அம்மா நல்லா இருக்க ஜாதகத்தில் சந்திரன் நல்லா இருக்கணும் - பரிகாரமும் இருக்கு!
மாதா, பிதா, குரு தெய்வம் என்று கூறுவார்கள். அம்மாவிற்காக அன்னையர் தினம் கொண்டாடி பலரும் சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் போட்ட இந்த நேரத்தில் ஜோதிடத்தில் அம்மாவிற்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அ
சென்னை: நமக்காக இரவும் பகலும் உழைக்கும் அம்மாவிற்கு தினம் தினம் விழா எடுக்கலாம். அதை விடுத்து மே மாதம் 2வது ஞாயிறு அன்று ஒரு நாள் மட்டுமே அன்னையர் தினம் கொண்டாடி வருகின்றனர். திங்கட்கிழமையான இன்று ஜோதிடத்தில் சந்திரனுக்கும் அம்மாவிற்கும் உள்ள தொடர்பு, பிள்ளைகளுக்கும் அம்மாவிற்கும் ஏற்படும் உறவு பற்றி அறிந்து கொள்வோம்.
மாத்ரு காரகன், மனோ காரகன் என்றெல்லாம் ஜோதிடத்தில் சிறப்பிடம் பெற்ற நவக்ரஹ நாயகர்களில் ஒருவரான சந்திரன் மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாக கூறுகின்றனர். காலபுருஷனுக்கு 4வது வீடான கடகம் சந்திரனுக்கு ஆட்சி வீடு. ரிஷபத்தில் உச்சமடையும் சந்திரன், விருச்சிகத்தில் நீசமடைகிறார். சந்திரனுக்கும் அம்மாவிற்கும், 4வது வீட்டிற்கும், அம்மாவிற்கும் உள்ள தொடர்பு இதன் மூலம் அறியலாம்.
ஜாதகத்தில் நான்காம் வீடு பற்றி தாயார், தாய்வழி உறவுகள், பிறந்த இடம், வாழ்விடம், வசிப்பிடம், குடும்ப வரலாறு, வீட்டில் இன்பம், உறவுகளுடன் உள்ள பந்தபாசம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த வீட்டில் இருந்து அறியப்படுகிறது. நாலாவது இடம் தாய்க்கு மட்டுமல்ல. இந்த இடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள், பார்க்கும் கிரகங்களைப் பொறுத்து தாயின் உடல்நிலை, உறவு நிலை எப்படி அமையும் என்று பார்க்கலாம். இந்த பாவம் கெட்டா தாய் நோய் வாய்படலாம்.
தாய் நலமோடு இருக்க
ஒரு குழந்தை வளர்ந்து ஆளாகின்ற வரை, அதாவது பதினான்கு வயது வரை தாய் முக்கியம். பெண் குழந்தையாக இருந்தால் அதி முக்கியம். அதனால்தான் முதல் கேந்திர வீடாக தாய் வீடு அமைந்துள்ளது. குழந்தைப் பருவம் எந்த பிரச்சினையும் இன்றி நன்றாக இருக்க வேண்டும் என்றால் நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும். லக்னத்திற்கு நான்காம் பாவதிபதி பாவிகள் மற்றும் 6,8,12 அதிபதிகள் பார்வை சேர்க்கை இல்லாமல் அமைந்திருக்க வேண்டும். ஆட்சி, உச்சம், நட்பு என்ற வகையில் வலுவாக இருக்க வேண்டும்.
வலுவான சந்திரன்
ஜோதிடத்தில் தாயை குறிக்கும் கிரகம் சந்திரனாகும். நாலாம் வீடு தாய்ஸ்தானம் என போற்றப்படுகிறது. காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகமும் அதன் அதிபதியான சந்திரனும் தாயைபற்றி கூறும் கிரக அமைப்பாகும். ஒருவரது தாயாரின் உறவு மற்றும் நிலை நன்றாக அமைய வேண்டுமானால் சந்திரன் வலுவாக இருக்க வேண்டும். சந்திரன் பகை வீட்டிலோ அல்லது பாவிகளுடனோ 6,8,12 ஆமதிபதிகளுடனோ தொடர்பில் இருக்கக்கூடாது.
சந்திரன் நீசமடைந்திருக்கக்கூடாது. அப்படி நீசமடைந்தாலும் நீசம் பங்கமடைந்திருக்க வேண்டியது அவசியம்.
அம்மாவிற்கு சந்திரன்
சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது. 2ல் சந்திரன் செல்வம் தருவார். நல்ல கல்வி கிடைக்கும். 3ல் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். 4ல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.5ல் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பெண் குழந்தைகளே பிறக்கும். 6ல் சந்திரன் இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்பவர். 9 உள்ள சந்திரனால் அம்மாவின் அரவணைப்பு இருக்கும்.10ல் உள்ள நல்ல செல்வ வளம் தருவார். 11ல் உள்ள சந்திரன் மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை தருவார். 12ல் உள்ள சந்திரனால் கண்ணில் பிரச்சினை ஏற்படும், செலவு கூடும்.
கிரகங்களின் வட்டணி
நான்கில் சந்திரன் இருக்க, அந்த வீட்டைத் தீய கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் தன் தாயைச் சின்ன வயதில் பறிகொடுக்க நேரிடும். நான்கில் தீய கிரகங்கள் வந்தமர்ந்தும், நான்காம் அதிபதி வேறு தீயகிரகங்களுடன் கூட்டணி போட்டும் இருந்தால் ஜாதகனுக்கு நல்ல உறவுகளும், நண்பர்களும் இருக்கமாட்டார்கள். ஜாதகனின் வாழ்க்கை பிரச்சினைகள் உரியதாக இருக்கும். நான்காம் அதிபதி லக்கினத்தில் இருந்தாலும், அல்லது 7லில் அமர்ந்து லக்கினத்தைப் பார்த்தாலும் ஜாதகனுக்கு சிரமங்களின்றி வீடு அமையும்.
திருப்பதி பயணம்
இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரனின் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனதிற்கு நிம்மதி உண்டாகிறது. கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும். அம்மா உடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும்.
திங்கட்கிழமை தரிசனம்
சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு திங்கள் கிழமை திருப்பதி சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும். இதே போல சந்திரஸ்தலமான திங்களுர், குணசீலம் போன்ற கோயில்களுக்கு சென்று வணங்கலாம். திருச்சி மலைகோட்டை தாயுமானஸ்வாமியை முக்கிய தினங்களிலும் சந்திரன் ஆதிக்கம் பெற்ற தினங்களிலும் தரிசிக்கலாம்.