அஷ்டம சனி, ஏழரை சனி நடக்குதா கடன் வாங்காதீங்க - பரிகாரம் பண்ணுங்க
கடனில் வாழ்க்கை கழிகிறதா? கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வரமாட்டேங்குதா? அதற்கு என்ன பிரச்சினை என்று பார்த்து அதற்கேற்ப பரிகாரம் பண்ணுங்க. கடன் அடையும் கொடுத்த கடனும் திரும்ப வரும்.
சென்னை: இன்றைக்கு கடன் வாங்காதவர்கள் யாரும் இல்லை. கடன் வாங்கக் கூடாது என்று நினைத்தாலும் போனில் தொந்தரவு செய்தாவது கடனை நம் தலையில் கட்டி விடுகிறார்கள். ஒருவருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கும் போது, அர்த்தாஷ்டம சனி நடக்கும் போதும் கடன் வாங்கக் கூடாது. அதே போல கோச்சார ரீதியாக குரு ஆறாம் வீட்டில் நிற்கும் போதும் குரு பகவான் சர்ப்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போதும் கடன் வாங்கவே வாங்காதீங்க.
வாங்கிய கடன் அடையவும், கொடுத்த பணம் திரும்ப வரவும் பரிகாரம் உள்ளது.
கஷ்டம் என்று பணம் கடனாகக் கேட்டால் தங்களின் சேமிப்பில் இருந்து முடிந்த அளவு பணத்தை புரட்டி கொடுப்பார்கள். ஆனால் கடன் வாங்கியவர்களோ, சில நாட்களிலேயே கடன் கொடுத்தவரை பற்றியும், வாங்கிய கடன் தொகை பற்றியும் முழுமையாக மறந்து விடுவார்கள்.
பணம் கொடுத்தவர் பாடு படு கஷ்டமாகிவிடும். நம் வாழ்வில் சந்திக்காமல் இருப்பதற்கு சிறந்த வழி பிறருக்கு கடன் கொடுக்காமல் இருப்பது தான். அதே போல ஒரு சிலரின் வாழ்க்கை கடனிலேயே கழியும் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை கடனுக்கும் வட்டி கட்டவுமே செலவு செய்வார்கள். இது எதனால் நடக்கிறது என்று பார்க்கலாம்.
ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும்.
ஜாதகப்படி லக்னாதிபதி 6ம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து திசை கூடவே புத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு வழக்கு கடன் தொல்லைகள் ஏற்பட்டு வாழ்கையில் நிம்மதி சீர்குலையும்.
கடன் வாங்காமல் இருக்கவும், அந்த கடனை உடனே அடைக்கவும் சில பரிகாரம் உள்ளது. அதே போல கடன் கொடுத்து, அந்த கடன் தொகை தங்களுக்கு திரும்ப வராமல் தவிக்கும் நபர்கள் சில பரிகாரங்களை செய்வதால் மிக விரைவிலேயே அவர்கள் கொடுத்த பணம் அவர்களுக்கே திரும்ப கிடைக்கச் செய்யும்.
பணம் திரும்ப வரும் பரிகாரம்
கொடுத்த பணம் திரும்ப கைக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் கல் உப்பு, வெந்தையம், கருப்பு எள் மூன்றையும் நன்றாக மிக்சியில் அரைத்து பொடி செய்து அதை தூய்மையான வெள்ளைத்துணியில் கட்டிஅதை கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். பணம் திரும்ப வரும்.
மிளகு தீபம்
வாராக் கடனை நம்மிடம் மீண்டும் வரச் செய்யும் ஆற்றல் கொண்ட தெய்வமாக பைரவ மூர்த்தி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலில் இருக்கும் பைரவர் சந்நிதிக்குச் சென்று, சிறிதளவு தூய்மையான வெள்ளைத் துணியில் 27 கருப்பு மிளகுகளை போட்டு முடிந்து, ஒரு மண் அகல் விளக்கில் அந்த முடிச்சை திரியாக வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். தீபம் ஏற்றிய பிறகு அந்த தீபத்தை சுற்றி குங்குமத்தை போட வேண்டும். இந்த வழிபாட்டை மூன்று வாரங்களுக்கு செய்து வர நீங்கள் பிறருக்கு கொடுத்த பணம், பிறர் உங்களை ஏமாற்றி கடனாக வாங்கிய பணம் ஆகிய அனைத்தும் மீண்டும் உங்களிடம் வந்து சேரும்.
கடனே வாழ்க்கை
ஜாதகத்தில் லக்னாதிபதி 6ம் வீட்டிலும் 6ம் வீட்டின் அதிபதி லக்னத்திலும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்தாலும் அவர்களுக்கு கடன் பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும். ஜெனன ஜாதகத்தில் இரண்டாம் பாவாதிபதி ஆறாம் வீட்டில் நின்றால் அவருடைய வாழ்க்கை கடனிலேயே கழியும். ஆறாம் பாவாதிபதி லக்னத்தில் நின்றால் ஜாதகர் கேட்காமலே கடனை கொடுத்து கடனாளியாக்கிடுவர்.
ஜாமீன் போடாதீங்க
லக்னாதிபதி பலமற்ற நிலையில் இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி 6ம் இடத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடனுக்கு வட்டி கட்டியே வீணாகும். இவர் யாருக்கும் கடன் ஜாமீன் போடக்கூடாது. மீறி வாக்குறுதி கொடுத்தால் அந்த கடன் இவர்தான் கட்ட வேண்டியிருக்கும்.
கடன் வாங்கவே வாங்கதீங்க
ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்க கூடாது. குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார். குரு ஸர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்க்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடனை அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது. இன்னும் சில மாதங்களில் குரு கேது உடன் இணையப்போகிறார் எனவே இன்னும் ஒரு வருடத்திற்கு எந்த கடனையும் வாங்காதீர்கள்.
கடன் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம்
ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்தது. மைத்ர முகூர்த்த நாளில் கடனை அடைக்க கடன் பிரச்சினை தீரும். செப்டம்பரில் கடன் அடைக்க நல்ல நாட்கள் 5.9.2019 வியாழன் காலை 10.48 முதல் 12.48 வரை. 17.9.2019 செவ்வாய் இரவு 8.04 முதல் 10.04 வரை கடன் பணத்தை திரும்ப தரலாம்.
சனியை சரணடையுங்கள்
எந்த காரணத்திற்க்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனைஸ்வர பகவானின் அருள் தேவை. அவர் அனுக்ரகம் செய்தால்தான் கடன் அடைக்கமுடியும். கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனீஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். அவ்வப்போது திருநள்ளாறு, குச்சனூர், சனிசிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு எனும் ஸ்தலம் ஆகிய ஒன்றிற்கு அவ்வபோது சென்று வரவேண்டும். மேலும் சனைஸ்வர பகவானுக்கு பிரியமான பித்ரு காரியங்களை சரிவர செய்யவேண்டும். சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். சென்னையில் உள்ள நவக்கிரகக் கோவில்களுள் சனிபகவான் அம்சத்துக்குரிய கோவிலாக விளங்குகிறது. அகஸ்தியர் பல வருடங்கள் பூஜித்த லிங்கம் இத்தலத்தில் உள்ளது.
லட்சுமி நரசிம்மர்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது திருச்சேறை உடையார் கோவில். இங்கு தனி சந்நதியில் ருண விமோச்சனராய் அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். இது கடன் நிவர்த்தி ஆகும் திருத்தலம் ஆகும். வறுமையை நீக்கி செம்மையான வாழ்வளிக்கும் இறைவன், கடன் நிவர்த்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும்.