ராகுவினால் விஷப்பூச்சி தாக்குதல், பாம்பு கடிப்பது இன்னும் என்னென்ன நோய்கள் பாதிக்கும்
சென்னை: மனிதர்களுக்கு தோன்றும் நோய்களுக்கும் கிரகங்களின் பெயர்ச்சிக்கும் தொடர்பு உள்ளது. நோய்களால் பாதிக்கப்பட்டவர் மருத்துவர்களிடம் செல்லும் அதே நேரத்தில் பரிகாரத்திற்காக ஜோதிடரிடம் செல்கின்றனர். ராகு பகவான் சஞ்சாரம் சிலரின் நோய்களை தீர்க்கும். சிலருக்கு நாட்பட்ட தீராத நோய்களை உண்டாக்கும். நன்கு உயரமான, மெலிந்த ஒல்லியான உடலமைப்புக்கு காரணமானவர் ராகு பகவான். பேய், பிசாசு, பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றிற்கெல்லாம் பயப்பட செய்வது ராகு தான். விஷப்பூச்சிகள், விஷ வண்டுகள் கடிப்பது, அதனால் உடல் நலக்குறைவு ஏற்படுவது, விஷப் பாம்புகள் கடிப்பதன் மூலம் பெரும் துன்பம் அடைந்து உயிரிழப்பது போன்ற செயல்களும் ராகுவால் தான் நடக்கின்றன.
சர்ப்ப கிரகமான ராகுவின் பார்வை, சஞ்சாரம் ஒருவரின் ஜாதகத்தில் சரியாக அமைந்திருந்தால் எதிர்பாராத வகையில் திடீர் தலைவர், திடீர் உயர் பதவி கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு அமையும். ஆபத்தான காடு, மலைகளில் சுற்றிவருவார். கெட்ட நண்பர்கள் மூலமாக தனக்கு சாதகமான காரியங்களை சாதித்துக் கொள்வார். மாய, மந்திர வித்தைகள் மூலம் நினைத்ததை சாதிப்பார். தந்தை வழி, தாத்தா மற்றும் பாட்டி சொத்துகள் கைக்கு வரும்.
பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை கற்றும், கொடூர மிருகங்களை வைத்து வித்தை காட்டியும் மகிழ்வார். நினைத்து பார்க்க முடியாத புதையல் கிடைக்கும். பல கோடி ரூபாய்களுக்கு பினாமியாக மாறுவது அல்லது கீழே கிடந்து எடுப்பது போன்றவை ராகுவால்தான் வாய்க்கும். ராகுவினால் ஏற்படும் நோய்கள் பற்றியும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
நோய்கள் பாதிப்பு
ராகு கொடிய குரூரர் கிரகம் என்பதால், ராகு எந்த கிரகத்துடன் சேர்ந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்தை கெடுக்கும் வகையில் செயல்படுவார். பொதுவாக ராகு சுயசாரம் அல்லது கேதுசாரம் பெற்று இருந்தால் ராகுவின் உக்கிரம் அதிகமாகும். இதனால் உலகில் புயல் மூலம் சூறாவளி காற்றைக் கொடுத்து பொதுமக்களை அலற வைப்பார். மருந்தே கண்டுபிடிக்க முடியாத நோய்களை கொடுப்பார். காற்று மூலம் விஷ வாயு கொடுத்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்குவார்.
நிலநடுக்க பாதிப்பு
பூமிக்கு அடியில் நடக்கும் சுரங்கப் பணியில் உயிரிழப்பு, எரிமலைகள், பூகம்பம் அனைத்துமே ராகுவே காரண கர்த்தாவாக இருக்கிறார். விஷ பூச்சிகள் நிறைந்த காடுகள் அழிவதும், பாம்புகள் நிறைந்த காடுகள் அழிவதும், காட்டில் உள்ள விலங்குகள் நகரத்திற்குள் வருவதும், விந்தையான சம்பவங்கள் மூலம் மக்களை கிலி அடிப்பது போல் மிரள வைப்பது எல்லாம் ராகு கிரகத்தால் தான் நடக்கின்றன.
தொழுநோய்கள்
சூரியன் புதனுக்கு அடுத்தபடியாக தொழுநோய்க்கு முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ராகு மற்றும் கேது ஆவர். உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் தோன்றுவது, தோலின் அடுக்குகளிலுள்ள அனஸ்தீஷியாவை செயலிழக்க செய்வதால் தொழுநொய் ஏற்பட்டவர்களுக்கு உடல் மரத்து வலி மற்றும் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். மேலும் அங்கஹீனம், உருவ மாற்றம், நுண்ணுயிர் கிருமியினால் காற்றில் பரவுதல் போன்றவற்றிற்கு ஸர்ப கிரகங்களே காரகர் ஆவர். மேலும் ஒருவரின் கர்ம வினைகளை ஜாதகத்தில் தெரிவித்து அதை அனுபவிக்க செய்பவர்களும் இவர்களே!
