சொந்த வீடு கட்ட ஆசையா? இன்று வாஸ்து நாளில் வாஸ்து பகவானை வணங்குங்கள்!
சொந்த வீடு ஒவ்வொரு நடுத்தர மக்களின் கனவு. இந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. வாஸ்து நாள் பார்த்து வீடு கட்ட ஆரம்பித்தால் விரைவில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறலாம்.
சென்னை: இன்று வாஸ்து நாளாகும். வாஸ்து பகவான் நித்திரை விட்டு எழும் நாளில் வாஸ்து பூஜை செய்து வீடு கட்ட தொடங்கலாம். சொந்த வீடு கட்டும் யோகம் யாருக்கு இருக்கிறது என்று பார்க்கலாம்.
பூமிக்காரகன் செவ்வாயின் நிலையையும் சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் பார்க்க வேண்டும். நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் அனைவருக்கும் அமையாது.
பலர் கட்டிய வீட்டை வாங்குவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் கிடைக்கும். அதற்கு செவ்வாய், சுக்கிரன் இரண்டு கிரகமும் நன்றாக இருக்க வேண்டும்.
வீடு கட்டும் யோகம்
ஜாதகத்தின் ராசிகட்டத்தில் நான்காம் வீட்டின் அதிபதி ஆட்சி/உச்சம் பெற்று அந்த கிரகத்தின் திசை நடைபெற்றால் கட்டாயம் சொந்தவீடு கட்டி அதில் வசிக்கக்கூடிய யோகம் கிட்டும் ஆனால் அந்த வீடு லக்னத்திற்கு 6,8,12 ஆக இருக்ககூடாது. நான்காம் வீட்டில் நல்ல ஆதிபத்தியம் கொண்ட சுக்கிரபகவான் திக்பலம் பெற்றிருப்பது ஒரு சிறந்த அமைப்பு.இந்த திசை நடப்பில் வரும்போது சுயபுத்தி முடிந்து நான்காம்வீட்டின் அதிபதியுடைய புத்தி நடைமுறைக்கு வரும்போது கட்டாயம் வீடுகட்டுதல் சம்பந்தமான காரியங்களை நடத்தும் யோகம் உண்டாகும்.
சொந்த வீடு
நான்காம் வீட்டின் அதிபதி லக்னத்திற்கு கேந்திரம்/திரிகோணம் ஏறி பலமுடன் நின்று உடன் சுபகிரக சேர்க்கை/பார்வை பெற்று திசை நடைபெற்றாலும் வீடுகட்டும் யோகம் வாய்க்கும். நான்காம் வீட்டில் ராகுபகவான் இருந்தாலும் தீய கிரகசேர்க்கையின்றி அமைந்த ராகுவிற்கு இடம் கொடுத்த கிரகம் ஆட்சி/உச்சம் அடைந்து திசை நடைபெற்றால் சொந்தவீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.
மாடி மேல் மாடி வீடு
பத்தாம் வீட்டிற்குரிய கிரகமும் நான்காம் வீட்டிற்குரிய கிரகமும் இணைந்து கேந்திரத்தில் பலமுடன் நின்று திசை நடைபெற்றால் ஏராளமான வீடுகளை கட்டி விற்பனை செய்யும் யோகம் உண்டாகும். லக்னத்திற்கு பன்னிரண்டாம் வீட்டிற்கு உரிய கிரகம் இரண்டாம் வீட்டில் அமர்ந்து சுபகிரகபார்வை பெற்று திசைநடைபெறும்போது சொந்தவீடு கட்டும் யோகம் உண்டாகும்.உடன் எத்தனை கிரகம் சேர்க்கை பெற்றுள்ளதோ அத்தனை வீடுகள் அமையும்.
மனை வாங்கலாம்
நான்காம் வீட்டில் செவ்வாய் பலமுடன் நின்று சுபகிரகபார்வை பெற்று திசை நடைபெறும்போது கட்டாயம் வீடுகட்டும் அல்லது நிலம் வாங்கும் பூமிபாக்யம் உண்டாகும். லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதியின் திசை ஆட்சி/உச்ச பலத்துடன் நடைபெறும்போதும் சொந்தவீடு கட்டி மகிழ்ச்சியுடன் வாழும் வாழ்க்கைஅமைப்பு உண்டாகும். மேற்கண்ட கிரகஅமைப்புகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் அந்த கிரகங்களின் தசாபுத்தி நடைமுறைக்கு வந்தால் மட்டுமே யோகங்கள் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட கிரக அமைப்புகளை தவிர சொந்தவீடு தொடர்பான மேலும் நிறைய கிரகஅமைப்புகள் ஜோதிட ரீதியாக உள்ளன.
வளம்தரும் வாஸ்து பூஜை
வீட்டு மனை வாங்கியவர்கள் என்றைக்கு பூமி பூஜை போட்டு வீடு கட்டத்தொடங்க வேண்டுமென்பதை நம் முன்னோர்கள் தெளிவாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும்.
இன்று வாஸ்து நாள்
வாஸ்து புருஷன் வருடத்தில் நான்கு மாதங்கள் அதாவது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத்தில் இருப்பார். சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம். சித்திரை 10 வைகாசி 21, ஆடி 11,ஆவணி 6, ஐப்பசி 11,கார்த்திகை 8, தை 12,மாசி 22 தேதிகளில் வாஸ்து பூஜை செய்ய உகந்த நாட்களாகும். இந்த நாட்களில் வாஸ்து பகவான் மூன்றே முக்கால் நாழிகை வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். அதாவது ஒன்றரை மணி நேரம் வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார்.
எப்போது பூஜை செய்வது
இந்த ஒன்றரை மணி நேரத்தில் முதல் 18 நிமிடங்கள் காலைக் கடன்களை முடித்து குளிப்பார். அடுத்த 18 நிமிடங்கள் பூஜை செய்வார். அதற்கு அடுத்த 18 நிமிடங்கள் சாப்பிடுவார். பின்னர் 18 நிமிடங்கள் வெற்றிலை பாக்குப் போடுவார். கடைசி 18 நிமிடங்கள் ஆட்சி செய்வார். உணவு அருந்த ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரம் முடிவதற்குள் மனை முகூர்த்தம் செய்வது நல்லது. இந்தத் தேதிகளில், கிழமைகள் மாறுபட்டு வந்தாலும், இந்தத் தேதிகள் மாறுவதில்லை.
வாஸ்து பகவானை வணங்குவோம்
தைமாதம் 12ஆம் தேதி ஜனவரி 25 இன்று காலை 10.40 முதல் 11.15 வரை வரும் நேரமே வாஸ்து விழிப்பு நேரம். இந்த நேரத்தில் வீடு கட்ட வாஸ்து செய்யலாம். வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் உள்ள வாஸ்து பகவான் ஆலயத்தில் ஹோமங்கள் நடைபெறுகிறது. வாஸ்து பகவானை வணங்கி வர சொந்த வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.