்டும் என்பவர்கள் திரிசூலம் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத திரிசூலநாதர் ஆலயத்திற்கு சென்று வந்தால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
ஆதிகாலத்தில் இந்த தலம் வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம், திருநீற்றுச் சோழநல்லூர் திருச்சுரம், சுரத்தூர், பிரம்மபுரி என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. இத்தலத்து ஈசனின் பெயர் திரிசூலநாதர் என்பதால் நாளடைவில் திரிசூலம் என்ற பெயர் நிலைத்து விட்டது.
பிரம்மன் வழிபட்ட தலம்
ஒரு தடவை இந்த தலத்துக்கு வந்த பிரம்மன் தனது படைப்புத் தொழில் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று இப்பகுதியில் ஒரு குளம் ஏற்படுத்தி, அதன் அருகில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு ஈசனின் அருளைப் பெற்றார்.இதனால்தான் இந்த ஊருக்கு பிரம்மபுரி என்றும், இத்தலத்து ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார்.
திரிசூலநாதர்
ஆலயம் கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. வாசலுக்கு எதிரில் விநாயகர் உள்ளார். அவரை வழிபட்டு பிறகு கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வணங்கி உள்ளே செல்லாம். ஈசன் கிழக்கு முகமாக உள்ளார். ஈசனின் இடதுபுறம் சொர்ணம்பிகை நின்ற கோலத்தில் உள்ளார். தங்கக் கரத்துடன் அவர் அருள்பாலிப்பதைக் காணலாம்.
சொர்ணாம்பிகை
வெளிநாட்டவர்கள் இத்தலத்தை சூறையாடிய போது அம்மனின் கை உடைந்து போனது. இதனால் புதிதாக திரிபுரசுந்தரி சிலை செய்து அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார்களாம். அன்று இரவே அர்ச்சகர் கனவில் தோன்றிய சொர்ணம்பிகை, ``என்னை லிங்கம் அருகிலேயே வைத்திருங்கள்'' என்று கூறினாளாம். இதைத் தொடர்ந்து சொர்ணம்பிகை கை உடைக்கப்பட்ட இடத்தில் தங்கத்தால் செய்து பொருத்தி, மீண்டும் பழைய இடத்தில் பிரதிஷ்டை செய்தார்களாம். அங்கிருந்த திரிபுரசுந்தரி தனி சன்னதிக்கு மாற்றப்பட்டாள்.அந்த சன்னதி தெற்கு நோக்கி காட்சித் தருகிறது.
ரிஷி ஓடை
ரிஷிகள் இத்தலத்தில் தவம் இருந்த அடையாளங்கள் உள்ளன. அதை உறுதிப்படுத்தும் ரிஷி ஓடை அருகிலேயே உள்ளது. இங்குள்ள மலை குகைகளில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது வந்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
மன அமைதி கிடைக்கும்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரிபுரசுந்தரி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். அன்று அவளை வழிபடுவர்களுக்கு மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுரசுந்தரிக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பூப்பாவாடையுடன் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
பிரம்ம தீர்த்தம்
இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மன் இந்த தீர்த்தத்தை உண்டாக்கி நீராடி சிவனை வணங்கி மோட்சம் பெற்றார் என்று தல வரலாற்றில் உள்ளது. எனவே இந்த புனித தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
எப்படி செல்வது
பேருந்து மூலம் செல்வபர்கள் சென்னை-தாம்பரம் நெடுஞ்சாலையில் மீனம்பாக்கம் விமான நிலையம் ஸ்டாப்பில் இறங்கவேண்டும். மின்சார ரயிலில் செல்பவர்கள் திரிசூலம் ரயில் நிலையத்தில் இறங்கி ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். எதிரே அமைந்துள்ளது இந்த ஆலயம். இத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை சிறப்புக் கொண்டது. தற்போதுள்ள ஆலயத்தை சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னன் கட்டியதாகக் கூறப்படுகிறது. புராதன சிறப்பு மிக்க புனிதமான திருத்தலமாகும். நான்கு மலைகளுக்கு மத்தியில் இத்தலம் உள்ளது. இதன் மூலம் இத்தலத்தில் ஈசன், நான்குவகை வேதங்களுக்கும் உட்பொருளாய் இருப்பதாக கருதப்படுகிறது.