மங்கலான பார்வை
ராகு பகை ராசியான மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசியில் நின்று இருந்தால், மங்கலான பார்வை, என்ன நோய் என்று இனம் காண முடியாத அளவில் நோய்கள் வரக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். தந்தை வம்ச வழி நோய்கள் வரக்கூடும். கண்களில் தூசி, துரும்பு பட்டு கண்ணீர் கசிய வைப்பது ராகுவே. மங்கலான பார்வைத் திறன், மருத்துவர்களால் அறியப்படாத புதுவகையான நோய்கள், காற்றில் பரவி வரும் நோய்கள், துஷ்ட கனவுகள், நமது உடலில் பித்த நீர் உற்பத்தியாக வைப்பது போன்ற வேலைகளை ராகு பகவான் தான் செய்கிறார். ராகு தனது பகை கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாயுடன் இணைந்து இருந்தால், ஜாதகருக்கு கண் பார்வை கோளாறு இருக்கலாம். தண்ணீரில் கண்டம் உருவாகலாம். இடி, மின்னல், மின்சாரம் மூலம் பாதிப்பு வரலாம்.
மரணபயம்
ராகு பகை கிரகமான சூரியன், சந்திரன், செவ்வாய், ஆகிய கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகர் கெட்ட பழக்க வழக்கத்தால் பல நோய்களை தேடிக் கொள்வார்கள். தனக்குரிய நோய்கள் பற்றி சிறிதும் அக்கறை காட்ட மாட்டார். இவர்களுக்கு பெரும்பாலும் மரண பயமே பாதி நோய்க்கு வழி வகுக்கும். ராகு நீச்ச ராசியான ரிஷப ராசியில் ராகு நின்று இருந்தால், சுவாசக் கோளாறு அவ்வப்போது வரும். விஷ வாயு தாக்கலாம். பீடி, சிகரெட் குடிப்பதால் வரக்கூடிய புற்றுநோய்களுக்கு ராகுவே காரணம்.
உணவே நஞ்சு
ராகு குரூரர் தன்மை கொண்ட கிரகம் என்பதால் 6, 8,12ல் மறைவு பெற்றால் அதிர்ஷ்டம் தரும், அதே நேரம் எட்டாம் இடத்தில் நின்றால் நெஞ்சில் கபம் கட்டும். இதன் மூலம் சுவாசம் தடைபடும். உண்ணும் உணவு நஞ்சு ஆகும். சிலருக்கு விந்து பாதிக்கும். விந்து உற்பத்தி ஆகி செல்லும் குழாய்களில் அடைப்புகள் உருவாகும். தீராத காம இச்சை உடையவர்களாக இருப்பர். ராகு கிரகத்திற்கு பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதிகள் பார்வை இருந்தால், ஜாதகருக்கு நோய் பயம் வாட்டி எடுக்கும். காற்றில் பரவும் தொற்று நோய்கள் தாக்கக் கூடும். அடிக்கடி மூச்சு திணறல் உண்டாகும். பெரு குடல், சிறுகுடல் வழியாக வாயுத் தொல்லை இருக்கக் கூடும். இதனால் மலச்சிக்கல் உண்டாகும்.
விஷ வாயு பாதிப்பு
மாந்திரீகம், தாந்திரீகம், மாய மந்திரங்களால் உண்டாகும் கெடுதல், மருத்துவ பரிசோதனையில் கண்களுக்கு புலப்படாத நோய்களை வெளிக்காட்டி கொடுப்பது, விஷவாயு, ரசாயன வாயு, செப்டிக் டேங்க் வாயு, கிணறு வெட்டும் போது வெளிப்படும் விஷ வாயு மூலம் உண்டாகும் பாதிப்புகள், கடல் அலைகளில் சிக்கி மூழ்கி இறப்பது, ஒரு வருக்கு வந்த கொடிய நோயானது தொற்றாக பரவுவது, பட்டாசு போன்ற ஆயுத கிடங்கு, துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைக்காரணமாக உண்டாகும் விபத்துகள், எதிர்பாராத விதமாக வாந்தி, மயக்கம், மூச்சு விடுதலில் சிரமம் போன்றவைகளுக்கு காரணமாக இருப்பவர் ராகு தான். நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் புற்றுள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று பாலபிஷேகம் செய்து வணங்கலாம்.