சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் ஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு - தீட்சிதர்கள் போராட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் 29 ஆம் தேதியும், 30 ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது.
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழா மற்றும் ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் பதிவு கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் மற்றும் சிவபக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் வாசலில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவபெருமானின் பஞ்சசபைகளில் கனகசபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆனி மாதத்தில் நடைபெறும் திருமஞ்சனமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு ஆருத்ரா தரிசனம் வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான கொடியேற்றம் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. வரும் 31 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடராஜர் கோயிலில் தேரோட்டம் 29 ஆம் தேதியும், 30 ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழா மற்றும் ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் பதிவு கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. நாளை நடைபெறவுள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவில் பங்கேற்க http://aruthracarfest.com என்ற இணையதளத்திலும், நாளை மறுநாள் கோயிலுக்குள் நடைபெறவிருக்கும் தரிசனத்தில் பங்கேற்க http://aruthraonline.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் மற்றும் சிவபக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் வாசலில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.